Monday, September 14, 2015

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 16
மேஷ் வீடு. காலை மணி ஒன்பது.
வாசலில் ஷேமியானா. நாலைந்து நாற்காலிகள் காலியாய். ஒண்ணு ரெண்டு நாற்காலிகளில் ஆட்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்
வீட்டின் உள்ளே அவன் தந்தை மாலையெல்லாம் போட்டு நடுக் கூடத்தில் கண்ணாடிப பெட்டிக்குள் கிடத்தப்பட்டு இருக்கிறார். உறவினர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். அமைதியான அமைதி.
ரமேஷின் அண்ணன் தினகரன் ஒரு பக்கமாக சேரில் கண் சிவக்க உட்கார்ந்திருக்கிறான். குடித்திருக்கிறான் என அவனைப் பார்த்தாலே தெரிகிறது. சட்டை காலர் நெகிழ்ந்து கிடக்கிறது. சற்று பின்பக்கமாக விரைத்து அமர்ந்திருக்கிறான். யார் கிட்ட வந்தாலும் கடித்துக் குதறி விடும் ஆவேச வெறி.
பிணத்தை எடுத்துப் போக எல்லாம் தயார் நிலையில். வாசலில் பல்லக்கு நிற்கிறது. ஓதுவார் தயாராய் இருக்கிறார். “யார் காரியம்லாம் பண்ணணும்?“ என ஓதுவார் ரமேஷைக் கேட்கிறார். ரமேஷ் ரொம்ப கவலையுடன் இருக்கிறான். அண்ணனைக் கை காட்டுகிறான்.
“தம்பி, வரீங்களா, ஆரம்பிக்கலாமா?“ என அவர் அண்ணனைப் பார்த்துக் கேட்கிறார்.
“யார் நீ?“ என அண்ணன் எழுந்து நிற்கிறான் கோபமாய். நிற்க முடியவில்லை. தள்ளாடுகிறது. அண்ணனின் மனைவி அவசர அவசரமாக வந்து அவனைத் தாங்குகிறாள். “நீ போடி. நான் பாத்துக்கறேன்…“ என அவளை எகிறுகிறான் தினகரன்.
“ரெண்டும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. ஜாடிக்கு மூடின்றா மாதிரி“ என யாரோ சொல்கிறார்கள்.
ரமேஷ் ஓடி வருகிறான். “அவர் ஓதுவார் அண்ணா. அவர்தான் எல்லாம் நடத்தித் தரணும்…“
“டேய் நம்ப அப்பன் எனக்காக இதுவரை சல்லிக்காசு செலவழிச்சது இல்லை…“
“ஆனால் இவனா திருடினது லட்ச லட்சமா…“ என ஒரு பெண் கூட்டத்தில் சொல்லியபடி கன்னத்தில் கை வைக்கிறாள். “தகராறு வலிக்கணும்னு எப்பிடி நிக்கிறான் பார்டி இவன்.“
“தென்னையைப் பெத்தா இளநீரு. பிள்ளையப் பெத்தா கண்ணீருன்னு பேரியவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க.“
“எந்த ஆஸ்பத்திரில பிரசவத்தில் தென்னை எவளுக்குப் பிறந்ததோ தெரியல“ என்கிறாள் ஒருத்தி. மத்தவள். “ச்சீ இழவு வீடுடி. சிரிப்புக் காட்டாதே“ என வாயைப் பொத்திக் கொள்கிறாள்.
‘அப்பா இருக்கும் கண்ணாடிப் பெட்டியைக் காட்டுகிறான் தினகரன். “இந்தாளு சாக மாட்டாம இது வரை மருந்துக்கு அதுக்கு இதுக்குன்னு எனக்குச் செலவு வெச்சான். இப்ப செத்தும் செலவு வைக்கிறான்…“
“ஒரு ஆஸ்பத்திரிக்கும் போக விடல்ல. வீட்லயும் டாக்டரை வரவழைக்கல்ல. தம்பியையும் அப்பாவை வெளியே கொண்டு வெச்சிப் பாத்துக்க விடல்ல இவன்… என்ன திட்டம் வெச்சிருந்தானோ?“ என்கிறாள் அந்த முதல் பெண்.
“அதெல்லாம் எதுக்கு அண்ணா. இப்ப அப்பா காரியத்தை நாம நல்லபடியா முடிப்பம்…“
“ஏண்டா சொல்ல மாட்டே? என்னை அவன் நடத்தின கூத்துக்கு… உன்னைப் படிக்க வெச்சான். நல்ல வேலைல உக்காத்தி வெச்சான். என்னை? என்னை என்ன படிக்க வெச்சான்?...“
“நீ படிக்கல அண்ணா. அப்பா என்ன செய்வாரு?“
“சரி. எனக்குப் படிப்பு வரல்ல இல்லே? அப்ப கை வெலை, சொந்தத் தொழில்னு எங்கியாவது என்னை ஏற்பாடு பண்ணி விடணும் இல்லே?“
“கொடுத்த காசை யெல்லாம் நீ சீட்டாடினே… தண்…“ என்றவன் அப்படியே நிறுத்துகிறான். “வாண்ணா. இன்னிக்கு  ஒரு பொழுது உன் கைல தான் இருக்கு. எல்லாரும் காத்திட்டிருக்காங்க…“
“அட போடா. எனக்கு இவன் பண்ணின கொடுமைக்கு, நான் இவனுக்குத் தான் பொறந்தேனான்னு இருக்கு…. த்தூ“ என்று பக்கத்தில் துப்புகிறான்.
“ஐயோ செத்துப் போனவங்களைப் பத்தி அப்படியெல்லாம் பேசாதீங்க“ என்கிறார் ஓதுவார்.
“வாய்யா. தர்மபுத்திரனுக்குத் தத்துப் பிளளையா நீயி? இந்த மனுசன் இருக்கற வரை என்னா கொடச்சல் குடுத்தான் தெரியுமா உனக்கு? காசு விஷயத்துல மகா கெட்டி. துட்டை எல்லாம் பெட்டிக்குள்ள வெச்சிப் பூட்டிக்கிட்டு, சாவியைத் தலையணைக்கு அடியில வெச்சித் தூங்கின மனுசன்…“
தினகரன் தள்ளாடுகிறான். ரமேஷ் அவனது நெகிழ்ந்த வேட்டியைக் கட்டி விடுகிறான். “இப்ப அதெல்லாம் எதுக்கு அண்ணா. அப்பா காலம் முடிஞ்சது. அவரை நல்லபடியா கரை சேக்கறது நம்ம கடமை இல்லியா?“
“கடமையா? யாருக்குடா? என்னைக் கடைசிவரை அவன் தன் புள்ளையாவே மதிக்கவே இல்லியேடா? ஒரு அப்பனா அவர் என்னை மேல தூக்கி விடவே இல்லியேடா? அவருக்குக் கடமை இல்லியா? அதைச் செஞ்சாரா அவரு?“ நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான். “அதெல்லாம் எனக்கு மறக்குமா?“
“ரொம்ப ஆக்டிங் குடுக்கறானே? இதெல்லாம் எதுக்கோ தெரியலியே“ என்கிறார் கூட்டத்தில் ஒருவர்.
“உனக்கு என்னதான் வேணும் அண்ணா?“
“அப்பிடிக் கேளு. தம்பி. அப்பா இருக்கும் போதே… இந்த வீடு இருக்குதே, அதுக்கு நல்ல கிரயம் வந்தது.“
“வீட்டை விக்கறதா?“
“அக்ஹ்“ சிரிக்கிறான். “நாம ரெண்டு பேருக்கு எதுக்கு இத்தனாம் பெரிய வீடு தம்பி? அதும் நீ தனிக்கட்டை. எனக்குதான் பொண்ணு பெறந்து வளர்ந்து பள்ளிக் கூடம் போகுது. இனி அது காலேஜ் போணும். அதை நான் கட்டிக் குடுக்கணும்…“
“அதான். நான் சொல்லல? மனசுல என்னமோ வெச்சிக்கிட்டு தான் பேசறான் இதெல்லாம்….“ என ஆண்கள் கூட்டத்தில் சலசலப்பு.
“அப்பா இருக்கறவரை அவர் கிட்ட ஆன மட்டும் சொல்லிப் பார்த்தேன். அவர் காதுல போட்டுக்கவே இல்லை. மனுசன் அப்படியே சாதிச்சி மண்டையப் போட்டுட்டான். அட பத்திரத்தையே காணல்ல. எங்க வெச்சிருக்கானோ… இந்தாளை நம்பி நான் அட்வான்சு வாங்கிட்டேன்…“
“அட்வான்சா?“
“‘பொய்யாய் இருக்கும்…“ என்று கிசுகிசுப்பு கிளம்புகிறது. “பத்திரமும் இல்லை. இவன் பேச்சை நம்பி ஆரு அட்வான்சு குடுப்பா?“
“அப்பன் காலம் முடிஞ்சது. இப்ப பிரச்னை உனக்கும் எனக்கும் தான்… கேட்டியா?“ தினகரன் திரும்பி யாரையோ கூப்பிடுகிறான். “கேசவா?“ யாரோ “அண்ணே?“ என ஓடி வருகிறான்.
“அட இவனா? இவன் கூட சீட்டு கீடடு ஆடியிருப்பானோ?“
“வீட்டை வெச்சே கூட ஆடுவாம்ப்பா இவன். எமகாதகப் பயல்…“
“தபார். இதுல ஒரு கையெழுத்துப் போடு…“
“என்ன இது?“
“இந்தச் சொத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு எழுதிக் குடு.“
“ஐயோ போடாதே. இவனை நம்பவே கூடாது நீ“ என அப்பாவின் தம்பி வந்து மறிக்கிறார். தினகரனைப் பார்த்து “எல்லாம் எங்க அண்ணன் சுய சம்பாத்தியம்டா. அதை அழிக்கன்னே நீ பாவ வித்தா வந்து பொறந்திருக்கே…“
“வாங்கடா எல்லாரும்… செத்த வீட்டுக்கு வந்தால், வந்தமா அழுதமா இழவுச் சோத்தைத் தின்னமான்னு கிளம்பிறணும். பஞ்சாயத்து கிஞ்சாயத்து வெச்கிக்காதீங்க.“
“உன் கையில சோறு வாங்கி மனுசன் திம்பானா. பெத்த அப்பன் சாவுல கலாட்டா பண்ணிக்கிட்டு நிக்கறே? தம்பி நீ கையெழுத்துப் போடாதே.“ சித்தப்பா தினகரன் பக்கம் திரும்புகிறார். “கையெழுத்து போடாட்டி?“ என்கிறார்.
“அப்பன் இங்கயே இப்பிடியே நாறிக்கினு கெடக்க வேண்டிதான்…“ என்று இளிக்கிறான் தினகரன்.
சித்தப்பா ரமேஷ் பக்கம் திரும்புகிறார். “டேய் இவன் சரிப்பட்டு வராட்டி பரவால்ல… நீயே கொள்ளி வெய்யி அப்பாவுக்கு.“
“அதெப்பிடி? மூத்த பிள்ளை நான் இருக்கறச்ச, அப்பிடி என்னைத் தாண்டி எடுத்திட்டுப் போவீங்களா?“
“என்னடா கழுதைப் பிறவியா இருக்கே? முன்னாடி போனா முட்டும் பின்னாடி போனா எத்தும்ன்ற கதையா…“
ரமேஷ் அழுதபடியே “அதெல்லாம் அப்பறமாப் பேசிக்கலாம் அண்ணா. மொத்ல்ல…“
“ஆகா, நான் என்ன விரல் சப்பற பப்பான்னு நினைச்சியாக்கும்? பார்ட்டி ரெடியா இருக்கு. ம்…“ என காகிதத்தை நீட்டுகிறான்.
“அவனுக்கு அப்பன் தேவை இல்லை.அப்பனோட பணம் மட்டும் வேணும் பாரேன்“  என்கிறாள் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி.
அதற்குள் இழவு மேளம் வருகிறது. கடகடவென்று அவர்கள்  தப்பு அடிக்க ஆரம்பிக்கிறார்கள். “ஏய் நிறுத்து நிறுத்து“ என எரிச்சலில் கத்துகிறான் தினகரன். “என்ன தம்பி சொல்றே?“
ரமேஷ் மௌனமாய் நிற்கிறான்.
“இவங்க இருக்காங்கன்னு பாக்காதே. எல்லாரும் சோத்துக்கு வந்த பசங்க. வக்கணையாப் பேசிட்டு நாளைக்கு பஸ் பிடிச்சி ஓடிருவாங்க.“
“உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் காணாது அண்ணா. அப்பாவோட எல்லா சொத்தையும் அவர் கையெழுத்தையே கள்ளக் கையெழுத்தாப் போட்டு நீ அழிச்சிட்டே. இப்ப அப்பாஞாபகமா மீதி இருக்கறது இது ஒண்ணுதான்…“
“இந்த வீட்டுப் பத்திரம் தான் என் கைக்குக் கிடைக்கல்ல. ச்சே“ என்கிறான் தினகரன். தம்பி பக்கம் திரும்புகிறான். “அட போடா. அப்பனே போயிட்டான். அப்பாஞாபகமாகவது வெங்காயமாவது? உங்க அப்பனை… கைல வெச்சிருக்கியே செல் ஃபோன். அதுல க்ளிக் – ஒரு ஃபோட்டோ எடு. கைல வெச்சிக்கோ. அவ்ளதான். அப்பாஞாபகம்னு இத்தனாம் பெரிய வூட்டை எடுத்துப் பையில வெச்சிக்கப் போறியா?“ என்று தன் சட்டைப் பையில் வைத்துக் கொள்வது போலக் காட்டுகிறான். அந்தக் கேசவன் சிரிக்கிறான்.
ரமேஷ் மௌனமாக நிற்கிறான். “நாழியாறது“ என்கிறார் ஓதுவார்.
