Thursday, September 10, 2015

(bulk chapters updated on Tuesday & Friday) - அத், 11 முதல் 15 வரை

திரைப்பட வியூகத்தில் வளரும் நாவல்
வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 11
 ஷுட்டிங் ஸ்பாட். பேய்ப்படம் ஒன்று எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தி இருள் சூழும் நேரம். சிகாமணி முதல் நாள் வேலைக்கு வந்திருக்கிறான். தயாரிப்பாளர் தவிர வேறு யாரும் தெரிந்த முகம் இல்லை. மனம் நிறைய மகிழ்ச்சி. “வணக்கம் சார்,“ என்கிறான் தயாரிப்பாளரிடம். தலையாட்டுகிறார்.
“இந்தப் படத்தின் கதை என்ன சார்?“
“பேய்ப்படம் தம்பி.“
“செலவு மிச்சம் சார்.“
“ஏன்?“
“கதாநாயகிக்கு மேக் அப்பே போட வேண்டாம்.“
தயாரிப்பாளர் முகம் மாறுகிறது. “ஜோக் சார்“‘ என்கிறான் சுதாரித்து. தலையாட்டுகிறார். பக்கத்தில் கதாநாயகிக்கு மேக் அப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவளைப் பார்க்கிறான். “கதாநாயகிக்கு மேக் அப் வேணாம். பேய்க்குதான் தேவை“ என சிரிக்கிறான். அவள் அதை ரசிக்கவில்லை.
“என்ன சொன்னாலும் இவங்க சிரிக்க மாட்டாங்களா?“
“அவங்களுக்குத் தமிழே தெரியாதுய்யா…
“இவங்க கதநாயகியா பேயா?“ என அங்கிருந்த மற்றொரு உதவி இயக்குநரிடம் விசாரிக்கிறான். “கொஞ்ச நேரம் பேசாமல் இருய்யா…“ என்கிறான் அவன்.
படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிறது. கதாநாயகி வீடு செட்.
ஸ்டார்ட். கேமெரா. ரோலிங். ஆக்ஷன்…
ஜன்னல் கதவு படபடக்கிறது. வெளியே இருந்து ஒரு ராட்சச விசிறி சுழல ஆரம்பிக்கிறது. ஊய்யென்று காற்று. ஜல் ஜல் என்று சலங்கை ஒலி கேட்கிறது. ஜன்னல் வழியே ஒரு வெள்ளைத் துணி அசைவதைப்போல பேய்… அடுத்த காட்சி. கதாநாயகி பயத்துடன் ஜன்னலைப் பார்க்கிறாள். காமெரா மெல்ல அவளை நோக்கி வருகிறது.
“கட் கட்“ என்று சிகாமணி கத்துகிறான். சட்டென விளக்குகள் எரிகின்றன. “என்னாச்சி?“ என இயக்குநர் திரும்பிப் பார்க்கிறார். கதாநாயகி “HA I DID WELL. NOW I HAVE TO DO IT AGAIN“ என முணுமுணுக்கிறாள்.
“ஜல் ஜல்னு சலங்கை ஒலி போட்டீங்களே?“
“ஆமாம்.“
“பேய்க்குக் கால் கிடையாதே? சலங்கையை எப்பிடிக் கட்டிக்கும் சார்?“
“அட யாராவது கட்டி விடுவாங்கய்யா.“
“அதில்ல சார். கால்ல தானே சலங்கை கட்டிக்கணும். அதுக்குக் காலே கிடையாதே.“
இயக்குநர் தலையில் அடித்துக் கொள்கிறார். “அட அது எஃபெக்ட்டுக்குய்யா. அப்பதான் காட்சில திகிலைக் கிளப்ப முடியும்…“
“சலங்கை கட்டிய பேய் தரையில் நடக்காமல், ஜன்னல் வழியே உள்ள வருதே சார்… அதுவும் சரியான்னு… ஒரு சந்தேகம் சார்.“
“எடுக்கறதே பேய்ப் படம். அதுல லாஜிக் வேறயா?“ என்கிறார் இயக்குநர்.
“நம்ப முடியாத கதையைக் கூட நம்பறா மாதிரிச் சொல்லணும். அதானே சார் சினிமா.“
“யார் இந்தாளை உள்ள விட்டது?“ என அவர் தயாரிப்பாளரைக் கேட்கிறார்.
“நான் பேய். எனனை யாரும் உள்ளே விட வேண்டியது இல்லை…“ என்றபடி கதாநாயகியைப் பார்ககிறான். “எனக்குப் பேயைப் பார்த்துக் கூட பயமா இல்லை. இவங்களைப் பார்த்துதான் பயமா இருக்கு…“ என வெளியேறுகிறான்.
வங்கி. மேனேஜர் ராமகிருஷ்ணன். நிகழ்காலம். “இருப்பேன். இருப்பேன். எப்ப வரீங்க? கண்டிப்பா இருப்பேன். சார். நீங்க டெபாசிட் பண்ண வரேன்றீங்க. நீங்கதான் சார் எங்களுக்குக் கடவுள்… வாங்க வாங்க“ என்றபடி தொலைபேசியை வைக்கிறார்.
ராமசாமியை அழைக்கிறார். “என்ன சார்?“ என்றபடியே உள்ளே வருகிறான்.
“ஒரு உபகாரம். ஆஃப் கோர்ஸ் நாட் அஃபிசியல்…“ என்கிறார்.
“சொல்லுங்க சார். அதைப் பத்தி என்ன?
“என் பையன். எட்டாங் கிளாஸ். ஒரு பிராஜக்ட்.“
“படம் கிடம் வரையணுமா சார்?“
“புரிஞ்சிக்கிட்டே தேங்க் யூ.“
“நான் வரைவேன்னு யார் சார் சொன்னா?“
“உன் ஒய்ஃபும் என் ஒய்ஃபும் கோவில்ல சந்திச்சிப் பேசிக் கிட்டபோது உன் ஒய்ஃப் தான் சொல்லிப் பெருமைப் பட்டுக்கிட்டா போலருக்கு…“
“எல்லாருக்கும் ஹீரோ ஆன அந்த ஆஞ்சநேயர் எனக்கு வில்லனா ஆயிட்டாரே…“ என் சிரிக்கிறான் ராமசாமி. “செஞ்சி தர்றேன் சார்.“
உள்ளே ரமேஷும் ராமசாமியும் மும்முரமாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பியூன் கிளியரிங் செக்குகளை டிராப் பாக்சில் இருந்து எடுத்து ஒரு ட்ரேயில் போட்டு ஒரு கம்பியூட்டர் பக்கம் எடுத்து வைத்துவிட்டுப் போகிறான்.
மதிய இடைவேளை. அவரவர் உணவு டப்பாக்களைப் பிரிக்கிறார்கள். “உங்க அப்பாவுக்கு எப்பிடி இருக்கு ரமேஷ்?“
“எழுந்து நடக்கவே இப்பவெல்லாம் முடியல. யாராவது கூட உதவிக்கு வேண்டியிருக்கு. பாத்ரூம் வரை போகக் கூட என் தோளைப் பிடிச்சிக்கிட்டே போயிட்டு வராரு…“
“ச். பாவம்.“
“என்ன உதவின்னாலும் நான் வர்ற வரை காத்திட்டிருக்காரு. அண்ணன் கிட்ட கேட்க மாட்டாரு.“
“உங்க அண்ணன்… எப்ப அவர் சாகப் போறார்னு எதிர்பாத்திட்டிருக்கானா?“
“அவன் அப்பா இருக்கிற அறைப் பக்கமே வர்றது இல்லை. எனக்கென்னமோ அப்பா இருக்கற போதே இந்த வீடடை விலை பேசி வித்திறலாம்னு அவன் என்னவோ பிளான்ல இருக்கிறாப் போல இருக்குடா.“
“நீ தான் உஷாரா இருக்கணும். அப்பாவை அவன் கட்டாயப் படுத்தி மிரட்டிக் கூட எதையாவது செய்திருவான்… அவனே அவருக்குப் பாதி வியாதிடா. என்னைக்கேட்டால் அவனை நம்பி அவரைத் தனியா விட்டுட்டு நீ ஆபிஸ் வர்றதே கூட ரிஸ்க்தான்.“
“நான் என்ன பண்ணட்டும் சொல்லு. அண்ணனை எதிர்த்துப் பேசிப் பழக்கமே கிடையாது எனக்கு…“ என்றவன், “என் கதையை விடுறா. அதுக்கு முடிவே கிடையாது. உன் கதை பேசு. இப்ப எப்பிடி இருக்கு?“
“எது?“
“என்னன்னு நீதான் சொல்லணும். அடிக்கடி லீவு போடறே. எங்க போறே எங்க வர்றேன்னு தெரியல. உன் மனைவிக்குக் கூடத் தெரியாது இல்லியா?“
ராமசாமி புன்னகை செய்கிறான். “முந்தா நேத்து ஒரு வழியா அவ கிட்ட மாட்டிக்கிட்டேன். அவள் பாங்க்குக்கு போன் பண்ணியிருக்கிறாள். நம்ம மேனேஜர் தான் எடுத்தார் போல…“
“ஓகோ.“
“வேலைக்கே வரல்லன்னு சொல்லிட்டார்.“
“மாட்டினியா?“
“பெரிசா ஒண்ணும் மாட்டல. நேத்து ரொம்ப உடம்ப அசத்திட்டது. நான் காலை ஒன்பது மணி வரை அடிச்சிப் போட்டாப் போல தூங்கியிருக்கேன். இவளே எனக்கு லீவு சொல்லிட்டா.“
“ஆமாம். அந்த போனை நான் தான் எடுத்தேன். சரிடா. லீவு போட்டுட்டு என்ன பண்றே? எங்க போறே? சின்ன வீடு எதும் செட் அப் பண்ணிட்டியா?“ என்று சிரிக்கிறான்.
“சொல்லவா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “லீவு போட்டுட்டு எங்க போறேன்னு தானே கேட்டே இங்க தான் வரேன்.“
“இங்க தான்னா?“
“இங்க. நம்ம ஆபிசுக்கு…“
“அப்ப எப்பிடி லீவுன்றே?“
“அதான் கூத்துன்றது.“
“வந்து என்ன பண்றே?“
“வேலை பார்ககிறேன்…“
“வேலையா?‘ என்ன வேலை?“
“இதே வேலை. டிராஃப்ட் எழுதறது. எட்செட்ரா.“
“உன்கூட இதுதான் சங்கடம். நீ பேச ஆரம்பிச்சால் உண்மையாப் பேசிறியா டூப் விடறியான்னே தெரிய மாட்டேங்குது.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “நான் உண்மை பேசினால் யாரும் நம்ப மாட்டேங்கறாங்க. நான் பேசற உண்மைதான் குழப்பமா இருக்கு எல்லாருக்கும். அதுனால, என் சஸ்பென்ஸ் என் கூடவே இருக்கட்டும். சரியா?“
“உன் சஸ்பென்ஸ் நாசமாப் போக…“ என்கிறான் ரமேஷ். “சரி. நீ லீவு போட்டுட்டு இங்கியே வரே, வந்து வேலை பாக்கறே…“
“ஆமாம்.“
“அப்ப நான்?“
“நீ லீவு போடாமலேயே இங்க வேலைக்கு வரே. வேலை பாக்கறே…“
“ஆனால் நான் உன்னை பார்க்கறதே இல்லியா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி. “நாமளே புரிய வைக்கிறதை விட, அவங்களே புரிஞ்சிக்க வாய்ப்பு தரலாம். அதான் இப்பத்திய என் பாலிசி…“ என்றவன், “அவ்ளதான். வேற வழி இல்லை.“ ராமசாமி எழுந்து கொண்டு கை கழுவுகிறான்.
“என் மனைவி லேசா என்னை நம்ப ஆரம்பிச்சிட்டதாத் தெரியுது…“
அப்போது அவன் அலைபேசியில் அழைப்பு. திலகா தான். “இப்பதான் சொன்னேன். அதுக்குள்ள அவளுக்கு மூக்கு வேர்த்திட்டது போல. நான் வேலைக்கு வந்திருக்கேனான்னு சந்தேகமா?“ என சிரிக்கிறான். “என்ன திலக்?“
“உங்க தங்கை வந்திருக்கா.“
“மாதுரியா? குடு குடு…“
“தங்கைன்னா துடிக்குதோ?“ என்று திலகாவின் குரல். பிறகு சிறிது மௌனம். “அண்ணா?“ என்று மாதுரி.