“உனக்கு என்னய்யா? எவ்வளவு நேரம் இருக்கியோ துட்டு கேட்டு வாங்கிக்கப் போறே…“
ரமேஷ் தினகரனின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.
“அண்ணா சீக்கிரம்…“
“கையெழுத்து...“
“முடியாது.“
“கிழவன் அழுகி நாறட்டும்… சனிப் பிறவி வாழும் போது தான் என்னைக் கழுத்தறுத்தான். செத்தும் கொடுத்தான் சீதக்காதிம்பாங்க. செத்தும் கெடுத்தான். எங்கப்பன்.“
அப்போது ராமசாமியும் சிகாமணியும் உள்ளே நுழைகிறார்கள். நிலவரம் பார்த்ததுமே ராமசாமிக்கு தினகரன் கலாட்டா செய்கிறான் என்று விளங்கி விட்டது.
அவனைப் பார்க்க ரமேஷ் ஓடிவருகிறான். “வா ராமு…“
“என்ன உங்க அண்ணன் கலாட்டா பண்றானா?“
“ஆமாம். வீட்டை விக்க ஏற்கனவே சொல்லி வெச்சிருக்கான் போல.“
“ஐயோ.“
“அப்பா இருக்கும் போதே அவரை மிரட்டி கையெழுத்துப் போட வெச்சிறணும்னு பாத்தான் போல இருக்கு. அது நடக்கல்ல. பத்திரமும் கெடைக்கல்ல.“
“பத்திரம் எங்க தெரியுமா?“
“தெரியல. அப்பா அதை ரகசியமா வெச்சிருக்கார் எங்கியோ.“
“எனக்குத் தெரியும்“ என்கிறான் ராமசாமி
மனசில் பழைய காட்சி ஒன்று. ரமேஷ் அப்பாவை வீடு வரை பேசிக்கொண்டே கொண்டு விடும் காட்சி வருகிறது.
“அத்தான் இந்த சீன்ல நீங்கதான் ஹீரோ போல இருக்கு…“ என்கிறான் சிகாமணி சிரித்தபடி.
“உனக்கு எப்பிடித் தெரியும்?“ என்று ரமேஷ் அவனைக் கேட்கிறான். “பத்திரம் உன்கிட்ட இருக்கா?“
“இல்லை. அது இருக்கற இடம் இப்ப தெரிஞ்சிரும். இப்ப என்ன நிலைமை இங்க?“
“அப்பா காலமும் ஆயிட்டது. என்னைக் கையெழுத்துப் போடுன்னு மிரட்டறான்…“
“எதுக்கு?“
“வீட்டை விக்கப் போறானாம். எனக்கு இந்த வீடு சம்பந்தம் இல்லைன்னு எழுதிக் கேட்கிறான்…“
“போட்டுட்டியா?“
“இல்லை.“
“நல்லவேளை“ என்கிறான் ராமசாமி. “அட்வகேட் முரளியை வரச் சொல்லியிருக்கேன். இப்ப வந்திருவார்…“
“அட்வகேட்டா? எதுக்கு?“
“அவர் வந்தால் உங்க அண்ணன் கொட்டம் அப்படியே அடங்கிரும்.“
“என்ன சொல்றே?“ என்கிறான் ரமேஷ். “பொறு பையா பொறு“ என்கிறான் ராமசாமி. அப்போது வாசலில் கார் ஒன்று வந்து நிற்கிறது. அதில் இருந்து அட்வகேட் இறங்குகிறார்.
“செம சீன் அத்தான்“ என்கிறான் சிகாமணி. “யார் இவரு?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“இப்ப பார் வேடிக்கையை…“ என ராமசாமி சிகாமணியிடம் சொல்கிறான். “சினிமா மாதிரி இருக்கு அத்தான்.“
முரளி கூட ஒரு உதவியாளரும் வருகிறார். “இங்க யார் தினகரன்?“
“யார் நீங்க? கருப்பு கவுன்? ஓ சாவுக்குன்னு துக்கமா வந்திருக்கீங்களா?“ என்கிறான் தினகரன். “ஐம் அட்வகேட் முரளி.“
“நாங்க வீட்டை விக்க வேற லாயர் வெச்சிருக்கோம் . என்ன கேசவா?“
“இவர் வேண்டாம் சார். இவர் பார்வையே சரி இல்லை. ஃபிராடு மாதிரித் தெரியுது.“
“யாரு நாங்களா?“ என்று கோபப் படுகிறார் முரளி. “சங்கர், அந்த உயிலை அவர்கிட்ட குடுங்க.“
“உயிலா? டேய் இவர் என்னவோ சொல்றார்றா?“ என சட்டென விரைப்பாகிறான் தினகரன். அவனுக்கு போதையே அடங்கி விட்டது.
சிகாமணி அந்த இழவு மேளகாரனைப் பார்த்து சைகை காட்டுகிறான். கெட்டி மேளம், கெட்டி மேளம் என்பதைப் போல. கடகடவென்று மழை போல சத்த இரைச்சல். “டேய் டேய் நிறுத்து நிறுத்து“ என கத்துகிறான் தினகரன்.
“கிழவன் எம காதகன் போல இருக்குப்பா…“ என்கிறான் கேசவனிடம். ‘அட்வகேட் பக்கம் திரும்பி “இதுல என்ன எழுதியிருக்கு சார்?“
“இந்த வீடு திருவாளர் கல்யாணசுந்தரத்தின் சுய சம்பாத்தியம். அது அவரது முழு விருப்பப்படி தனது இளைய மகன் ரமேஷுக்கே போய்ச் சேர வேண்டும்னு எழுதியிருக்கு.“
கூட்டத்தில் சலசப்பு. இழவு மேளம் வாசிக்கிறார்கள். “யேய் நில்லுங்கடா. ஆ வூன்னா ஆரம்பிச்சிருவீங்க. நீங்க போடற அளப்பரைல செத்தவனே எழுந்துக்குவான் போலருக்கு…“ என்கிறான் தினகரன்.
சித்தப்பா வருகிறார். “சரியான நேரத்தில் வந்தீங்க“ என அவர் முரளியிடம் கை குலுக்குகிறார்.
“சினிமால அதெல்லாம் சரியா வருவாங்க. வந்து இ. பி. கோ. நம்பர்லாங் கூட சொல்லுவாங்க“ என்கிறான் சிகாமணி.
“என் அண்ணன் செஞ்சது சரிதான்.“ சித்தப்பா முரளியிடம் சொல்கிறார். “இருக்கிற சொத்தில் பாதிக்கு மேல் பெரியவன் ஊதாரித்தனத்திலேயே அழிச்சிட்டான். இந்த வீடாவது தம்பிக்குப் போகணும்னு அவன் நினைச்சதுல என்ன தப்பு இருக்குது?“ தினகரனைப் பார்க்கிறார். “இது குடுத்தாலும் அழிச்சிடடு தான் வந்து நிப்பான். இப்பவே விக்க ஏற்பாடு பண்ணினவன் தானே இவன்? பொண்டாட்டிக்கும் குழந்தைக்கும் குடுக்கவா விக்கறான் இவன்?“
திடீரென்று அந்த உயிலை அப்படியே சுக்கு நூறாகக் கிழித்து எறிகிறான் தினகரன். அவன் அதைக் கிழித்து முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார் முரளி. “வேற காபி, ஒரிஜினல், இந்த வீட்டுப் பத்திரம் எல்லாம் எங்கிட்ட லாக்கர்ல பத்திரமா இருக்கு…“ என்கிறார்.
தினகரன் அவரையே பாரக்கிறான். சட்டென திரும்பிப் பார்க்கிறான். கூட இருந்த கேசவன் சட்டென பதுங்கி பம்மி காணாமல் போகிறான்.
“இப்ப என்ன சொல்றீங்க?“ என்கிறான் தினகரன் அட்வகேட்டிடம்.
“நீங்க இனியும் கலாட்டா பண்ணினால் போலிஸ் வரும். வீடு மொத்தமும் அவருக்கு. அப்படித்தான் உயில்ல இருக்கு. “
“சித்தப்பா எங்களை வெளிய அனுப்பிறாதீங்க…“ என தினகரனின் பெண் ரமேஷிடம் வந்து கையைப் பிடித்துக் கொள்கிறாள். அவள் கூட தினகரனின் மனைவி. கண்ணாலேயே இறைஞ்சுகிறாள்.
தினகரனைப் பார்த்து அவன் மனைவி பேசுகிறாள். “இத்தன்னாள் இந்த மனுசன் செஞ்ச அக்கிரமத்தை யெல்லாம் தட்டிக் கேட்கவே ஆள் இல்லாமல் ஆச்சே… சரியாத்தான் சொல்லியிருக்காங்க… ஆனைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வராமலா போயிரும்.“
“டேயப்பா, சட்னு எல்லாரும் எப்படி கட்சி மாறிட்டாங்க…“ என உள்ளங் கையில் குத்திக் கொள்கிறான் தினகரன்.
கூட்டத்தில் ஒரு பெண். “அண்ணன்காரன் சொத்தைப் பிடுங்கிக்கிட்டு தம்பியை வெளிய அனுப்பப் பார்த்தான். இப்ப பார் நிலைமை. அப்படியே உல்ட்டா. தம்பி சொன்னால் அண்ணனே வெளியே போயிற வேண்டிதான்… கடவுள் எல்லாத்தையும் பாத்திட்டே இருக்கான் இல்லே?“
“அட்றா…“ என்கிறார் சித்தப்பா. இழவு மேளம் முழங்குகிறது.
“இப்ப என்ன சொல்றே?“ என்று சித்தப்பா தினகரனைப் பார்க்கிறார். “என்னை வீட்டை விட்டு வெளிய அனுப்பிறாதே ரமேஷ்…“ என்கிறான் தினகரன் சுரத்து அடங்கி. இழவு மேளம் ஒலிக்கிறது. சிறிது மௌனம்.
“மாட்டேன் அண்ணா“ என்கிறான் தம்பி. மீண்டும் இழவு அதிரடிகள் கேட்கின்றன.
“வாங்க. நேரம் ஆச்சி“ என்கிறார் ஓதுவார்.
“ஏன்யா அவசரப் படறே? உமக்கு வேற இழவு தயாரா இருக்கா?“ என்று கேட்கிறான் தினகரன்.
வழியில் ராமசாமியைப் பார்க்கிறான். “நீ வர்ற வரைக்கும் கதை நல்லாப் போயிட்டிருந்தது… எல்லாம் உன் ஏற்பாடு தானா?“ என்கிறான்.
“எல்லாம் உங்க அப்பா ஏற்பாடு“ என்கிறான் ராமசாமி.
அவர்கள் தாண்டிப் போனதும், சிகாமணி “அத்தான். இந்த விஷயம் ரமேஷுக்கே தெரியல்லே. உங்களுக்கு எப்பிடித் தெரிந்தது?“ என்கிறான்.
“அவரே சொன்னாரு.“
“யாரு?“
“ரமேஷ் அப்பா…“
“எப்போ?“
அவன் மனதில் அந்தக் காட்சி வருகிறது – ரமேஷ் அப்பாவும் அவனும் தெருவில் இரவில் நடந்து போகிறார்கள். “அண்ணனை நம்ப முடியல்ல ராமு. னக்கும் வயசாயிட்டு வருது. என் சொத்தை ஒண்ணொண்ணா என் கண் எதிர்லியே இவன் விக்கப் பார்க்கிறான். சில சமயம் கள்ளக் கையெழுத்து போட்டே கூட வித்துர்றான். போலிசுக்குப் போலாம். இவன் ஜெயிலுக்குப் போவானேன்னு இருக்கு. எனக்கும் தானே அது அசிங்கம்… அதுனால…“
ராமசாமி திரும்பி ரமேஷ் அப்பாவைப் பார்க்கிறான். “அதுனால?“
“முரளின்னு ஒரு அட்வகேட். அவரை வரச் சொல்லியிருக்கேன். பேசாமல் இந்த வீட்டை ரமேஷ் பேர்ல எழுதி வெச்சிறப் போறேன். எல்லாம் என் சுய சம்பாத்தியம். தினகரன் ஒண்ணும் செய்ய முடியாது. முன்னாடியே இந்த யோசனை இல்லாமல் போச்சு… இன்னாலும் தினகரன் சட்னு கண்டு பிடிச்சிருவான்… அந்த பயம் வேற. இதை மட்டும் பத்திரத்தையும் குடுத்து உயிலையும் கொடுத்து வைக்கலாம்னு ஒரு யோசனை…“
அப்படியே இருளில் உருவங்கள் கரைகிறாப் போலிருக்கிறது.
“இது எப்ப அத்தான்?“
“நேத்தி.“
“அதாவது ரெண்டு வருஷம் முன்னால?“ என்கிறான் சிகாமணி.
“அதாவது நேத்தி“ என்கிறான் ராமசாமி.
“உங்களை நம்பறதா வேணாமான்னே புரியல்லியே“ என்கிறான் சிகாமணி.
பிணத்தை எடுத்துப் போகும் வண்டியைப் பார்க்கிறார்கள். சப்பரம் அசைகிறது. படபடவென்று வேட்டு சிதறுகிறது. ஒரே புகை மண்டலம்.

அத்தியாயம் 17
பழைய காலம். மேனேஜர் கிருஷ்ணராஜ்.
ரமேஷ் இன்னும் அலுவலகம் வந்திருக்கவில்லை. அந்த இருக்கை காலியாக இருக்கிறது. மேனேஜர் ராமசாமியின் இடத்துக்கு வருகிறார். வந்து சாக்லெட் தருகிறார்.
“அடேடே என்ன சார் விசேஷம்?“
“ஒரு விசேஷமும் இல்லை. இப்பல்லாம் ஹோட்டல்னாலும் கடைன்னாலும் சில்லரை இல்லைன்னா சாக்லெட் எடுத்துக் குடுத்துர்றான். எனக்கு டயபெடிஸ்“ என்கிறார்.