“எப்பிடி இருக்கே மாது?“
“நல்லா இருக்கேண்ணா. நீ எப்பிடி இருக்கே?“
“ஜஸ்ட் புல்லிங் ஆன்…  உன் வீட்டுக்காரர் எப்பிடி இருக்கிறார்? குட்டி… எப்பிடி இருக்கு?“
“அவளுக்குதான் லேசா ஜுரம். சளிக்கட்டு போல இருக்கு. அப்பறம் அண்ணா? அவளுக்குதான் பேபி ஃபுட் இப்ப படு டிமாண்டா இருக்கு. எங்கயுமே கிடைக்கல்ல…“
“என்ன பேபி ஃபுட் குடுக்கறே?“
“ஃபேரக்ஸ் வெஜிடபிள்.“
“நான் இங்க கேட்டுப் பார்க்கறேன்…‘ சாய்ந்தரமா வாங்கிண்டு வரேன். இருப்பே இல்லியா?“
“இருப்பேன். இருப்பேன். நீ எக்ஸ்ட்ரா வேலை அது இதுன்னு தாமதம் ஆக்கிறாதே? அதுக்குதான் நான் வந்திருக்கேன்னு தகவல் சொன்னேன்…“
“சரி. சரி“ என அழைப்பைத் துண்டிக்கிறான்.
மாலை அலுவலகம் விட்டு வந்ததும் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கடை கடையாக விசாரிக்கிறான்.
“வாங்க சார் வாங்க வாங்க…“ என அழைக்கிறான் ஒரு கடைக்காரன். “நம்ம கடையில இல்லாத ஐட்டமே இல்லை சார்.“
“ரொம்ப சந்தோஷம். ஃபேரக்ஸ் வெஜிடபிள்.“
“அடடா“ என்கிறான் கடைக்காரன். “இப்ப பேபி ஃபுட் ஐட்டம்ஸ் எல்லாமே டிமாண்டு சார்…“
“எப்ப வரும்?“
“தெரியல சார். ஆர்டர் குடுத்திருக்கோம். நாலு நாள் ஆச்சி. இன்னும் வரல்ல. எங்கயுமே கிடைக்கல்லியே. இல்லாட்டி நாங்க கஸ்டமரை விட மாட்டோம். நாங்களே பையனை அனுப்பி வாங்கிக் கைல குடுத்துருவோம். வேற எதாவது வேணுமா சார்?“
“இல்ல வேணாம்…“ என்றபடி வெளியே வருகிறான்.
இரவு. அலுப்புடன் வீடு திரும்புகிறான். கதவைத் தட்டிவிட்டுக் காத்திருக்கிறான். “அண்ணா வந்தாச்சி“ என உள்ளே யிருந்து குரல். “வந்து சிரிப்புடன் கதவைத் திறக்கிறாள் மாதுரி. “எப்பிடி இருக்கே அண்ணா? சிக்கிரம் வந்துருவேன்னு பார்த்தேன்… எட்டு மணி ஆயிட்டதே?“
“ஹா“ என்றபடி உள்ளே வருதல். “உனக்காகத்தான் அலைஞ்சிட்டு வரேன். எங்கயுமே கிடைக்கல்ல.“
“என்ன?“
“பேபி ஃபுட்.“
“எங்கிட்டயும் ஸ்டாக் தீரப் போறது. இன்னும் ஒருநாள் வரும் அவ்ளதான்.“
திலகா “காபி?“ என்கிறாள். பிறகு அவளே மாதுரியிடம் “இவர் காபிக்கு மாத்திரம் எப்பவும் நோ சொல்றதே இல்லை“ என புன்னகை செய்கிறாள்.
சட்டென பிரகாசமாகி எழுந்து கொள்கிறான் ராமசாமி. “நோ“ என்கிறான்.
“என்ன நோ?“
“காபிக்கு நோ.…“ என விறுவிறுவென்று வெளியேறுகிறான். “என்னாச்சி?“
“டின்னோட வர்றேன்…“ என வெளியே போகிறான்.
“அட எங்க போறான் இப்போ? காலைல பாத்துக்கக் கூடாதா?“ என்கிறாள் மாதுரி.
லிஃப்ட். மைனஸ் 1 காட்டுகிறது. வெளியே வந்து விறுவிறுவென்று நடக்கிறான்., முன்பு விசாரித்த அதே கடை.
“வாங்க வாங்க“ என்கிறான் கடைக்காரன். “நம்மட்ட இல்லாத ஐட்டமே இல்லை சார்“ என புன்னகை செய்கிறான். “பையா சாரை கவனி?“
“என்ன வேணும் சார்?“ என ஒரு பையன் அவன் பக்கமாக வந்து நிற்கிறான்.
“ஃபேரக்ஸ் வெ4டபிள்.“
“எத்தனை வேணும் சார்?“
“ரெண்டு.“
வீடு. உற்சாகமாக “இந்தா“ என தங்கையிடம் நீட்டுகிறான். அவள் ஆச்சர்யத்துடன் வாங்கிக் கொள்கிறாள். “நானும் அண்ணியும் தேடாத கடை இல்லை. ஏறி இறங்காத இடம் இல்லை. உனக்கு மாத்திரம் எப்பிடி கிடைச்சது?“
“நீங்க எந்தக் கடையில் கேட்டீங்க?“
“நீங்க எந்தக் கடையில வாங்கினீங்க?“ என்று கேட்டாள் திலகா.
“பால்ராஜ் ஸ்டோர்ஸ்.“
“நாங்க அங்கயும் கேட்டோமே…“ எனறாள் மாதுரி. “ஒருவேளை அண்ணா பாங்க் அது இதுன்னு மஸ்கா பண்ணி வாங்கிட்டு வந்துட்டானா?“
சிரிக்கிறான் ராமசாமி. மாதுரி டின்னைத் தலைகீழாகப் பிடித்து எக்ஸ்பிரி டேட் பார்க்கிறாள். “எக்ஸ்பிரி டேட். நானே பாத்துதான் வாங்கினேன்“ என்கிறான் ராமசாமி.