“GOOD THAT YOU REMEMBERED ME SIR“ என்கிறான் ராமசாமி பக்கத்தில் இருக்கும் ராதிகாவைப் பார்த்துக்கொண்டே. “உங்களுக்கு முந்தி நேத்திக்கே எனக்குக் குடுத்துட்டார்“ என்று சிரிக்கிறாள் ராதிகா.
“உன் FIANCY பேசறாரா?“ என்று கேட்கிறார் மேனேஜர். ராதிகா அழகாக வெட்கப்பட்ட படியே தலையாட்டுகிறாள்.
“எப்ப நிச்சயதார்த்தம்? தேதி குறிச்சாச்சா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“ஹா கல்யாண மண்டபமே சொன்னீங்க. நிச்சயதார்த்தத் தேதி உங்களுக்குத் தெரியாதா?“ என்று சிரிக்கிறாள் ராதிகா.
‘‘தேதி தெரியாது. ஆனால் ஹைதராபாத் மாப்பிள்ளை. ஒல்லியா ஒத்த நாடியா இருப்பார். முழுக்கை சட்டையை சின்னதாய் மடித்து விட்டிருப்பார். அதெல்லாம் தெரியும் எனக்கு…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“எப்படி… அவரைப் பார்க்காமலேயே… இத்தனை விவரம் சொல்றீங்க“ என அவள் ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து அழகாக ஆச்சர்யப்படுகிறாள்.
“உண்மையா இல்லியா?“
சரிதான், என்கிறாப் போல அவள் தலையாட்டுகிறாள். “கல்யாணம்னதும் நீங்க எல்லாப் பொண்ணுகளும் தனி அழகா ஆயிடறீங்களே, அது எப்பிடி ராது?“ என்று மேலும் சீண்டுகிறான் ராமசாமி.
அப்போது மேனேஜர் அறையில் அவர் மேசையில் இருக்கும் பூ ஜாடியில் புதிய மலர்களை மாற்றுகிறான் பியூன் ரத்தினம். குனிந்து நின்றாலும் அந்த வாசனை சார்ந்து அவன் முகத்தில் மாற்றம் இல்லை. திடீரென்று நிமிர்கிறான். அப்படியே வாசனையை இழுத்தாப் போல பின்னால் திரும்புகிறான். திரும்பா விட்டாலும் அவனுக்குத் தெரியும். மகா அலுவலகம் வந்தாகி விட்டது.
மஞ்சள் உடையில் ஜொலிக்கிறாள் மகா. கண்ணுக்கு மை தீட்டி. புருவம் வரைந்து. நக பாலிஷ் கூட மஞ்சளாய் அணிந்து கொண்டிருக்கிறாள். தோள்ப் பட்டையில் பட்டாம் பூச்சி டிசைனில் கண்ணாடி ப்ரூச். கனிந்த பலாச் சுளை போலிருக்கிறது அவளைப் பார்க்க.. மேனேஜர் அறையில் ரத்தினம் மஞ்சள் ரோஜாவைத் தான் மாற்றி வைத்திருக்கிறான். அதையும் இவளையும் ஒரு முறை ஒப்பிட்டாப் போல பார்க்கிறான் ரத்தினம்.
“ஹல்லோ“ என்கிறான் ராமசாமி.
“இல்ல. இது எல்லோ“ என்று அழகாய்ச் சிரிக்கிறாள் மகா.
“புடவையின் ஃப்ளீட்ஸ் அசையறப்ப நீ அகாடின் வாத்தியம் மாதிரி இருக்கே“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு நீ ஆபிஸ் லேட்.“
“ஆமாம். வர்ற வழியில் டிராஃபிக் ஜாம்.“
“மகா வர்ற வழின்னா டிராஃபிக் ஜாம் ஆகத்தான் செய்யும்…“ என்கிறான் ராமசாமி. ராதிகாவே சிரிக்கிறாள் அதைக் கேட்டு.
“யு லுக்  ஸோ ச்வீட் அடி கண்மணி“ என்று கிட்டேவந்து அவள் கன்னத்தை ராதிகா கிள்ளுகிறாள். “இதையெல்லாம் எவன் அடக்கி ஆளப் போறானோ?“
பெண்கள் கலகலக்கிறார்கள். மேனேஜரே அறை வாசலில் இருந்து அவர்களை ரசிக்கிறார். பெண்கள் சிரித்தபடி வளைய வரும் இடத்துக்கே தனி அழகு தன்னைப் போல அமைந்து விடுகிறது, என அவர் நினைத்திருக்கலாம்.
“நம்ம மேனேஜரே இப்ப அத்தனை சிடுசிடுப்பா நடந்துக்கறது இல்லை“ என்கிறான் ராமசாமி. “தினப்படி மண்டகப்படி. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது நான் திட்டு வாங்குவேன் அவர்கிட்ட…“
“இப்ப?“
“வீட்ல மாத்திரம் தான் திட்டு வாங்கறான்…“ என்றபடியே உள்ளே ரமேஷ் வருகிறான்.
“என்னடா ஆபிஸ் லேட்?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“டிராஃபிக் ஜாம்“ என்கிறான் ரமேஷ். மூவருமே சிரிக்கிறார்கள்.
“இனிமே நீ மகா வரு முன்னால வந்துறணும். இல்லாட்டி டிராஃபிக் ஜாம் தான்“ என்கிறான் ராமசாமி.
“லாக்கர்…“ என்று யாரோ வந்து மகாவிடம் கேட்கிறார்கள். அவள் மஞ்சள் நகப்பூச்சு பூசிய விரல்களால் நளினமாக ராமசாமியைக் காட்டுகிறாள்.
உள்ளே போகிற போதே ராமசாமி கிண்டல் செய்கிறான். “நீங்க அடிக்கடி வர்ற ஆள்தானே? என்கிட்ட தானே வருவீங்க…“ அந்த நபர் சிரிக்கிறான். “பிறகு அங்க போயி ரொம்ப அவசியமா விசாரிக்கறீங்க?“
அந்த நபர் “கல்யாணம் ஆயிருச்சா?“ என்று கேட்கிறான்.
“ஆயிருச்சி…“
“ஆ“
“என்ன ஆ?“
“பாத்தா தெரியல்லியே.“
“பாத்தா தெரியணுமா?“
“கழுத்துல தாலி இல்லியே?“
“அட ஆம்பளைங்க தாலி கட்டிப்பாங்களா?“
“என்ன சொல்றீங்க? யாருக்குக் கல்யாணம் ஆயிட்டதுன்னீங்க…“
“எனக்கு“ என்றபடி லாக்கரைத் திறந்து விட்டுவிட்டு வெளியே வருகிறான் ராமசாமி.
ரமேஷும் ராமசாமியும் வெளியே நின்றிருக்கிறார்கள். தூரத்தில் மகா. மும்முரமாய் கம்பியூட்டரில் வெண்டைக்காய் போன்ற விரல்களால் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள்.
“இதை அப்படியே வரையணும்னு கை துறுதுறுக்குதுடா“ என்கிறான் ராமசாமி.
“அடேய் ஓவியா, அவ அழகை வர்ணி பார்க்கலாம்…“ என்கிறான் ரமேஷ்.
“சில அழகு கிளர்ச்சி தரும். சில அழகு அப்படியே அள்ளிக்கச் சொல்லும். சில அழகு பயம் தரும்.“
“இவள்?“
“எல்லாருக்கும் பிடிச்சா மாதிரியான இப்பிடி ஒரு அழகு… மகா அபூர்வம் அது.“
“அதுதான் அவ பேரே… மகா!“
இவர்கள் தன்னைத் தான் பார்க்கிறார்கள். தன்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்பது மகாவுக்குத் தெரிகிறது. அங்கேயிருந்து திரும்பிப் பார்த்து கண் மலர கையாட்டிச் சிரிக்கிறாள்.
மதிய உணவு இடைவேளை. எல்லாரும் ஒண்ணாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். மகா வேலை என்று வந்து சேர்ந்ததற்குப் பிறகு, சாப்பிட கூட மேனேஜரும் வந்து விடுகிறார். மகா கை மணமே தனி ருசி, என்று இருக்கிறது எல்லாருக்கும். மகா தன் டிபன் பாக்சில் இருந்து ஸ்பூனால் எடுத்து எல்லாருக்கும் பரிமாறுகிறாள். “பீன்ஸ் பிடிக்குமா?“ என்று மேனேஜரைக் கேட்கிறாள். “நீ உன் கையால பரிமாறினால் பிடிக்காமல் என்ன?“ என்கிறார் மேனேஜர்.
“கிண்டல் பண்ணாதீங்க சார்…“ என அழகாய்ச் சிரிக்கிறாள் மகா. சாப்பிடும் போது புரையேறுகிறது அவருக்கு. சட்டென அப்படியே அவர் தலையில் தட்டுகிறாள் மகா. “யார் நினைச்சிக்கறா? உங்க மனைவியா?“ என மகா சிரிக்கிறாள். “அவகிட்ட உன்னைப் பத்திச் சொல்லிருக்கேன். ஒருநாள் எங்க வீட்டுக்கு வரணும் மகா…“ என்றபடியே அவர் தண்ணீர் குடிக்கிறார்.
“எப்ப உனக்கு பர்த் டே மகா?“ என்று கேட்கிறார் மேனேஜர்.
“அடுத்த மாசம் வருது சார்.“
“அதை விசேஷமாக் கொண்டாடிருவோமா?“ என்று கேட்கிறான் ராமசாமி. எல்லாரும் ஆமோதிக்கிறார்கள்.
“ராது என்ன வெச்சிருக்கே?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“மகா வந்த பிறகு என்னை எங்க கண்டுக்கறீங்க?“ என்று சிரிக்கிறாள் ராதிகா. என்றாலும் அதில் கோபம் இல்லை.
“இல்லம்மா. நீ அடுத்து ஹைதராபாத்துக்குப் போயிருவே… இனிமே மகா தான் எங்களுக்கு ஃப்ரெண்ட். இல்லியா?“
“அடப்பாவி. என்னை வெட்டறாப்ல மகாவைப் பிடிச்சிக்கறே?“ என்கிறாள் ராதிகா. எல்லாரும் சிரிக்கிறார்கள்.
தனியே போய்க் கை கழுவுகிறான் ராமசாமி. பின்னால் காத்திருக்கிறான் ரமேஷ். ராமசாமி திரும்பும்போது பார்க்கிறான் ரமேஷ். ராமசாமி அழுது கொண்டிருக்கிறான்.
“டேய் என்னாச்சி?“ என்று பதறுகிறான் ரமேஷ். “ஒண்ணில்ல ஒண்ணில்ல“ என்கிறான் ராமசாமி.
“டேய் சொல்லுடா…“
“ஷ்“ என்கிறான் ராமசாமி. “பொண்ணுக காதுல விழுந்துறப் போகுது…“
“சாயந்தரமா இதைப் பேசலாம்…“ என்கிறான் ரமேஷ்.
“எதை?“
“நீ எதையோ எங்க கிட்ட மறைக்கிறே இவனே.“
“அப்பிடில்லாம் இல்லை.“
“இப்ப திடீர்னு ஏன் உனக்கு அழுகை வந்தது?“
“எனக்கே தெரியல்ல.“
“உனக்குத் தெரியும்.“
“தெரியாது.“
“சரி. சாயந்தரமாப் பேசறேன்“ என்றபடி ரமேஷ் வாஷ் பேசினுக்குப் போகிறான்.
அலுவலகம் திரும்ப சுறுசுறுப்பாகிறது. தேய்ந்த குரலில் மேனேஜர். “அந்த FD ப்ரீ குளோஸ்யூர் வந்ததே… அதை முடிச்சாச்சா?“ – ராமசாமியின் பதில் குரல். “அதை குளோஸ் பண்ணி அவங்க SB அக்கவுண்ட்லயே போட்டாச்சு சார்.“ – ஒரு தொலைபேசி அழைப்பு. “ஹல்லோ… ஆமா சார். நாளைக்கு கிரெடிட் ஆயிரும் சார். நான் மெசேஜ் குடுத்திருக்கேன். ஈ மெய்ல்தான்…. ஆமாம். மெய்ல் பாக்கச் சொல்லி ஃபோனிலும் சொல்லிட்டேன். நாளைக்கு நீங்க பணம் எடுத்துக்கலாம் சார்… சரி. வாங்க வாங்க.“
கடிகாரத்தில் மணி நாலரை. ஒவ்வொருவராய் அலுவலகம் முடிந்து கிளம்ப ஆயத்தம் ஆகிறார்கள்.
வங்கி வாசலில் ஒரு பைக் வந்து நிற்கிறது. ராமசாமி ரமேஷிடம் கண் காட்டுகிறான். “என்ன?“ என்கிறான் ரமேஷ்.
“ஆள் சும்மா சல்மான் கான் மாதிரி இருக்கானே?“
உள்ளே ஒப்பனை அறைக்குப் போயிருந்த மகா அங்கேயிருந்தே அவனைப் பார்த்திருக்க வேண்டும். கடகடவென திரும்ப வருகிறாள். ஹை ஹீல்ஸ் டக் டக் என சத்தம் எழுப்புகிறது.
வேகமாய் அவனிடம் போகிறாள். அவன் கையில் வண்டிச் சாவியைச் சுழற்றியபடியே எதோ பேசுகிறான். சட்டென சிரித்து அவன் இடுப்பைக் கிள்ளுகிறாள் மகா. தன் கூலிங் கிளாசை தலைமேல் ஏற்றி விட்டிருக்கிறாள் அவள். அதைத் திரும்ப கண்ணுக்குத் தள்ளிக் கொள்கிறாள்.