‘மாதுரி மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை நகர்த்தி விட்டு எழுந்து உள்ளே போகிறாள். “எப்பிடிங்க?“ என்று கேட்கிறாள் திலகா. “எனக்கு என்ன தோணுதுன்னால்…“
“அதே தான்“ என்கிறான் ராமசாமி.
“ஆனால்…“ என்கிறாள் திலகா. சிரிக்கிறார்கள்.


அத்தியாயம் 12
கடந்த காலம். வங்கி. மேனேஜர் கிருஷ்ணராஜ் எப்பவுமே சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்குத் தவறாமல் வருகிறவர். உள்ளே நுழையும் போதே வெளியே காத்திருக்கும் அந்தத் துரு துரு பெண்ணைப் பார்த்தபடியே நுழைகிறார். இந்த அதிகாலையில் வங்கியில் இவளுக்கு என்ன தேவை இருக்கிறது, என அவருக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. பணம் தேவை என்றால் கூட ஏடியெம் இருக்கிறது வெளியே. எடுத்துக் கொண்டு போய்ட்டே இருக்கலாம்.
அவளைத் தாண்டிப போகையிலேயே ஒரு நறுமணம் அவரைச் சூழ்கிறது. அதை அனுபவித்து மூச்சிழுத்தபடியே தன் இருக்கைக்கு வருகிறார். வந்து தன் இடத்தில் அமர்ந்து மேசைக் கம்பியூட்டரை ஆன் செய்கிறார். பிறகு எழுந்து போய் தன் அறை விளக்குகளை, மின் விசிறியைப் போடப் போகிறார். முதுகுப் பக்கமாய் அந்த வாசனை மீண்டும் எழுகிறது. ஹா… என அனுபவிக்கிறார். சிரிப்புடன் திரும்புசிறார். அறைக்கு வெளியே அந்தப் பெண்.
“எஸ்?“
“குட் மார்னிங் சார்.“
“வெரி குட் மார்னிங்.“
“உள்ள வரலாமா சார்.“
“வாங்க வாங்க…“ என மேசைக்கு இந்தப் பக்க இருக்கையைக் காட்டுகிறார். “YES. WHAT YOU CAN DO FOR ME?“
அவள் அழகாகச் சிரிக்கிறாள். “நீங்க வேடிக்கையா இப்பிடிச் சொன்னாலும்… உங்க கேள்வியும், எதிர்பார்ப்பும் சரியானது தான் சார்.“
“I DON’T GET YOU.’’
அவள் மேலும் சிரிக்கிறாள். “ஸ்வீட் எடுத்துக்கோங்க.“ அவள் ஒரு இனிப்புப் பெட்டியைத் திறந்து நீட்டுகிறாள்.
“என்ன விசேஷம்மா.“
“இன்னுமா GUESS பண்ண முடியல உங்களால?“
“முடியுது. ஆனால்…“
“ஆனால் என்ன சார்?“
“நான் எதாவது தப்பா GUESS பண்ணிட்டால்?“ என்று சிரிக்கிறார். “அதுனால… WHY TO TAKE CHANCES? நீயே சொல்லிடு…“
“இந்த பிரான்ச்ல எனக்கு வேலை போட்டிருக்காங்க சார். இன்னில இருந்து… I AM AT YOUR SERVICE“ என்றபடி அவள் ஒரு  பணி ஆணைக் காகிதத்தை அவரிடம் தருகிறாள்.
“ஓ.? மகா லெட்சுமி?“
“இல்ல சார். நான் எம் மகா லெட்சுமி.“
“ஓ“
“இல்ல சார் எம்.“
“ம். அதை விடும்மா. நேத்தே எனக்கு FAX வந்தது. இப்ப நல்ல நேரம் தானா?“
“உங்ககிட்ட வேலை செய்ய வந்திருக்கேனே, அதுவே எனக்கு நல்ல நேரம் தான் சார்.“
“முதல் நாள். நல்லாப் பேசறே. இப்படிப் பேசற எத்தனையோ ஆள் என்னைக் கவுத்தி யிருக்காங்க.“
“நான்?“
“முதல்நாளே கவுத்திட்டே“ என்று சிரிக்கிறார்.
“நான் அப்படி இல்லை சார்…“ என்கிறாள் மகா லெட்சுமி. “என் சீட்….“
“வேலைக்கு உன் ஆர்வத்தை நான் பாராட்டறேன். இது கால காலத்துக்கும் தொடருமா தெரியல்ல… பரவால்ல. அதைப்பத்தி இப்ப பேச வேண்டாம். இனிதான் நம்ம ஸ்டாஃப் ஒவ்வொருத்தரா வருவாங்க.“
“மணி இன்னும் அஞ்சி நிமிஷம் இருக்கே சார்.“
“நீ சீக்கிரம் வந்திட்டியே?“
“நான் இடம் தேடி கண்டுபிடிச்சி வர வேண்டாமா சார்?“
“நாளைலேர்ந்து லேட்டா வருவேன்றியா?“
“அப்படி இல்லை சார்.“
“வெரி குட்.“
“மத்தவங்களைப் பாத்துட்டு, அதும்படி நானும் வருவேன்“ என திரும்பவும் மயக்கத் தக்க அளவில் ஒரு சிரிப்பு சிரிக்கிறாள்.
காதில் குண்டலங்கள். கழுத்தில் அலங்காரமான டிசைனில் நெக்லெஸ். கண்ணுக்கு மை தீட்டி யிருந்தாள். அழகான பெண் இவள், என நினைத்தார். அழகாய்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் தெரிந்தவள், என்று நினைத்தார். எல்லாரிடமும் சட்டென ஒட்டிக்கொள்ளும் பாந்தமான குணம் உள்ள பெண் என நினைத்தார். தான் எந்தப் பெண்ணைப் பற்றியும் பார்த்த முதல் பார்வையில் இவ்வளவு  யோசித்ததே கிடையாது, என நினைத்துச் சிரித்துக் கொண்டார்.