வண்டியை அவன் உதைக்கிறான். பின் சீட்டில் அவள் ஜம்மென்று ஏறி அமர்கிறாள். ராமசாமி ரமேஷ் இருவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவளுக்குத் தெரிகிறது. அங்கேயிருந்தே அவள் இருவருக்கும் கை காட்டுகிறாள். பிறகு அவன் இடுப்பைப் பற்றிக் கொள்கிறாள். ர்ர்ர் என உருமுகிறது பைக். அவர்கள் பார்வையில் இருந்து மறைகிறார்கள்.
“நான் சொல்லலடா?“ என்கிறான் ராமசாமி. “சொன்னே“ என்கிறான் ரமேஷ். “உன் வில்லனா?“ என்கிறான் ராமசாமி. “இல்லை“ என்கிறான் ரமேஷ். “ஆனால் அதிர்ஷ்டக்காரன்…“ என்கிறான் ரமேஷ்.
“இல்லை. அதிர்ஷ்டங் கெட்டவன்“ என்கிறான் ராமசாமி. முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.
சடரென்று எழுந்து அவன் பக்கம் வருகிறான் ரமேஷ். “எனக்குத் தெரியும்டா…“
“தெரிஞ்சா விடேன் இவனே.“
“இல்ல. உனக்கு அவளைப் பத்தி. எதோ தெரியும்னு எனக்குத் தெரியும். ஆனால் சொல்ல மாட்டேங்கறே.“
“வேணாம்.“
“அது உன்னியே இந்தப் பாடு படுத்துதே இவனே. அந்த ரகசியம் எனக்கு வேணாம். ஆனால் அதை வெச்சிக்கிட்டு நீ படற பாடு…“
“அது என் விதிடா… சில ரகசியங்களைச் சொல்ல முடியாது இவனே…“ என்கிறான் ராமசாமி. “நேத்தி கூட… உன் அப்பா…“
“அப்பாவைப் பாத்தியா?“
“ரகசியம். இப்ப அது உனக்கு வேணாம்“ என்கிறான் ராமசாமி. “இப்போது சிரிப்பு மீண்டிருக்கிறது.
“என் அபபாவைப் பார்த்து எதோ பேசி யிருக்கே. என்கிட்டியே அதைச் சொல்ல மாட்டேங்கறே…“ என்றவன் சட்டென பிரகாசமாகி “ஏய் பொண்ணு எதும் எனக்குப் பார்த்து அப்பாக்கிட்ட சொன்னியா?“ என்கிறான்.
“அந்த மாதிரி யெல்லாம் இல்ல.“
“பின்ன என்னடா?“
ராமசாமி பதில் சொல்லவில்லை.
“எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கே. ஆனால் எதையும் சொல்ல மாட்டேங்கறே.“
“என்னால மத்தவங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிற செய்திகள்னா சொல்லலாம். நானே சொல்வேன்…“ என்கிறான் ராமசாமி. “நம்ம ராது கல்யாணம் பத்திக் கேளு. விலாவாரியாச் சொல்றேன்… எனக்குத் தெரியும்.“
“மகா பத்தியும் உனக்குத் தெரியும்.“
“மறந்துரு அதை.“
“எதைடா?“
“எனக்குத் தெரியும்ன்றதை“ என்கிறான் ராமசாமி. தன்னைப்போல திரும்ப புன்னகை வருகிறது.
“திடீர்னு அழறே… திடீர்னு சிரிக்கறே, உன்னை எப்படி எடுத்துக்கறதுன்னே புரியலடா எனக்கு…“ என்கிறான் ரமே.ஷ்.
“புரியாத வரை உனக்கு நிம்மதி.“
“சரி. இப்ப எதுக்குச் சிரிச்சே? அதையாவது சொல்லு…“
“இல்ல. இல்ல… எனக்கு ஒரு வேலை இருக்கு“ என்று கிளம்புகிறான் ராமசாமி.

  அத்தியாயம் 18

கிருஷ்ணன் வீடு.
உத்திரத்தில் ஒரு கயிறு வீசப் படுகிறது. எட்டவில்லை. ரெண்டாம் முறை, மூணாம் முறை. எட்டி விடுகிறது.
உத்திரத்தில் இருந்து ஒரு குருவி, கயிறு வந்ததால் சீண்டப்பட்டு வெளியே பாய்கிறது. சர்ரென்று அது அவன் தலையைத் தாண்டிப் பறக்கிறது. ச்சீ, என பயந்து நடுங்கி விலகுகிறான் கிருஷ்ணன்.
திரும்ப அது அதே உத்திரத்தில் வந்து வந்து அமர்கிறது. “ஏய் குருவி தள்ளிப் போ. நான தற்கொலை பண்ணிக்கப் போறேன்“ என்கிறான் கிருஷ்ணன்.
குருவி வாலை ஆட்டி ட்வீட் ட்வீட் என்கிறது. “அதுல உனக்கு என்ன டவ்ட்?“ என்கிறான் கிருஷ்ணன்.
“பார்த்தா வெள்ளையும் சொள்ளையுமா ஆபிசராட்டம் இருந்தார் அவர். சாகத் துணிஞ்சவனைக் கடல்லேர்ந்து பிடிச்சி வெளியே இழுத்தார். என்னைப் பார்க்க வரேன்னார். வந்து என் காதலியோட என்னைச் சேர்த்து வைக்கிறேன்னார். சும்மா அப்பசத்திக்கு சமாதானப் படுத்தினா, நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு நினைச்சிட்டார் போல… என்னைப் பத்தி அவருக்குத் தெரியாது.“
“ட்வீட் ட்வீட்“ என்கிறது குருவி.
“நான யார்னு அவருக்குக் காட்டறேன்…“ என்கிறான்  குருவியிடம்.
குருவி மெல்ல சன்னலுக்கு வெளியே பறக்கிறது. “யப்பா…“ என நிம்மதியாய் அவன் நெஞ்சில் கை வைத்துக் கொள்கிறான். சன்னலைச் சாத்தப் போகிறான்.
தெருவில் சாத்துக்குடி விற்று வருகிறாள் பெண் ஒருத்தி. “சாத்துக்குடி வேணுமா?“ “வேணாம்“ என்கிறான். “நாக்குல உரிச்சிப் போட்டா ஜம்னு கரையும். ஒரு சுளை இனாமா வாங்கிச் சாப்பிட்டுப் பார்…“
“வேணாம்..“
“ஏன?“
“நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்…“
“ஐயோ.“
“நிசம்மா.“
“சரி. அப்பன்னா சாகு முன்னாடி என் கிட்ட ஒரு அரைக் கிலோ சாத்துக்குடி போணி பண்ணு. போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும் இல்லே?“
“ஏய் கிழவி. நான் சாகிறது முக்கியம் இல்லே. உனக்கு சாத்துக்குடி விக்கிறது முக்கியமா?“
“உன்னைப் பத்தி நாளைக்குப் பேப்பர்ல பாத்துக்கறேன்“ என்றபடி அவள் தாண்டிப் போகிறாள். “சாத்துக்கு…டீ…“ என்று நீண்ட ஊளையாய்ச் சத்தம்.
ஆத்திரத்துடன் சன்னல் கதவைப் படாரென்று உள்பக்கமாக சாத்துகிறான்.
உத்திரத்தில் போட்ட கயிற்றை இழுத்து கனம் தாங்குமா என்று பார்க்கிறான். கயிறு பட்டென்று அறுந்து கையோடு வருகிறது. “இப்ப என்ன பண்ண?“ என்று திகைக்கிறான். “நல்லவேளை. இதுல தூக்கு போட்டுத் தொங்கினாலும் அறுந்து விழறாப்ல ஆயிருக்கும்“ என்று சொல்லிக் கொள்கிறான்.
அப்போது வாசல் கதவு தட்டப் படுகிறது. போய்த் திறக்கிறான். எதிர்வீட்டுப் பெண். “காலி சிலிண்டர் இருக்கா?“
“காஸ் சிலிண்டரா?“
“ஆமா. காஸ் காரன் வரேன்னிருக்கான். எனக்கு இன்னும் தீரல்ல. உங்ககிட்ட காலி இருந்தால்… கை மாத்தா குடுத்தால்…“
“இல்ல“ என எரிச்சலுடன் சொன்னவன், சட்டென சிரிப்புடன், “தரேன். உங்க வீட்ல நல்ல இறுக்கமான தாம்புக் கயிறு இருக்கா?“ என்கிறான்.
“எதுக்கு?“
“தற்கொ… இல்ல. கிணற்றுக்குள்ள வாளி விழுந்திட்டது. எடுக்கணும்.“ என்கிறான்.
“வரேன்“ என்று அவள் கொண்டு வரப் போகிறாள்.  கிருஷ்ணன் காலி சிலண்டரை உருட்டி வரவும் அவள் தாம்புக் கயிறை அவனிடம் தருகிறாள்.
“உறுதியா இருக்குமா?“
“அதென்ன அப்பிடிக் கேட்டுட்டே. எங்க மாமா பையன் பரிட்சைல தோத்தப்ப இதுலதான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.“
“சூப்பர்.“
“என்ன சூப்பர்?“
“இதை அவங்க வீட்ல இருந்து  நீங்க எதுக்கு எடுத்திட்டு வந்தீங்க?“
“பத்திரமா அவன் ஞாபகமா இதை வெச்சிருக்கேன்.“
“டேங்கப்பா. ஞாபகமா புடவையை வெச்சிப்பாங்க. பேனா, கண்ணாடி அப்டின்னு வெச்சிப்பாங்க. உங்க ஞாபகம் ஆச்சர்யமா இருக்கே. நாளைக்கு நமக்கும் தேவைப்படலாம்னு முன் யோசனை போல. அதைப் பத்தி என்ன… ராசியான கயிறு போல.“
“தற்கொலைக்கு என்ன ராசி வேணும் தம்பி?“
“தெரியல. நான் சிம்ம ராசி“ என்கிறான் கிருஷ்ணன். “சில பேருக்கு எல்லாம் நெருங்கி வர்ற அந்த சமயத்தில் யாராவது வந்து காப்பாத்தி விட்டுருவாங்க.“
அவள் போனதும் திரும்ப தூக்குக் கயிறை வீசுகிறான். வாசலில் அழைப்பு மணி அடிக்கிறது.
“சிலிண்டர் தான் குடுத்திட்டேனே“ என்கிறான் கிருஷ்ணன்.
“கிருஷ்ணா?“ என்று வாசலில் ஆண் குரல்.
“யாரு?“
“நான் ராமசாமி.“
“சார். எப்பிடி சார் கரெக்டா நான் சாக முடிவெடுத்தா வந்திர்றீங்க. மத்த நேரம் வருவீங்கனு எதிர்பார்த்தால் நீங்க வர்றதே இல்லை…“ என்று சொல்லியபடியெ வந்து வாசல் கதவைத் தாள் திறக்கிறான்.
“சில ஆளங்க கிட்ட டொனேஷன் கேட்கப் போனால் அப்பறமா வா, அப்பறமா வான்னே தள்ளிவிட்ருவான் சார். அதைப்போல எமன் என்னைத் திருப்பி அனுப்பிட்டே யிருக்கான்.“
ராமசாமி உள்ளே வந்து வீட்டின் நிலவரத்தைப் பார்க்கிறான். தாம்புக் கயிறை உருவிக் கீழே போடுகிறான். சன்னலைத திறக்கிறான்.
“நீ இந்தக் கயிறை வீசினால் சாவு வந்திருமா கிருஷ்ணா. எமன் பாசக் கயிறை உன் மேல வீசணும்.“
 சர்ர்ரென்று குருவி திரும்ப உள்ளே வந்து உத்திரத்தில் அமர்ந்து வாலாட்டி, ட்வீட் ட்வீட், என்கிறது.
“குருவி அப்பத்திலேர்ந்தே டவுட் டவுட்னே கத்துது…“ என்கிறான் கிருஷ்ணன்.
“அது உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சி வெச்சிருக்கு…“ என ராமசாமி சிரிக்கிறான்.
“சிரிக்காதீங்க சார். எனக்கு ரொம்பக் கோபம் உங்க மேல. .“
“அதுனால சாகத் துணிஞ்சியா?“
“நீங்க என்ன சார் சொன்னீங்க?“
“அதான் வந்திட்டேனே…“
“வந்து? என்னை சாகாதேன்னு அறிவுரை சொல்வீங்க. அப்பறம் கிளம்பிப் போயிருவீங்க.“
“இன்னொண்ணு இருக்கு.“
“என்ன அது?“
“கிருஷ்ணா கபே“ என ராமசாமி சிரிக்கிறான்.
“விளையாடாதீங்க சார்.“
“இல்ல கிருஷ்ணா. நிசம்மாதான். கிளம்பு. பேசிக்கிட்டே போகலாம்.“
“நான் வரல்ல சார்.“
“அட வா.“ ராமசாமி அவனை தன்னோடு இழுத்துக் கொள்கிறான். வெளியே வரும்போது எதிர்வீட்டுப் பெண் கேட்கிறாள்.
“வாளிய எடுத்தாச்சா?“
“வாளிய எடுத்தாச்சி. கயிறு தான் எதிர்பாராம கிணத்துல் விழுந்துட்டது“ என்றபடி கிருஷ்ணன் ராமசாமியுடன் கிளம்புகிறான்.