பியூன் ரத்தினம் உள்ளே வருகிறான். கிருஷ்ணராஜ் அவனிடம் “ராதிகா வந்துட்டாளா?“ என்று கேட்கிறார்.
“வந்தாச்சி.“
“கூப்பிடுய்யா.“
ராதிகா வருகிறாள். “இவங்க…“
“இவன்னே கூப்பிடலாம் சார்“ என்று சிரிக்கிறாள் மகா லெட்சுமி. மயக்கத்தக்க சிரிப்பு.
“இவ…“
“மகா லெட்சுமி?“ என்று ஒற்றை விரலை நீட்டிக் கேட்கிறாள் ராதிகா. இவளது ஒயிலைப் பார்த்ததும் அவளுக்கே ஒரு பெண்மையின் அலட்டல் வருகிறாப் போலிருந்தது.
“ஆமாம் மேடம்.“
“நான் ராதிகா. இங்க ஹொம் லோன்ஸ் அத்தோட கிளயரிங் பார்க்கிறேன்…“ என்று கையைப் பிடித்துக் கொள்கிறாள். “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே…“ என பிரியமாய் அவள் தோளைத் தொடுகிறாள்.
“தேங்ஸ் மேடம்.“
“மேடம் வேணாம். ராதிகா. எங்க அப்பாம்மா எதுக்குப் பேர் வெச்சிருக்காங்க? கூப்பிடத்தானே?“
“அப்பாம்மா வீட்ல உங்களை எப்பிடிக் கூப்பிடுவாங்க?“
“அது எதுக்கு?“
“சொல்லுங்க.“
“சுச்சுக் குட்டி… ஒவ்வொருவருக்கும் வீட்ல செல்லப் பேர் ஒண்ணு உண்டே. அதெல்லாம் கூப்பிடக் கூடாது“ என்கிறாள் ராதிகா. இருவரும் கலகலவெனச் சிரிக்கிறார்கள்.
மகிழ்ச்சியுடன் அவர்களைப் பார்க்கிறார் மேனேஜர். ராதிகா அவரைப் பார்த்தபடியே “எங்க மேனேஜர் ரொம்ப கண்டிப்பு“ என்கிறாள்.
“அப்படியா சார்?“ என்று மகா லெட்சுமி திரும்பி அவரைப் பார்க்கிறாள். “அதெல்லாம் முதல் நாளே எதுக்கு?“
“உங்களைப் பத்தி நான் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கேன் சார்.“
“அப்படியுமா இந்தக் கிளைக்கு வந்தே?“ என்கிறாள் ராதிகா. மேனேஜர் முறைக்கிறார். “JUST KIDDING’’ என்று சிரிக்கிறாள் ராதிகா.
“என்னன்னு கேள்விப்பட்டாய்?“ என்று மேனேஜர் மகா லெட்சுமியைக் கேட்கிறார்.
 இந்தக் கிளைக்கு BEST PERFORMANCE AWARD வந்திருக்கே. உங்களாலதானே?“ என்று புன்னகை செய்கிறாள் மகா லெட்சுமி.
“YOU ARE SOMEBODY’’என்கிறார் மேனேஜர்
ரமேஷ் வேலைக்கு என உள்ளே வருகிறான். கையில் ஹெல்மெட். அவன் இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் அவள். மகா லெட்சுமி. “ஹாய்“ என்கிறாள் கண்ணில் சிரிப்புடன். குழப்பமாய் அவன் ராதிகாவைப் பார்க்கிறான். “புதுசா நம்ம கிளைக்கு வேலைக்கு வந்திருக்கா. பேர்…“
“மகா லெட்சுமி“ என்கிறாள் மகா லெட்சுமி. இனிப்புப் பெட்டியை அவன் பக்கம் நீட்டுகிறாள். “உன்னை விட இனிப்பா உலகத்தில் என்ன?“ என்றபடியே அவன் ஒரு கட்டி இனிப்பு எடுத்துக் கொள்கிறான். “சுருக்கமா மகா. ரைட்?“ என சிரிக்கிறான் ரமேஷ். பிறகு ராதிகா பக்கம் திரும்பி “ராது உனக்கு டெபாசிட் காலி“ என்கிறான்.
‘மகா லெட்சுமி சிரிக்கிறாள். “FIXED டா, RECURRING கா?“
“என்னது?“
“டெபாசிட்“ என்கிறாள் மகா லெட்சுமி. எல்லாரும் சிரிக்கிறார்கள்.
“முதல்ல எளிமையான வேலை, கிளயரிங்… கத்துக்கோ இவளே“ என்கிறாள் ராதிகா. மகா லெட்சுமி தலையாட்டுகிறாள்.
ஒருவர் மேனேஜர் அறைக்குள் எட்டிப் பார்க்கிறார். “என்ன வேணும்?“
“லாக்கர்…“
“தோ. ராமு?“ என்று சத்தம் தருகிறார் மேனேஜர்.
“வந்திருவார் சார்…“ என்கிறான் ரமேஷ். பின் மகா பக்கம் திரும்பி, “நம்ம மேனேஜர் எப்படியாவது ராமுவைச் சரியான நேரத்துக்கு ஆபிசுக்கு வர வைக்கப் பார்க்கிறார்… அவரால முடியல்லியே“ என்று சிரிக்கிறான். மகா ஒப்பனை அறையைக் கேட்டுக்கொண்டு போகிறாள்.
ராதிகா ரமேஷைப் பார்த்துச் சிரிக்கிறாள். “மேக் அப் கொஞ்சம் கலைஞசால் கூட உடனே போயி சரி பண்ணிக்குவாளாட்டம் இருக்கு. அவ கைப்பையில் மேக் அப் சாமானே முழு இடத்தையும் பிடிச்சிக்கும் போலருக்கு…“
ராமசாமி வேலைக்கு வருகிறான். கிருஷ்ணராஜ்  கோபப்படுகிறார். “அடிக்கடி இப்பிடி லேட்டா வரியேய்யா?“
“உங்க மனைவி பரவால்ல சார். நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர். சரியா காலைல உங்களுக்கு என்ன வேணுமோ பார்த்து பண்ணி பக்குவமா அனுப்பிர்றா… எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும் சார்.“
“காலைல ஆரம்பிக்காதே… போ. வேலையைப் பார். அப்பறம்…“
“அதை அப்பறம் சொல்லுங்க சார். நான் வேலையைப் பார்க்கிறேன்.“ ராமசாமி வெளியே போகிறான். “சார் லாக்கர்…“ என ஒருவர் எழுந்து நிற்கிறார்.