கிருஷ்ணா கபே. சர்வர் அவர்களைப் பார்த்ததும் தலையாட்டியபடியே போகிறான்.  “அவனுக்கே என் முகம் பழகிட்டது கிருஷ்ணா.“
“‘சார். என் பேர் கிருஷ்ணன். ஆனால் கூப்பிடட குருலுக்கு உடனே என் முன்னால நீங்கதான் கிருஷ்ணனாட்டம் வந்து நின்னுர்றீங்க. “
“நிறைய வேலை இருக்கு கிருஷ்ணா. இன்னாலும் உன் ஞாபகம் வந்ததும் வந்திட்டேன்.“
“தேங்ஸ் சார்.“
“சொல்லு உனக்கு என்ன பிரச்னை?“
“என்னை ஒருத்தி…“ அவன் முகம் மாறுகிறது. “பிடிக்கலன்னுட்டா சார்.“
“உன்னையா? உன்னைப் போயி யாராவது பிடிக்கலைன்னு சொல்வாங்களா கிருஷ்ணா?“
“உங்களுக்குத் தெரியுது சார்.அவளுக்குத் தெரியல்லியே.“
யாருக்கு?“
“அவளுக்கு.“
“அவ பேர் என்ன கிருஷ்ணா?“
“அவ பேரைச் சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு சார்.“
“பொம்பளைங்க தான் அதும் அந்தக் காலத்துல கணவன் பேரைச் சொல்ல வெட்கப் படுவாபங்க. ஆம்பளைங்க, அதுவும் இந்தக் காலத்துல… சும்மா சொல்லு கிருஷ்ணா?“
“கிருஷ்ணவேணி.“
“அவ உன்னைப் பிடிக்கலைன்னுட்டாளா?“
“ஆமா சார்“ என அவன் முகம் சுருங்குகிறது.
““ஏன்?“
“எனங்ககு என்ன சார் குறைச்சல்?“
“இப்ப்டி திடீர்னு நீ கேட்டால்… நான் அவசரப்பட்டு எதாவது சொல்லிருவேன்.“
அவன் முகம் மாறுகிறது.
“அதில்ல கிருஷ்ணா. உன்கிட்ட என்ன இருக்குன்னு நீ நினைக்கறே? அதுவே எனக்குத் தெரியல்லியே…“
“காபி ஆறிரும் சார். குடிச்சிக்கிட்டே பேசலாமா?“
“பேசவே வேணாம். காபி குடிச்சிட்டுக் கிளம்பினாலும் ஓ.கே.“
ராமசாமி காபியை வாய்க்குக் கிடடே உயர்த்திப் பிடித்தபடி பேசுகிறான். “யாராவது சாகப் போறேன்னா பேசாம விட்டுறணும் போலிருக்கு.“
“ஏன் சார் அப்பிடிச் சொல்றீங்க?“
“கண் முன்னால அப்படி நடக்கிறதைப் பாத்துக்கிட்டே பேசாமல் இருக்க முடியல என்னால…“
“நீங்க ரொம்ப நல்லவர் சார்.“
“அதான் என் பிரச்னையே.“
காபியை கிருஷ்ணா குடித்து டம்ளரை டக்கென்று வைக்கிறான்.
“அவளை முதல்ல எங்க பார்த்தே கிருஷ்ணா?“
“இங்க தான் சார். இதே ஹோட்டல்ல.“
“ஆகா. அப்பன்னா உன் கால்யாண ரிசப்ஷனையும் இங்கியே, இதே ஹோட்டல்லியே வெச்சிறலாம் கிருஷ்ணா. வெட்கத்தைப் பாரு…“
கிருஷ்ணனின் சிரித்த முகம் மாறுகிறது. “எனக்கு என்ன சார் கொறச்சல்ர? அழகு இல்லியா? அறிவு இல்லியா?“
“உனக்கே சந்தேகம் வந்தா மாதிரி என் கிட்டே கேக்கக் கூடாது கிருஷ்ணா. பொருளாதாரமே அந்த சப்ளை அன்ட டிமான்ட் ஒத்துப் போகாதபோது தான் தள்ளாடுது.“
“என்ன சார் சொல்றீங்க?“
“போற வழில கடைல கேட்டுப் பார்த்து கிடைச்சா வாங்கிக்கலாம் கிருஷ்ணா.“
“என்னால அவளை மறக்க முடியல்ல சார்.“
“எங்க வேலை பார்க்கிறாள் அவள்?“
“சத்யா ஸ்டோர்ஸ்.“
“எனன கடை?“
“ஜவுளி.“
“நீ?“
“நான் ஆம்பளைச் சிங்கம் சார். உட்கார்ந்து சாப்பிடுவேன்.“
“ஏன் நின்னுகிட்டே சாப்பிட்டால் செரிக்காதாக்கும்?“ என்கிறான் ராமசாமி. “ஆக அவள் பெர் என்ன, வேலை எங்க பார்க்கிறாள் அது இதுன்னு தெரிஞ்சிக்கிட்டு ரொம்ப பாதுகாப்பா லவ்ல இறங்கியிருக்கே.“
“பின்னே? எனக்கு அறிவு இல்லியா என்ன?“
“நிறைய இருக்கு. டூ மச். த்ரீ மச்.“‘
“என் காதல் புனிதமானது“ என்றவன் ராமசாமியின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீங்க தான் சார் எங்களைச் சேர்த்து வெக்கணும்…. என்கிறான்.
“அது சரி கிருஷ்ணா. நீ சொல்றதையெலலாம் வெச்சிப் பார்த்தால், அவள் உன்னை….“ என ராமசாமி நிறுத்துமுன் சட்டென உதடு துடிக்க கிருஷ்ணன் எழுந்து கொள்கிறான்.
“அட என்ன எழுந்திட்டே. உட்காரு. அவள் அப்பிடிச் சொன்னால் நாம விட்டுர்றதா?“
“தேங்ஸ் சார்“ என அசடடுச் சிரிப்புடன் உட்கார்கிறான் கிருஷ்ணன்.
““அதுல ஒரு விஷயம். அவளோ வேலை பார்க்கிறாள். நீ… உனக்கு இன்னும் வேலை கிடைக்கல்ல. அதாவது நீ ஆம்பளைச் சிங்கம். வேலையே இல்லாத உன்னை…. என்ன எழுந்திட்டே“ என ராமசாமி எழுந்து அவனை தோளை அழுத்தி திரும்ப உட்கார்த்துகிறான். “அப்டின்னு அவள் சொன்னாலும் நாம விட்டுற முடியாதுன்றே நீ. அப்பிடித்தானே?“
“அப்படியே தான் சார்.“
“எனக்கே தலை சுத்துதுடா கிருஷ்ணா.“
“சிருஷ்ணர் சார் நீங்க. உங்க கையில தான் சக்கரம் சுத்தணும். உங்க தலை சுத்தக் கூடாது.“
“முயற்சி பண்றேன் கிருஷ்ணா.“
“உங்களுக்கு இந்தக் காதலைப் பத்தி என்ன தோணுது சார்?“
“அன்னிக்கு நான கடல்கரைக்குக் காத்து வாங்க வந்தேனே…“
“ஆமா சார்.“
“அங்கதான் விதி என் வாழ்க்கைல ஓவரா விளையாடிட்டது.“ ஹா ஹா என்று சிரிக்கிறான் ராமசாமி. “உனக்காக நான்… நான் 2016 லேர்ந்து வரணுமா?“
“என்ன சார் சொல்றீங்க?“
“ஒண்ணில்ல. ஒண்ணில்ல. விதி விதி…“ என்கிறான் ராமசாமி.
“என்னமோ 2016 லேர்ந்து வர்றேன்னு…“
“அப்படியா சொன்னேன்?“
“2016 லேர்ந்து வந்தால்… நீங்க எனக்கு அவதார புருஷன் சார். உங்களை சந்திச்சது என் பாக்கியம் சார்…“ என அவன் கையைப் பிடித்துக் கண்ணில் ஒத்திக் கொள்கிறான் கிருஷ்ணன்.
“உன் வாழ்க்கையின் நல்ல தருணத்தில் நீ என்னை சந்திச்சதா நினைக்கறே. என் வாழ்க்கையின் மோசமான தருணமா அது தெரியல்ல. ஹ்ம்“ என பெருமூச்செடுக்கிறான் ராமசாமி.
காபி சாப்பிட்ட பில் வருகிறது. “நான் குடுக்கறேன் சார்“ என கைநீட்டுகிறான் கிருஷ்ணன்.
“சரி.“
“அதெல்லாம் இல்ல நாந்தான் குடுப்பேன்னு நீங்க சொல்லணும் சார்.“
“சரி அதெல்லாம் இல்ல“ என்கிறான் ராமசாமி. “நீயே குடு…“
வெளியே வருகிறார்கள். “தினசரி அவள் ராத்தரி பத்து மணி வாக்கில் வேலை முடிஞ்சி இந்தத் தெரு வழியா தான் வருவா சார்.“
“சரி.“
“அப்பதான் சார் நான் அவளைப் பார்ப்பேன்.“
“காலைல எத்தனை மணிக்கு வேலைக்குப் போறா? அதையும் நோட் பண்ணியிருப்பியே?“
“குறும்புக்காரர் சார் நீங்க… காலை எட்டரை எட்டே முக்லுக்கு இந்த பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்குவா.“
“அவள் வீடு எங்க?“
“அது தெரியல்ல சார். கல்யாணத்துக்குப் பிறகு அவள் வீடு திருவல்லிக்கேணி.“
“ஓ உன் வீடு…“
“போங்க சார் எனக்கு வெட்கமா இருக்கு.“
ராமசாமி அப்படியே நிற்கிறான். “அவளை எப்படியாவது நான் சந்திச்சிப் பேசறேன் கிருஷ்ணா.“
“நீங்கதான் அவகிட்ட என்னைப் பத்தி எடுத்துச் சொல்லணும்.“
“அவ கேட்டுப்பாளா…“
“அவள் மாட்டேன்னா… தற்கொலை. எனக்கு வேற வழி இல்லை சார்.“
“அவளை சந்திச்சிப் பேசிப் பார்க்கறதைத் தவிர எனக்கும் வேற வழி இல்லை போலுக்கே.“
“ரொம்ப நல்ல பொண்ணு சார் அவள்.“
“சரி சரி… ஆ வூன்னா தற்கொலைன்றே. இல்லாட்டி வெட்கப் படறே… வித்தியாசமான நெளிசல் கேசுய்யா நீ. உங்க அப்பா எங்க வீட்ல இல்லியே?“
“எதோ கோவில் உத்சவம்னு போனார். வர லேட்டாகும்.“
“அவர் என்ன சொல்றார் உன் காதலைப் பத்தி?“
“உன்னால எதையுமே செய்ய முடியாது. இதையாவது ஒழுஙகாச் செய்யின்னார்…“
“நல்ல குடும்பம்டா. சரி செய்யி. என் பஸ் வருது கிருஷ்ணா.“
“நான உங்களைத் தான் நம்பியிருக்கேன் சார்.“
“நான்… என்னைக் காப்பாத்த கடவுளைத் தான் நம்பியிருகிகேன்…“ என ஓடிப்போய் பஸ்சில் ஏறுகிறான் ராமசாமி..

அத்தியாயம் 19
ராமசாமி வீடு. உள்ளே சிறு பூஜை அறையில் திலகா. குளித்து மங்களகரமாய் தலை நிறையப் பூவுடன். திருமாங்கல்யத்தை எடுத்து அதில் குங்குமம் இட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிறாள். கடவுள் படங்களுக்குக் கற்பூரம் காட்டுகிறாள். அப்படியே கூடத்தில் இருக்கும் மாமனார் படத்துக்கும் காட்டுகிறாள். கூடத்தின் சுவரில் மாமனாரின் படம். மாலை போட்டிருக்கிறது. தலைமாட்டில் மினுக் மினுக் என ஒளிரும் சிரியல் பல் ஒன்று.
ராமசாமி படுக்கையறையில். இன்னும் எழுந்து கொள்ளவில்லை.. திலகா வந்து “என்னங்க?“ என எழுப்புகிறாள். பாதி கண்ணைத் திறந்தபடி “மணி என்ன?“ என்கிறான். “ஏழு“ என்கிறாள் திலகா. “ஏழு தானே?“ என அவன் திரும்பிப் படுக்கிறான். அவளுக்கு ஏமாற்றமாய் இருக்கிறது. “எழுந்துக்கறீங்களா தலைல தண்ணியைக் கொட்டவா?“
“என்னடி அவசரம். எட்டு ஆகட்டும். நானே குளிச்சிப்பேன்.“
அப்போது தொலைபேசி அடிக்கிறது. திலகா போய் எடுக்கிறாள். “ஆமாம்ப்பா. தேங்ஸ்ப்பா.“ சிரிக்கிறாள் மகிழ்ச்சியுடன். இங்க அவன் சற்றே தூக்கம் கலைந்த எரிச்சலோடு புரண்டு படுக்கிறான். “அவரா? அவர் தூங்கறார்ப்பா… சரிப்பா. குடுக்கறேன்.“
“என்னங்க?“
“யாரு?“
“அப்பா.“
“அவர் போய்ச் சேர்ந்து ஒண்ணு ஒண்ணரை வருஷத்துக்கு மேல ஆகுது.“
“அட உங்க அப்பா இல்ல, எங்க அப்பா“ என அவனை ஒரு செல்ல அடி போடுகிறாள்.
“என்னவாம்?“
“உங்க கூட பேசணுமாம்.“
“ச்“ என்றபடி எழுந்து லுங்கியைக் கட்டிக் கொண்டு தொலைபேசிக்கு வருகிறான். “சொல்லுங்க மாமா.“
“மெனி மெனி ஹெப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே.“
“கடைசில டே-ன்னீங்களே, அதுதான் மரியாதைக் குறைவா இருக்கு மாமா“ என்றவன், “எனிவே தேங்ஸ். இன்னிக்கு என்ன விசேஷம் மாமா?“ என்கிறான்.
“இன்னிக்கு…“
“இன்னிக்குதான் மாமா.“
“உங்களோட….“
“எங்களோட…“
“வெடிங் டே!“
“திரும்பவும் டே-ன்றீங்களே…“ என்றவன், “ஆ அப்பிடியாடே… சாரி. நன்றி மாமா. திலக்? அப்பிடியா? சொல்லவே இல்லே?“ என்று அவளைப் பார்த்துத் திரும்பி கண்ணடிக்கிறான். பின் தொலைபேசியில் “தேங்ஸ் மாமா. நான் அப்பறம் பேசறேன்…“ என வைத்து விட்டு அவளைக் கிறக்கத்துடன் பார்க்கிறான்,
(SONG BIT  - முன்னே வந்த பாடல்.