“வாங்க எடுத்திர்லாம்…..“ அவர் கூடவே வருகிறார். கிடுகிடுவென்று லாக்கர் ரிஜிஸ்டரில் அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கிறான். அவரை உள்ளே அழைத்துப் போகிறான். அவருக்கான லாக்கர் அறையைத் தன் சாவியால் திறந்து விட்டுவிட்டு “பாத்துக்கோங்க சார்…“ என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறான்.
தன் இருக்கையில் வந்து அமர்கிறான். “பஸ்ல ஒரே கூட்டம் இவனே…“ என்கிறான் ரமேஷைப் பார்த்து.
“அதெல்லாம் சரிடா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ்“ என்கிறான் ரமேஷ்.
“என்ன?“
“கண்டுபிடி.“
“தெர்லயே…“என அவன் சொல்லுமுன் காற்றில் மிதந்து வருகிறது நறுமணம். அந்த வாசனையை உள்ளிழுக்கிறான். மகா லெட்சுமி வருகிறாள். “ஹாய்“ என்கிறாள் மகா லெட்சுமி.
அவளைப் பார்த்ததும் அவன் முகம் சட்டென மாறுகிறது. ரமேஷே எதிர்பார்க்கவே யில்லை. ராமசாமியின் முகத்தைப் பார்த்து விட்டுக் குழப்பம் அடைகிறான்.
“ஹலோ…“ என்கிறாள் மகா லெட்சுமி.
“ராங் நம்பர்ன்றப் போறான்“ என்கிறான் ரமேஷ். “உன் அழகு அசத்திட்டது அவனை.“
அவனிடம் வந்து இனிப்புப் பெட்டியை நீட்டுகிறாள் மகா லெட்சுமி. “வாழ்த்துக்கள்“ என்கிறான் சுரத்தே இல்லாமல்.
“இன்னும் உற்சாகமாச் சொல்லேண்டா“ என்கிறான் ரமேஷ்.
சிறு கட்டி இனிப்பை எடுத்துக் கொண்டு “போதும்“ என்கிறான். “உங்களுக்கு டயபடீசா?“ என்கிறாள் மகா.
“அப்பிடியாடா?“ என்கிறான் ரமேஷ்.
“என் பேர்…“ என்கிறாள் மகா லெட்சுமி.
“மகா லெட்சுமி“ என்கிறான் ராமசாமி.
ஆச்சர்யத்துடன் “உங்களுக்கு எப்பிடித் தெரியும்?“ என்கிறாள் மகா லெட்சுமி
“சுருக்கமா மகா“ என்கிறான் ராமசாமி.
“ஆகா.இவன் முக்காலமும் அறிஞ்சவன்“ என்கிறான் ரமேஷ்.. “போன வாரம் என்னாச்சி தெரியுமா? இவன் நம்ம ராதிகாவுக்குப் பெண் பார்க்க வராங்கன்னு கரெக்டா சொன்னான். ராதிகாவுக்கே அதில் ஆச்சர்யம்…“
“எனக்கு எப்ப கல்யாணம் சார்?“ என மகா கண்ணை மலர்த்திக் கேட்கிறாள். ராமசாமி காதில் விழாத மாதிரி எழுந்து போகிறான்.
“அவன் வீட்ல என்னவோ பிரச்னை போல இருக்கு“ என்கிறான் ரமேஷ். “ரொம்ப ஜாலியான ஆளுதான்.“
ராமசாமி ஒரு லெட்ஜருடன் திரும்பி வருகிறான். யாருடனும் பேசாமல் கடகடவென வேலை செய்கிறான். அவனது மௌனம் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருக்கிறது.
மகா லெட்சுமியின் கையெழுத்து அழகாய் இருக்கிறது. ராதிகா அவளைப் பாராட்டுகிறாள். “எங்க ஆபிஸ்லயே மோசமான கையெழுத்து நம்ம ராமுவோடதுதான். அவன் கையெழுத்தை அவனாலயே திரும்ப வாசிக்க முடியாது…“
“அவ கேட்டாளா?“ என்கிறான் ராமசாமி. “இவங்களை ரொம்ப நம்பாதே மகா. எப்ப வேணா உன்னையும் இப்பிடிக் கவுத்துவாங்க…“
“அப்பா, சார் பேசிட்டார்…“ என அழகாகச் சிரிக்கிறாள் மகா.
மாலை அலுவலகம் முடிந்து வெளியே கிளம்புகிறார்கள். “நான் கொஞ்சம் கடற்கரைக் காத்து வாங்கிட்டு அப்பறமா வீட்டுக்குப் போகலாம்னு பார்க்கறேண்டா“ என்கிறான் ரமேஷிடம்.
“அது சரி. அவளை உனக்குத் தெரியுமா முன்னாலேயே?“
“யாரை?“
“மகாவை.“
“தெரியாது.“
“பின்னே அவ பேரைக் கரெக்டா சொன்னியே?“
“ஒரு GUESS தான். அவள் பார்க்க மகா லெட்சுமி மாதிரிதானே இருக்கா?“
“சுருக்கமா மகான்னியே…“
“நீ அப்பிடிச் சுருக்குவேன்னு எதிர்பார்த்தேன்… அது சரிதானே? ராதிகாவை ராதுன்னு நீதானே ஆரம்பிச்சே?“
“இல்லடா… நீ எதையோ மறைக்கறே.“
“ஏன்?“
“அவளை உனக்கு முந்தியே அறிமுகம் ஆயிருக்கு.“
“அப்படியா?“
“அவளைப் பார்த்ததில் எங்க எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம். நம்ம ஆபிசே அவ வந்ததுல களை கட்டிட்டது. நீதான் சரியா அதை என்ஜாய் பண்ணலியோன்னு இருக்கு…“
“இருக்கலாம்.“
“ஏன்?“
“அது இப்ப எதுக்கு. அவள் வந்ததில் எல்லாருக்கும் சந்தோஷம்னா, நீங்க சந்தோஷமா இருங்களேன்…“
“நீயுந்தான் சந்தோஷப் படேன் படவா.“
“ஈஈஈ“ என்கிறான் ராமசாமி.
“‘ராமு ஒண்ணு சொல்வேன். தப்பா நினைச்சிக்கக் கூடாது…“
“என்ன?“
“எனக்கு அவளை ரொம்பப் பிடிச்சிருக்குடா.“
“சரி.“
“நான் அவளை லவ் பண்ணலாம்னு பார்க்கிறேன்.“
“வேணாம்.“
“ஏன்டா?“ என நின்று அவனைப் பார்க்கிறான் ரமேஷ்.
“அவ ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்றா.“
“அவளை உனக்குத் தெரியாதுன்னியே?“ என்று கேட்கிறான் ரமேஷ். “உனக்குத் தேவையானதை மாத்திரம் சொல்றேன்… உன்னைக் குழப்ப வேணாம்னு பார்க்கிறேன். நான் பீச் போயி கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரேன்.“
“என்ன பீச். திடீர்னு?“
“மனசு சரியில்லை.“
“எனி பிராப்ளம்?“
“இப்ப உனக்குத் தெரிய வேணாம்.“
“நீ அவளைப் பார்த்ததில் இருந்தே என்னவோ போல ஆயிட்டே. நான் கவனிச்சேன்.“
“அப்படி யெல்லாம் நீயா கற்பனை பண்ணிக்க வேணாம்.“
“அவளைப் பத்தி உனக்கு எதோ முக்கியமான விஷயம் தெரியும்.“
ராமசாமி நிற்கிறான். “தெரியும்“ என்கிறான்.
“என்னடா அது?“
“உனக்கு அது வேணாண்டா.“
“வேணும். நான் அவளை லவ் பண்றேன்…“ என்கிறான்  ரமேஷ்.
“அதான் சொன்னேன்… அவள் ஏற்கனவே ஒருத்தனை விரும்பறா.“
“அதெப்பிடி உனக்குத் தெரியும்?“
“தெரியும். விடுறா. இப்ப… அவளை ஒருத்தன் விரும்பறான், அவளும் அவனை விரும்பறாள்னு தெரிஞ்சிட்டதா இல்லியா…“
“ம்.“
“அப்பன்னா நம்ம ஆபிஸ் ஆம்பிளைங்களுக்குள்ள சண்டை வரப் போவது இல்லை  நல்ல விஷயம் தானே?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“சரி. வேளை வரும்போது சொல்லு.“
“நான் என்ன சொல்றது. வேளை வந்தால் நீங்களே தெரிஞ்சிக்க மாட்டீங்களா?“ என்கிறான் ராமசாமி. கடற்கரைக்கு பஸ் வருகிறது. “பாப்பம்டா“ என ஓடிப் போய் ஏறுகிறான்.


அத்தியாயம் 13
சென்னை மெரினா கடற்கரை. கண்ணகி சிலை. அதன் அருகில் ஒரு பெண் உயரே தூக்கிய கையுடன், கையில் முறுக்குகளை அடுக்கி வைத்திருக்கிறாள்… “முறுக்கு, முறுக்கு“ என விற்றுப் போகிறாள். அவளைப் பார்க்கவே நியாயம் கேட்கும் கண்ணகி போலத் தான் இருக்கிறது. அதிகக் கூட்டம் இல்லாத இடத்தைத் தேர்வு செய்து காலால் குறுக்காக எக்ஸ் போட்டு அமர்கிறான் ராமசாமி. தள்ளித் தள்ளி‘ இளம் காதலர்கள். அல்லது ‘தள்ளி‘க்கிட்டு வந்தவர்கள்… மெல்ல இருள் கவியக் கவிய சுற்றிலும் ஆட்களே இல்லாத தனிமை. கடற்கரையின் ரோந்து விளக்கின் ஒளி வட்டம்.
அப்படியே மணலில் படுத்துக் கிடக்கிறான் ராமசாமி. திடீரென்று அவனைத் தாண்டி ஆவேசமாய்த் தள்ளாடியபடி ஒரு உருவம் கடலை நோக்கிப் போகிறது. என்ன ஆச்சி இவனுக்கு, என எழுந்து உட்கார்கிறான். அந்த இருளிலும் போகிறவனின் தள்ளாட்டமும் ஆயாசமும் அவனது மன நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த ஆள் கொஞ்ச நேரம் நிற்கிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொள்கிறான். திடீரென்று வேகமாய் ஆவேசமாய்க் கடலைப் பார்க்கப் போகிறான்.