அவன் ‘உள்ளம் சொக்கும் அழகு‘ என்று பாட. அவள் – ‘கண்கள் சொக்கும் இரவு.‘
அது இப்போது உல்ட்டாவாக ரெண்டு வரி.
அவள் – உள்ளம் சொக்கும் அழகு
அவன் – கண்கள் சொக்கும் பொழுது)
“தூக்கம் போச். அதான் அம்மா அதிகாலையிலேயே… கிட்ட வாடி. வாசனை பிடிச்சிக்கறேன். உடனே அலட்டிருவீங்களே?“
“என்னவாம்?“ என்று பாவனை காட்டி அருகே வருகிறாள்.
“ஒண்ணில்ல போ“ என்கிறான். அவள் முகம் மாறுவதைப் பார்த்து மூக்கைத் திருகுகிறான்.
“வழக்கமா உன்னோட விசேஷம் வரும். இல்லாட்டி என்னோட விசேஷம் வரும். இப்ப பார். நம்ம ரெண்டு பேருக்குமான விசேஷம். எப்பிடி?“ என நிறுத்தியவன் “உளர்றேன் இல்லே?“ என்கிறான்.
“வழக்கம் போல…“ என்கிறாள். அவன் தலையைக் கோதி “எனக்குப் பழகிட்டது“ என்கிறாள்.
“எனக்கும்“ என்கிறான் அவன்.
“என்னது?“
“உன் முன்னால உளர ஆரம்பிச்சிர்றேன் கண்மணி. எனி வே…“ என்கிறான். “காதலில் கொஞ்சம் அப்பிடி இப்பிடி பேசறது தான் இயல்பா இருக்கும். சரியாப் பேசறது அத்தனை சரியா இருக்காதுடி.“
அவள் வாய்பொத்திச் சிரிக்கிறாள்.
“சந்தோஷம் ஜாஸ்தி ஆயிட்டா. அது சகஜம் தான். என் பிரண்டுடி… பிரசவ அறைக்கு வாசல்ல நிக்கறான். பொண் குழந்தை பிறந்தது. உடனே எனக்கு போன் பண்ணி…“
“என்னாச்சி?“
“ராமு நான் அம்மா ஆயிட்டேன்றான்!“
அவள் மலர்ந்து சிரிக்கிறாள். “உங்க ஃப்ரெண்ட் ஆச்சே.“
அவளைக் கிட்டே இழுத்து மூக்கால் அவளை வாசனை பிடிக்க முயல்கிறான். “போயி பல்லாவது தேய்ச்சிட்டு வாங்க“ என்கிறாள் அவள் விலகியபடி. அதற்குள் உள்ளே குளியல் அறையில் இருந்து கோகுலின் குரல். “அம்மா குளிச்சாச்சி. துண்டு…“ என்கிறான் கோகுல். “தோ“ என்று அவன் கைலியை உருவப் போகிறாள். “ஏய்“ என்கிறான் அவன் பதறி. “சாரி. துண்டுன்னு நினைச்சேன்“ என்று அவள் போகிறாள். “ஒரு நிமிஷத்தில் என்னையே பிறந்த குழந்தையாக்கப் பாத்தாளே…“ என எழுந்து கொள்கிறான்.
கோகுல் பள்ளிக்குக் கிளம்புகிறான். “ஆட்டோ வந்தாச்சி போல… மிஸ்ட் கால் வந்திட்டது‘ என்கிறாள் திலகா. அலுவலகம் கிளம்பும் மும்முரத்தில் ராமசாமி. “நான் வேணா கொண்டு விடட்டுமா?“ என்று சட்டையை மாட்டிக் கொள்கிறான்.
“வேணாம்.“ என்கிறாள் திலகா.
“ஏன் திலக்?“
“பையன் என்ன படிக்கிறான்?“
“மூணு.“
“நீங்க ஒண்ணாங் கிளாஸ்ல போயி உக்காத்தீருவீங்க…“
“ஓ“ என அவனும் அதை ரசித்துச் சிரிக்கிறான்.
வாசல் பக்கம் கணபதி தட்டுப் படுகிறார். “வணக்கம் சார். வாழ்த்துக்கள்“ என்கிறார். திலகா சிரித்தபடி அவரைத் தாண்டிப் போகிறாள். ராமசாமியும் வாசலுக்கு வருகிறான். “சேதி உங்க வரை வந்திட்டதா?“ என்று சிரிக்கிறான். கணபதி வீட்டில் உள்ளே இருந்து கணபதியின் மனைவியும் சிரிக்கிறாள். “இப்படியே சந்தோஷமா நிறைய நாள் கொண்டாடணும் நீங்க“ என வாழ்த்துகிறாள் கணபதியின் மனைவி.
“இன்னிக்கு என்ன, புரோகிராம் எதுவும் உண்டா?“
“பகல்ல எதுவும் இல்லை“ என்கிறான். அதைகேட்டு உள்ளே யிருந்தே கணபதியின் மனைவி வெட்கப் படுகிறாள்.
“கல்யாண நாளுக்கெல்லாம் லீவு போடறதா சார்? பொதுவா கல்யாண நாளை நாங்க ஒரு விதமாக் கொண்டாடுவோம்… ஒரு அநாதை இல்லத்துக்குப் பணம் கட்டி அவங்களுக்கு சாப்பாடு போடுவோம்.“ அவன் பேசி முடிக்குமுன்பே திரும்ப லிஃப்ட் மேலே வரும் சத்தம். திலகா திரும்பி வருகிறாள். அவளுடன் வீட்டுக்கு உள்ளே வருகிறான் ராமசாமி.
“எங்கடி உன் அருமைத் தம்பி…“
“எதோ குறும்படம் எடுக்கப் போறானாம். ஃப்ரெண்டைப் பார்க்கன்னு வெளியே போனான்…“
“அதான் வீடே அமைதியா இருக்கு“ என்கிறான். “பாயாசம் அற்புதம். சமையலுக்கு திலகாவை அடிச்சிக்க ஆள் கிடையாது…‘‘
“சமையல் நல்ல இல்லைன்னா?“
“கணவன் மனைவி, அவங்களே அடிச்சிக்குவாங்க“ என்கிறான் ராமசாமி.
“இன்னிக்கு ஒருநாள் லீவு போடுங்களேன்…“
“இதுக்கெல்லாம் லீவு போட முடியாதுடி. முடிஞ்சா சாயந்தரம் சீக்கிரம் வரேன்…“ என்றவன் மணி பார்த்து விட்டு, “திலகா, கிட்டே வா…“ என அவளை இழுக்கிறான் அருகில். “உனக்கு என்ன பரிசு வேணும்?“
“பரிசா? அதெல்லாம் உங்களுக்குக் கேட்கத் தெரியுமா?“
“அடி சொல்லுடி….“
“கேட்டுருவேன். கைகேயி வரம் கேட்டா மாதிரி.“
“ஐயோ அவ்ள பயங்கரமான வரமா? நமக்கு இருக்கறது ஒரே பிள்ளை. எனக்கு இருக்கறதும் ஒரே பெண்டாட்டி. உன் பிள்ளைதான் இனி பட்டத்து அரசன் இங்கே“ என்று சிரிக்கிறான் ராமசாமி. கைக் கடிகாரத்தைப் பார்க்கிறான். “சட்னு சொல்லு…“
“உங்க கூட…“
“என் கூட…“
“நானும்…“
“நீயும்?“
“ரெண்டு வருஷம் முந்தைய காலத்துக்கு வரணும்!“ என்று அவன் கன்னத்தை வருடுகிறாள் திலகா.
“அப்படிச் சொல் கண்ணே. இந்த சத்தான வார்த்தையிலே செத்தான் கருணாகரன்“ என்று மயங்கினாப் போல நடிக்கிறான் ராமசாமி. “அடியே எனக்கு முடிஞ்சால் நான் அதைச் செய்வேன். அது எனக்கு மாத்திரம் தானே மைனஸ் 1 காட்டுது?“
“அதெல்லாம் எனக்குத் தெரியாது…“ என்கிறாள் கண்டிப்புடன்.
“அதெல்லாம் உனக்குத் தெரியாது. ஏன்னா என் கண்ணுக்கு மாத்திரம் தான் மைனஸ் 1 வருது. அதான் நான் சொன்னேன்“ என்கிறான் ராமசாமி.
அவள் அவனை ஏக்கத்துடன் பார்க்கிறாள். அவன் அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு, “சாரி. IT IS BEYOND MY LEVEL“ என்றுவிட்டுக் கிளம்புகிறான்.
லிஃப்ட். உள்ளே நுழைந்து கதவைச் சாத்துகிறான். சமத்தாக மைனஸ் 1 காட்டுகிறது லிஃப்ட். கீழே இருளுக்கு வருகிறான். ஊடு பாதை. வெளிச்சத்துக்கு வந்து சேர்கிறான். திடீரென்று அப்படியே நிற்கிறான். உற்சாகப் படுகிறான்.. வாயில் விசில் கிளம்புகிறது. அப்படியே திரும்பி தன் வீட்டைப் பார்க்க நடக்கிறான். தூரத்திலேயே அவன் அடுக்ககம் தெரிகிறது. திரும்ப லிஃப்ட் நிற்கும் ஸீரோ தளம் வருகிறான். லிஃப்ட்டைத் திறக்க பட்டனை அழுத்த கை வருகிறது. மறுத்துக் கொள்கிறான். அருகே மாடிப்படிக்ள். மெல்ல படியேறுகிறான். ஏழாவது மாடி. மூச்சிறைக்கிறது.
மாடி ஏழு. பக்கத்து வீட்டு வாசலில்… டு லெட் – போர்டு. ஆச்சர்யப் படுகிறான். உடனே திரும்ப தலையாட்டி விசில் அடிக்கிறான்.
“திலகா?“ என்று கதவைத் தட்டுகிறான்.
வந்து கதவைத் திறந்தது அவன் அப்பா! இறந்து போன அவன் அப்பா. கைவைத்த பனியனில் இருக்கிறார் அப்பா.
“அப்பா“ என ஆவேசமாய் அவரைக் கட்டியணைத்துக் கொள்கிறான்.
சுவரில் பார்க்கிறான். மினுக் மினுக் சீரியல் பல்பு அடியில் மாலை போட்ட அப்பா படம் – இல்லை.
‘‘என்னடா என்ன ஆச்சி உனக்கு? ஆபிசுக்குப் போனவன் பாதிலயே திரும்பி வந்திட்டியா?“ என்று கேட்கிறார் அப்பா. அவன் சட்டையில் இருக்கும் மொபைலைப் பார்த்து விட்டு “இது எப்படா வாங்கினே?“ என்று கேட்கிறார்.
“நீ செத்தப்பறம் வாங்கினேம்ப்பா.“
“என்னடா உளர்றே?“
“ஒண்ணில்ல. உங்ககிட்ட காட்ட முடியல இதை…“ என்றவன் சிரித்தபடி “இப்ப காட்டிட்டேன்.“
“வேறொரு மொபைல் தானே வெச்சிருந்தே. இப்படி வீணா செலவழிச்சே நாசமாப் போனே நீ…“ என்றவர் “செத்தப்பறம்னு எதோ சொன்னா மாதிரி காதுல விழுந்துது…“
“அப்படியா? தீர்க்காயுசா இருங்கப்பா. இருங்க இருங்க. சந்தோஷம்“ என்றபடியே உள்ளே போகிறான்.
வழியே போகையில் பார்ககிறான். பரணில் பழைய டைரிகள் நாளிதழ்கள் குவிந்து கிடக்கின்றன. கைக் கடிகாரத்தைக் கழற்றி அங்கே மேசையில் வைக்கிறான்.
உள்ளே தயாராகாத நிலையில் திலகா. இரண்டு வருஷம் முந்தைய திலகா. படுக்கை அறைக்குள் இருக்கிறாள் அவள். அப்படியே போய் அவளை பின்னே யிருந்து அணைத்துக் கொள்கிறான்.
“இன்னிக்கு லீவு போட மாட்டேன்னீங்களே?“ என்று திரும்பியவள், “என்ன இது? வேற டிரஸ்ல வரீங்க?“ என்கிறாள். “என் இஷ்டம்டி கண்மணி. நீ எதுவோ தப்புன்னு நினைக்கறியே அது சரி. அதாவது நீ சரின்னு நினைக்காதது தப்பு…“ என்றவன் “உளர்றேன் இல்லே?“ என்று சிரிக்கிறான்.
“வழக்கம்போல“ என்றவள் அவன் தலையைக் கோதி “எனக்குப் பழகிட்டது“ என்கிறாள்.
“எனக்கும்“ என்கிறான் அவன்.
“என்னது?“
“உன் முன்னால உளர ஆரம்பிச்சிர்றேன் கண்மணி. எனி வே…“ என்கிறான். “காதலில் கொஞ்சம் அப்பிடி இப்பிடி பேசறது தான் இயல்பா இருக்கும். சரியாப் பேசறது அத்தனை சரியா இருக்காதுடி.“
அவள் வாய்பொத்திச் சிரிக்கிறாள்.
அவன் கிட்டே நெருங்க அவள் விலகி “ஷ்“ என அவனை ஒரு விரலால் அப்பால் தள்ளுகிறாள். “வெளியே அப்பா…“
“நமக்குக் கல்யாண நாள். அவருக்குத் தெரியும். நான் பாதில ஆபிஸ் போகாதபடி எபவ் டர்ன் அடிச்சி வந்திருக்கேன்னும் தெரியும்…“ என்கிறான். “அவர் தன் மலரும் நினைவுகளுக்குப் போயிருப்பார்…“ என அவளை கன்னத்தில் முத்தம் இடுகிறான். “வா வெளில போயிட்டு வரலாம்.“
“எங்க?“
“கோவிலுக்கு… அஞ்சநேயர்னா நீ வெண்ணெயா உருகிருவியே.“
“நீங்க லீவு போட்டுட்டு வந்தீங்களே. அதுவே எனக்கு சந்தோஷம்…‘ நீங்க வெளிய போங்க. நான் டிரஸ் மாத்திக்கிட்டு….“
“நான் உள்ளேயே இருக்கேனே…“
“சீ“ என்கிறாள்.
“YES. I WANT TO SEE.“
“இது …ச்சீ“ என்கிறாள் அவள். “மிஸ்டர் உங்களுக்கு ஒண்ணாங் கிளாஸ் படிக்கிற குழந்தை இருக்கு.“
“மூணாங் கிளாஸ்“ என்கிறான் அவன்.
“என்ன உளர்றீங்க?“
“உனக்குப் பழகிட்டது நான் உளர்றது இல்லியா?“ என்று சமாளிக்கிறான். வெளியே வருகிறான். “ஒரே பையன். கோகுல். எனக்கு அவன் மூணாங் கிளாஸ். என் பெண்டாட்டிக்கு ஒண்ணாங் கிளாஸ்.“
டி.வி. ஓடிக் கொண்டிருக்கிறது. அதில், பாகிஸ்தானில் அநேக இடங்களில் குண்டு வெடிப்பு, என்று சேதி ஓடுகிறது.
இருவருமாய் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார்கள். “சண்டை கிண்டை போடாமல் ஒத்துமையா சந்தோஷமா இருங்க“ என்று கும்பிடுகிறார் அப்பா.
“இந்தக் கல்யாண நாளுக்கு உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்குவேன்னு நான் நினைக்கவே இல்லைப்பா…“ அவன் கண்கள் பனிக்கின்றன.
“நான் செத்துருவேன்னு பாத்தியாடா?“ என அவன் தலையை அப்பா தடவுகிறார். “இன்னும் 20 வருஷம் நான் இருப்பேண்டா“ என்கிறார்.
வெளியே வரும்போது அவளுக்குதான் என்ன உற்சாகம். இடையே ஒரு பூக்காரியிடம் நின்று பூ வாங்கித் தருகிறான் அவளைத் திரும்பச் சொல்லி பூ வைத்து விடுகிறான்.
ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகிறார்கள்.
வரும் வழியில் ஒரு கைக் கடிகாரக் கடை. அவள் அவனை அழைத்துப் போய் ஒரு புதிய கைக் கடிகாரம் வாங்கி பரிசளிக்கிறாள்.
வரும் வழியில் அந்த மன நல மருத்வனை போர்டு பார்க்கிறார்கள். “இதுக்கு நான் வந்திருந்தேண்டி“ என்கிறான்.
“எதுக்கு?“
“ஒரு ஃப்ரெண்டோட தம்பி“ என்று சமாளிக்கிறான். “நீங்க உளர்றீங்க உண்மைதான். ஆனால் இவரை வந்து பார்க்கிற அளவுக்கு இல்லை“ என்கிறாள் திலகா.
வழியில் அந்த அம்னீஷியா பேஷன்ட்டை சந்திக்கிறார்கள். “அவனுக்கு ரெண்டு வருஷம் முந்திய நினைவுகள்தான்  வருதுடி“ என்கிறான். “அந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தான்.“
“ஐயோ பாவம்“ என்கிறாள்.
“நானும்“ என்கிறான்.
“நீங்களுமா? ஏன்?“ என்கிறாள்.
“உன்னைக் கல்யாணம் பண்ணிட்டிருக்கேனே…“
“நாட்டி“ என அவன் இடுப்பில் கிள்ளுகிறாள்.
“இதுக்குப் பேர் நாட்டி இல்ல இது இடுப்பு...“
அப்போது அவளது செல் போனுக்கு போன் வருகிறது. ‘முகம் மலர எடுக்கிறாள். “ஹல்லோ அப்பா?“ என்கிறாள்.
“அப்பான்னதும் உனக்கு வாயெல்லாம் பல்லுதான்…“
“அப்பான்னு வாயைத் திறந்தால் பல் தெரியத்தான் செய்யும். சும்மா இருங்க“ என்றவள் சிரித்து “சொல்லுங்கப்பா… ஆமாப்பா. தேங்ஸ்ப்பா. இருக்கார்ப்பா… சரிப்பா“ என்று அலைபேசியை அவனிடம் தருகிறாள்.
“மாப்ளே?“
“சொல்லுங்க மாமா.“
“MANY HAPPY RETURNS OF THE DAY“ என்கிறார்.
“எல்லாம் சொல்லி கடைசில டே-ன்னீங்களே. அதுதான் மரியாதைக் குறைவா இருக்கு மாமா. பரவால்ல. நன்றி மாமா“ என்று போனை அணைக்கிறான்.
அப்படியே ஒரு அநாதை இல்லம் போகிறார்கள். வாசலில் போர்டு. சேவைக்கரங்கள்.
இல்லத்தை நடத்தும் சாரங்கநாதன் அவர்களை ம0கழ்ச்சியுடன் வரவேற்கிறார். “வருஷா வருஷம் தவறாமல் கல்யாண நாளுக்குப் பணம் அனுப்பி குழந்தைகளுக்குச் சாப்பாடு போடறீங்க. இந்த தடவை நீங்களே நேரில் வந்தீங்களே. ரொம்ப சந்தோஷம்…“
SONG
நாலைந்து குழந்தைகள் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். கூடவே திலகாவும் ராமசாமியும் உட்கார்கிறார்கள். ஒரு பிரார்த்தனைப் பாடல். இல்லத்தில் தினசரி பாடப்படும் பாடல்.
உலகில் நல்ல காரியங்கள் தொடர பூமிக்கு மனிதர்களை அனுப்பும் அந்த இறைவன் வாழ்க. இந்த இறைவனின் அந்தத் தூதுவர்கள்… அவர்கள் வாழ்க.
ராமசாமியின் அருகே ஒரு குழந்தை வெகு அழகாய் இருக்கிறது. அவன் அருகில் அமர்ந்து சாப்பிடுகிறது. தன் இலையில் இருந்து ஒரு வாய் உணவை எடுத்து ராமசாமி அதற்கு ஊட்டுகிறான். அது ஆர்வமாய் வாங்கிக் கொள்கிறது. ஏக்கத்துடன் இந்தக் குழந்தைக்கு அடுத்த குழந்தை அவர்களைப் பார்க்கிறது. சிரித்தபடி திலகா அந்தக் குழந்தைக்கு ஒரு வாய் ஊட்டுகிறாள்.
வீடு திரும்பும் போது மாலை நாலரை மணி.  லிஃப்ட். வெளியே வருகிறார்கள். பக்கத்து வீட்டு வாசலில் ‘டு லெட்‘ பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது.
“இங்க யாரு வரப் போறாங்களோ?“ என்கிறாள் திலகா.
“கணபதி இல்லைன்னா பிள்ளையார்னு யாராவதது வருவாங்க“ என்று ராமசாமி சிரிக்கிறான்.
அவர்கள் உள்ளே நுழைகிறார்கள். “பசிக்கறதாப்பா?“ என்று அவசரமாக உள்ளே நுழைகிறான் ராமசாமி. “நான் சாப்பிட்டுட்டேண்டா. ஏது வர இவ்ளோ நேரமாயிட்டது?“
“சேவைக்கரங்கள்ல அவங்க எல்லார் கூடவும் சாப்பிட்டோம்ப்பா.“
“நல்லது நல்லது“ என்கிறார் அப்பா.
“திலகா. நீ உள்ள போ… எனக்கு ஒரு வேலை இருக்கு. இதோ வந்திர்றேன்“ என்கிறான் .
“என்ன? நாம வரும்போதே அதை முடிச்சிருக்கலாமே?“
“முடியாது.“
“ஏன்?“
“அதைச் சொன்னால் உனக்குப் புரியாது…“
“சாதாரணமாவே இவன் பேசறது நமக்குப் புரியறது இல்லே“ என்கிறார் அப்பா.
“போயிட்டு வரேம்ப்பா“ என அவன் அப்பா கையைப் பிடிக்கிறான் அழுகை வருகிறது.
“நல்ல நாள் அன்னிக்கு அழப்டாது. எங்க போறே…“
“நீங்க இங்க இருக்கீங்கப்பா. நான் இங்க இல்லாமப் போகப் போறேன்…“
“என்னங்க இது?“
“உளர்றேன் இல்லே திலக்?“ என சிரிக்கிறாப் போல கண்ணைத் துடைத்துக் கொள்கிறான். வெளியே போகிறான்.

அத்தியாயம் 20
ராமசாமி வீடு. சுவரில் அவன் அப்பாவின் படம். மாலை போட்டிருக்கிறது. தலைமாட்டில் மினுக் மினுக் சீரியல் பல்ப். பக்கத்தில் சுவர்க் கடிகாரத்தில் மணி ஐந்தே முக்கால். திலகா கணவன் வர காத்திருக்கிறாள். திருமண நாளின் முக மலர்ச்சி. தலை நிறைய மல்லிகைப் பூ.
“அம்மா… அப்பா இன்னும் வரல்லியா?“ என்று கேட்டபடியே கோகுல் அம்மா தந்த டம்ளர் பாலை வாங்கிக் குடிக்கிறான். “காலைல போனவரு, சீக்கிரம் வரேன்னுட்டுப் போனார். ஆளையே காணம். நல்ல நாள்னாவது சீக்கிரம் வரக் கூடாதா?“ என சலித்துக் கொள்கிறாள் திலகா.
“உன் பொறந்த நாளைக்கும் இப்படித்தான் பண்ணினார். வெளியே  இறங்கினால் அவருக்கு வீடே மறந்துர்றது அக்கா“ என்கிறான் சிகாமணி. “ஏன்க்கா நீ இன்னிக்கு அவரை லீவு போடச் சொல்லி யிருக்கலாமே?“
“என்னிக்குடா அவர் லீவு போட்டிருக்கார். பொறந்த நாள், கல்யாண நாள்னா… அது ஒரு விஷயமா? எதும் சாதிச்சால் அதுதான் கொண்டாடற நாள். மத்தபடி இதுக்கெல்லாம் லீவாவது?... அப்டின்னுவார்.“ என்றவள் மெல்ல புன்னகை செய்கிறாள்.
“என்னக்கா?“
“இல்ல. கைகேயி மாதிரி நான் இன்னிக்கு அவர்கிட்ட ஒரு வரம் கேட்டேன். அதான்… பயந்திட்டாரா தெரியல்ல.“
“என்ன வரம்?“
“என்னையும் ரெண்டு வருஷம் முன்னாடி அழைச்சிட்டுப் போங்கன்னேன்…“
“என்ன சொன்னார்?“
அப்போது கதவு தட்டப் படுகிறது. வாசலில் கணபதியின் குரல் “என்ன வேலை முடிஞ்சி வந்தாச்சா?“
“அக்கா அத்தான் வந்திட்டார்… நீ கவலைப்படாதே. நான் அவரோட பேசறேன்.“
உற்சாகமாக ராமசாமி உள்ளே நுழைகிறான். “ஹாய் சிகா…“
“அதெல்லாம் இருக்கட்டும்…“ என்று என்னவோ சொல்ல வந்தவன் ராமசாமி கை கடிகாரத்தைப் பார்த்து விட்டு, “இதென்ன புது கடிகாரம் அத்தான் கையில?“
“புதுசும் இதுவே. பழையதும் இதுவே…“
“உளரல் திலகம்னு இவருக்குப் பட்டமே குடுக்கலாம்டா.“ திலகா திரும்பிப் பார்க்கிறாள். “இதே மாதிரி  ரெண்டு வருஷம் முந்தி நம்ம கல்யாண நாள் வந்ததே அப்ப நான் வாங்கித் தந்தேன்… போலருக்கே?“
“அதே தான்“ என்கிறான் ராமசாமி.
“என்ன சொல்றீங்க?“
“அதே போலத்தான் இருக்குன்னு சொல்ல வந்தேன்.“
“அது எங்கியோ தொலைஞ்சி போச்சின்னு தானே வேற வாங்கினீங்க?“
“அது…“ என ராமசாமி சிரிக்கிறான். “இந்த வாட்ச்சை எங்கியோ வெச்சிட்டேன். இதைத் தேடினேனா…“
“பழைய வாட்ச் கிடைச்சிட்டதாக்கும்.“ என்கிறாள் திலகா.
“ஆகா. என் மனைவி மாதிரி புத்திசாலி உலகத்தில் இல்லை.“
“இன்னிக்குக் கல்யாண நாள் உங்களுக்கு. இன்னிக்கு ஒருநாளாவது அக்காவை எங்காவது வெளியே கூட்டிட்டுப் போகக் கூடாதா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
“இன்னிக்கு ஒரு நாளாவது லீவு போட்டிருக்கக் கூடாதா? அதையும் கேளுடா“ என்கிறாள் திலகா.
“இன்னிக்கு நான் லீவு தான்“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு நானும் இவளும் ஒரு இடம் போயிட்டு வந்தோம்…“ என்றவன், சேவைக்கரங்கள் இல்லத்தில் பாடிய பிரார்த்தனைப் பாடலின் ஒரு வரி பாடுகிறான்.
“என்ன பாட்டு இது?“ என்று கேட்கிறான் சிகாமணி.
“நல்லா இருக்கா?“
சிகாமணி பதில் சொல்லுமுன், திலகா, “இன்னிக்கு லீவா நீங்க?“
“ஆமாண்டி என் கண்மணி…“ என அவள் கன்னத்தைக் கிள்ள வருகிறான்.
“லீவு போட்டுட்டு எங்க போனீங்க?“
“லீவு போட்டேனா…. நான் இங்க தான் வந்தேன்…“ என்று ராமசாமி சிரிக்கிறான்.
“பொய்.“
“சத்தியம்“ என்கிறான் ராமசாமி.
“பொய்சத்தியம்“ என்கிறான் சிகாமணி.
“சத்தியமா இது பொய்“ என்கிறாள் திலகா.
“வந்து உன்னை, நான் வாக்கு தந்தபடி… வெளியே கூட்டிட்டுப் போனேன்.“
“ரெண்டு வருஷம் முன்னாடி வந்தீங்களா?“ என அவள் திகைப்புடன் கேட்கிறாள். “அப்ப நான் எப்பிடி இருந்தேன்?“
“அதுவா இப்ப முக்கியம்?“ என்கிறான் சிகாமணி.
“உன் தங்கச்சி மாதிரி இருந்தே“ என்கிறான் ராமசாமி.
“எனக்கும் அவளுக்கும் ஆகறது இல்லை“ என்கிறாள் திலகா.
“உங்களை நம்பறதா வேணாமான்னே நாங்க குழம்பி, எங்களுக்கே பைத்தியம் பிடிச்சிரும் போல இருக்கு அத்தான்“ என்கிறான் சிகாமணி. “ஆனால் அக்கா…“ என்று திலகா பக்கம் திரும்புகிறான். “அந்த ரமேஷ்-அப்பா சாவின் போது…“
“சொன்னியேடா“ என்கிறாள் திலகா.
“என்ன டிவிஸ்ட் இல்லே? அது பாக்கும் போது… எனக்கு நம்பலாமாட்டம் இருக்கு“ என்கிறான் சிகாமணி.
“இந்த மாதிரி திருப்தியா நான் என் கல்யாண நாளைக் கொண்டாடியதே இல்லை“ என்கிறான் ராமசாமி. மேசையில் அமர்ந்து வரையும் தாளை எடுக்கிறான்.
“என்ன அத்தான்….“
“வரைஞ்சி பாத்து ரொம்ப நாள் ஆச்சிடா“ என்கிறான் ராமசாமி. ‘சேவைக் கரங்கள் பிரார்த்தனைப் பாடலின் இன்னொரு வரி தன்னைப் போல வாயில் வருகிறது.
“இந்தப் பாட்டை எப்பவோ நான் கேட்டாப் போல இருக்கு“ என்கிறாள் திலகா.
“என்ன சார்? ஒரே பாட்டும் உற்சாகமுமா இருக்கீங்க?“ என்று வாசலில் இருந்து கணபதி கேட்கிறார். “கல்யாண நாள் குஷியா?“ படம் வரைந்தபடியே ராமசாமி தலையாட்டி அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
“எதையாவது ரெஃபரன்ஸ் வெச்சிக்கிட்டு வரைவீங்களா, அல்லது ஜஸ்ட் லைக் தட் கை போன போக்கா?“
“உள்ள வாங்க“ என்கிறாள் திலகா.
“இல்லம்மா. பரவால்ல… சார் வேலையா இருக்கார்“ என்று கணபதி தயங்குகிறார்.
“பரவால்ல வாங்க கணபதி“ என அழைக்கிறான் ராமசாமி.
“எப்பவாவது பார்த்து மறக்க முடியாத முகம் இருந்தால் அதை நினைவுக்குத் திரும்பக் கொண்டு வந்து வரையறது எனக்குப் பிடிக்கும் சார். பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில் இருந்தே எதாவது படம், சுவரில் போஸ்டர் மாதிரி எதாவது, பார்த்தால் அதை அப்படியே மனசில் குறிச்சுக்குவேன். வீட்டுக்கு வந்து வரையும் போது எவ்வளவு ஞாபகம் வருதுன்னு செக் பண்ணிக்குவேன்…“
பேசியபடி கை தன்னைப் போல வரைகிறது. அது ஒரு சிறு பெண் குழந்தையின் படம். காதுகளில் டோலாக்கு. முகம். மூக்கு. நெற்றி. புருவம். “விறுவிறுன்னு வரையறீங்களே?“ என்று சிரிக்கிறார் கணபதி.
“ஞாபகத்தில் இருக்கிறதை யோசிச்சிக்கிட்டே வரைகிறேன்…“
கன்னத்தில் கோடு வரைகிறான். சிரித்தாப் போல கண்கள்.. ”ஹா“ என்கிறார் கணபதி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “காமாட்சி?“ என்று சத்தமாய்க் கூப்பிடுகிறார்.
என்னவோ ஏதோ என்று பயந்துகொண்டு கணபதியின் மனைவி வாசலில் இருந்து எட்டிப் பார்ககிறாள். “என்னங்க?“
“இங்க வா…“
காமாட்சி உள்ளே வருகிறாள். ராமசாமி வரைந்து கொண்டிருக்கும் படத்தைப் பார்த்து விட்டு அவளும் “ஹா“ என்கிறாள்.
“படம் அத்தனை தத்ரூபமா இருக்கு இல்லே?“ என்கிறான் சிகாமணி.
“இந்தப் பொண்ணு அழகா இருக்கா இல்லே?“ என்கிறான் ராமசாமி வரைந்து கொண்டே.
கணபதி கண்ணில் கண்ணீர். “சார்… சார்… இது… இது எங்க பொண்ணு சார்…“ சொல்லும்போதே அவர் குரல் தழுதழுக்கிறது.
‘ராமசாமி ஒரு துள்ளலுடன் திரும்புகிறான். “இது உங்க பொண்ணா?“
“ஆமா சார்.“
“கவலைப் படாதீங்க. உங்க பொண்ணு கெடச்சிட்டா…“ என்று கையைப் பிடித்துக் கொள்கிறான் ராமசாமி.
“எங்க பொண்ணு எங்க இருக்கா?“ என்று கேட்கிறாள் காமாட்சி.
“உங்க பொண்ணு பேர் என்ன?“
“ராணி.“
“ஒரு நிமிஷம்“ என ராமசாமி தொலைபேசிக்குப் போகிறான். கணபதி காமாட்சி கையைப் பிடித்துக் கொள்கிறார். “சனிஸ்வரனுக்கு எண்ணெய்க் கிழி போட்டது வீண் போகல்லடி…“
“ஹலோ சேவைக் கரங்களா?“ தொலைபேசியில் பேசுகிறான் ராமசாமி.
“ஆமா சார்.“
“அங்க ராணின்னு ஒரு குழந்தை…“
“இருக்கு சார்.“
“சரி நாங்க இப்பவே அங்க வரோம்.“ ராமசாமி வந்து கணபதியைக் கட்டிக் கொள்கிறான். “வாங்க போகலாம்…“
திலகா எதுவும் புரியாமல் திகைக்கிறாள். “திலக். நம்ம கல்யாண நாளில் எத்தனை நல்ல விஷயம் நடக்குது பார்…“
“என்ன சொல்றீங்க?“
“சிகாமணி, ஒரு கால் டாக்சி கூப்பிடுறா…“ என்கிறான் ராமசாமி.
சேவைக் கரங்கள் இல்லம். வாசலுக்கே வந்து சாரங்கநாதன் வரவேற்கிறார். “உங்க பேரைச் சொல்லி இன்னிக்கும் குழந்தைகள் வயிறாற சாப்பிட்டாங்க சார்…“
“அதைவிட முக்கியமான விஷயம் இருக்கு சாரங்கநாதன்…“ என்கிறான் ராமசாமி.
உள்ளே எல்லாரும் பரபரப்பாக நுழைகிறார்கள். ராணி அங்கே யாரோ வந்திருக்கிறார்கள் என்று பார்த்தபடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறாள். கணபதியைப் பார்த்த கணம் அவளுக்கு அடையாளம் தெரிகிறது. “அப்பா?“ என ஓடி வருகிறாள். அதைப் பார்த்தபடி காமாட்சி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறாள். “உன்னை இனிமே பார்க்கவே மாட்டோமேன்னு ஆயிட்டதேடி எங்களுக்கு…“ என குழந்தையைக் கட்டிக் கொண்டு அழுகிறாள் காமாட்சி.
கட்டை விரலை உயர்த்தி திலகாவிடம் காட்டுகிறான் ராமசாமி. “வெல்டன்“ என அவன் இடுப்பைக் கிள்ளுகிறாள் திலகா.
“வெல்டன் இல்ல. இது இடுப்பு“ என்கிறான் ராமசாமி.
“நல்லவேளை. ஜெட்டின்னு சொல்லாம விட்டீங்களே?“
“டான்டெக்ஸ்“ என அவன்மேலும் சீண்டுகிறான்.
சிகாமணி அருகே வந்து அத்தான் பக்கம் நிற்கிறான். கணபதியையும் காமாட்சியையும் குழந்தையையும் பார்த்தபடியே அவன் பேசுகிறான். “குழந்தை இங்க இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது அத்தான்?“
“அடேய் ஒரு தடவை பார்த்தால் மறக்கும். நான் இந்தக் குழந்தையை ரெண்டு தடவை பார்த்திருக்கேன்…“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“அது ஒரு தடவை.“
“இன்னிக்கு?“ என்கிறாள் திலகா புருவம் உயர்த்தி. “இன்னிக்கு ரெண்டாவது தடவை. ஆமாண்டி ஆமாம்“ என்கிறான் ராமசாமி.
“வாப்பா நம்ம வீட்டுக்குப் போலாம்“ என்கிறாள் ராணி. “போலாம் போலாம்“ என தூக்கிக் கொள்கிறார் கணபதி. கையில் கொண்டு வந்திருந்த ஆப்பிளை அதற்குத் தருகிறார். வாயை வைத்து ஆசையாய்க் கடிக்கப் போகிறாள் ராணி. சட்டென நிற்கிறாள். “மேகலா?“ என்று திரும்பிக் கூப்பிடுகிறாள் ராணி.
“யாரது மேகலா?“ என்று கேட்கிறாள் காமாட்சி.
“இல்லத்தில் இருக்கிற இன்னொரு பொண்ணு… அவளும் இவளும்தான் ரொம்ப சிநேகம்“ என்கிறார் சாரங்கநாதன்.
ராணி “ஒரு நிமிஷம் அப்பா“ என்று உள்ளே மேகலாவைத் தேடிப் போகிறாள்.
மேகலா உள்ளறையில் குப்புறப் படுத்து அழுது கொண்டிருக்கிறாள்.
“என்னாச்சி மேகலா? இங்க பாரு…“
“ஒண்ணும் வேண்டாம் போ“ என முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள் மேகலா.
“இந்தாடி ஆப்பிள்.“
“வேணாம்..“
“ஏன் வேணாம்?“
மேகலா பதில் சொல்லவில்லை.
“அப்ப எனக்கும் வேணாம்…“ என ராணி அந்த ஆப்பிளை கட்டில் ஒரத்தில் வைக்கிறாள். மெல்ல மேகலாவைத் தொடுகிறாள். மேகலா விக்கி விக்கி அழ ஆரம்பிக்கிறாள்.
அதற்குள் கணபதியும் மற்றவர்களும் அந்த அறைக்குள் வந்து விடுகிறார்கள்.
“என்ன ராணி?“
“பாவம்ப்பா மேகலா…“ கணபதி ராணியைப் பார்க்கிறார். “அவளுக்கும் அப்பா அம்மா யாருமே இல்லப்பா…“
“பாவம்“ என்றபடி காமாட்சி போய் மேகலாவைத் தூக்கிக் கொள்கிறாள். மேகலா அப்படியே பின்பக்கமாக விரைத்துக் கொள்கிறாள்.
“நான் உங்க கூட வரல்லப்பா“ என்கிறாள் ராணி. “ஏன்டி?“ எனப் பதறுகிறார் கணபதி. “மேகலா இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்ப்பா“ என்கிறாள் ராணி. “அவளுக்கு யாருமே இல்லப்பா. எனக்கு அப்பா அம்மா கெடச்சிட்டாங்க. அவளுக்கு?“ என்கிறாள்.
“அவளுக்கும் கெடச்சிட்டாங்க“ என்று காமாட்சி மேகலாவுக்கு முத்தங் கொடுக்கிறாள். மேகலா விரைத்தபடி காமாட்சியைப் பார்க்கிறாள்.
“ம்?“ என்பது போல மேகலா காமாட்சியைப் பார்த்துத் தலையாட்டி கேள்வி கேட்கிறாள். “ம்…“ என காமாட்சி அவள் தலையைத் தடவிச் சிரிக்கிறாள்.
“ஐ“ என ராணி கை தட்டுகிறாள். எல்லாரும் கூடவே கை தட்டுகிறார்கள்.
“அம்மா…“என்கிறாள் மேகலா. “ஆமாண்டி என் தங்கமே“ என்கிறாள் காமாட்சி. “அம்மா…“ என மேகலா அவளைக் கட்டிக் கொள்கிறாள்.
அதைப் பார்த்து ராணி சிரிக்கிறாள்.
சாரங்கநாதன் சந்தோஷமாய்த் தலை யாட்டுகிறார். ராமசாமியிடம் “திடீர்னு எங்க ஞாபகம் எப்படி வந்தது உங்களுக்கு…“
“அது ஒரு பெரிய கதை“ என்கிறான் சிகாமணி.
அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். ராணி அந்த ஆப்பிளை ஒரு கடி கடித்து விட்டு மேகலாவிடம் தருகிறாள். மேகலா அதை வாங்கி அவளும் ஒரு கடி கடிக்கிறாள்.
“இதெல்லாம் பொய்“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “சத்தியம்“ என்கிறாள் திலகா. “வெல்டன்“ என்கிறாள். “இடுப்பு“ என்கிறான் ராமசாமி. சிரிக்கிறாரகள்.
ராமசாமி வீடடுக்குப் பக்கத்து கணபதி வீடு. வாசலில் கதவுக்கு மேலே ஒரு படம். ராமசாமி வரைந்தது.
அதில் ராணிக்கு அருகே மேகலாவின் முகம் வரைந்திருக்கிறது.


daily update each chapter available at
vasikarapoikal.blogspot.com

No comments:

Post a Comment