தாள முடியாமல் எழுந்து அவனை நோக்கி ஓடுகிறான் ராமசாமி. முட்டளவு ஆழத்தில் அங்கேயே நிற்கிறான் அந்த இளைஞன். “ஏய் என்ன பண்ணப் போறே?“ அந்த இளைஞன் திரும்பி ராமசாமியைப் பாரக்கிறான். “நீங்க எதுக்கு சார் கடல்ல வந்தீங்க? உங்களுக்கும் காதல் தோல்வியா?“
“அடேடே. நீ காதல் தோல்வி கேசா?“ என்கிறான் ராமசாமி. “ஏன் இப்பிடி ராத்திரி நேரம் கடலுக்குள்ள ஓடி வர்றே? பகல்ல வர்றது தானெ? பகல்லன்னா யாராவது வந்து காப்பாத்திருவாங்கன்னு பயமா?“
“பகல்னா சாகறதுக்கு எனக்கே பயம் சார்.“
“இப்ப? ராத்திரியில்?“
“ஐய எனக்கு வேற வழி இல்லை சார்.“
“என்ன வழி இல்லை…“
“எனக்கு வாழ்க்கை வெறுத்திட்டது சார்.“
“அப்பிடியா? இப்பிடியே நாம கடல்ல நின்னுட்டிருந்தால் ஜலதோஷம் பிடிச்சிக்கும். வா நாம கரைக்குப் போய்ப் பேசலாம்…“
“இல்ல சார்…“
“அட வாப்பா“ என அவனைக் கையைப் பிடித்து இழுக்கிறான் ராமசாமி. “காதலில் ஜெயித்தவர்கள் எண்ணிக்கை உலகத்திலேயே ரொம்பக் குறைவுதான் தம்பி.“
“அப்பிடியா சார்? நீங்க எப்பிடி சார்?“
“காதலைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது… அதை விடு. காதல் தான் மொத்த வாழ்க்கையா தம்பி? வாழ்க்கைல காதலும் இருக்கணும். அதுதான் வாழ்க்கை…“
“வாழ்க்கைன்னா காதலும் இருக்கணும் இல்லே? என் வாழ்க்கையில் காதல் இல்லியே சார்? காதல் இல்லாத வாழ்க்கைல என்ன சார் இருக்கு?“
“ஒரு வெறுப்புல அப்பிடிப் பேசறே நீ. நிதானமா ஆற அமர யோசிச்சிப் பார். உன் பெயர் என்னப்பா?“
“கிருஷ்ணன் சார்.“
“அடேடே உலகத்துக்கே கீதை தந்தவன் கிருஷ்ணன்.  நீ என்னடான்னா…. வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லைன்னு அர்ஜுனன் மாதிரி அபலையா நிக்கறே… உன் வீடு எங்கருக்கு?“
“திருவல்லிக்கேணி தான் சார்.“
“வா போயிட்டே பேசலாம்.“
“என்ன ஏன் சார் காப்பாத்தினீங்க?“
“அட போ கிருஷ்ணா. முட்டளவு ஆழத்தில் நின்னுகிட்டு சாகப் போறேன்னு வசனம் பேசறே நீ.“
“ஒரு பெரிய அலை வரும்னு காத்திட்டிருந்தேன் சார்.“
“அதுக்கு கரையிலயே காத்திட்டிருக்கலாமே?“
“போங்க சார் கிண்டல் பண்றீங்க…“ என திரும்ப கடலைப் பார்க்கக் கிளம்புகிறான் கிருஷ்ணன்
“அட இருப்பா. எப்பவுமே உடம்புல ஒரு வேகம் வர்ற போது உணர்ச்சி வசப்படும் போது எதாவது தோணும். அதை உடனே செயல்படுத்திறக் கூடாது. உயிர் ரொம்ப உசத்தியான விஷயம் கிருஷ்ணா. அதை இப்படி அலட்சியமா தூக்கிப் போட்டுவிட முடியாது.“
“அவள் இல்லாமல் வாழறதுல எந்த அர்த்தமும் இல்லை சார். வாழ்க்கையில கிடைக்காத அர்த்தத்தை, நான் சாவுலயாவது கிடைககாதான்னு பார்க்கிறேன்…“
“ஸ். அதையே நினைச்சிட்டிருக்காதே. நல்லவேளை நான் உன்னைப் பார்த்தேன். இல்லாட்டி….“
“இல்லாட்டி, காலைல என்னைப் பேப்பர்ல நீங்க பாத்திருப்பீங்க சார்.“
“பேப்பர்லயா?“
“என் புகைப்படம் முகவரி பெயர் எல்லாம் எழுதி தயாரா கைல வெச்சிருக்கேன் சார்…“ என காட்டுகிறான்.
“பரவால்ல. தண்ணி படாதபடி, பட்டாலும் எழுத்து அழியாத படி பிளாஸ்டிக் உறைல்லாம் போட்டு சுத்தி பத்திரப் படுத்தி உள்ள வெச்சிருக்கே. ஆனால் உயிரைப் பத்திரப் படுத்த விட்டுட்டே… சரி. வா… இங்க கிருஷ்ணா கபேல காபி நல்லா யிருக்கும்.“
அவன் அவரைப் பார்க்கிறான். பிறகு தலையாட்டுகிறான்.
உள்ளே நுழைந்து காபி அருந்துகிறார்கள். சரிவர் வருகிறான். “என்ன சார் ரெண்டு காபியா?“ என்று கேட்கிறான். “உனக்கு எப்பிடித் தெரியும்?“ என சர்வரைக் கேட்கிறான் ராமசாமி.
“இன்னிக்கு காபி நீங்க ஸ்பான்சர். தினசரி இவரை யாராவது சமாதானப் படுத்தி இங்க அழைச்சிட்டு வராங்க…“
“அப்பிடியா கிருஷ்ணா?“
“ஆமாம் சார். எனக்கு வாழவே பிடிக்கல்ல சார்.“
“கிருஷ்ணா கபேல காபி நல்லா யிருக்கும்னு தெரிஞ்சி வெச்சிருக்கே.“
“ஆமாம் சார்“ என்கிறான் கிருஷ்ணன். காபி வருகிறது. “ஸ்ட்ராங்கா இருக்கா?“ என்று கேட்டபடியே எடுத்துக் கொள்கிறான்.
“இப்ப எப்பிடி இருக்கு வாழ்க்கை?“ என்று கேட்கிறான் கிருஷ்ணன்.
“சார். வாழ்க்கைதான் வெறுத்திட்டதுன்னேன். காபி வெறுத்திட்டதுன்னு நான் சொல்லவே இல்லியே“ என்கிறான் கிருஷ்ணன்.
இருவருமாய் அவன் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்.
“இதான் சார் என் வீடு“ என நிற்கிறான் கிருஷ்ணன். திண்ணை எடுப்புடன் உள்பக்கம் நிளமான வீடு. “பாவம் சார். உங்களை சிரமப்படுத்திட்டேன். ஆனால் சார்… நீங்க அடிக்கடி என்னைப் பார்க்க வரணும் சார்.“
“வரேன் வரேன். ஆனால் நீ இனி இப்பிடி பைத்தாரத்தனம் எல்லாம் பண்ணக் கூடாது கிருஷ்ணா.“
“அவ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை சார். நீங்கதான் சார் எப்பிடியாவது அவளோட என்னைச் சேர்த்து வைக்கணும்…“
“முயற்சி பண்றேன் கிருஷ்ணா.“
“அப்டில்லாம் இல்லை. சேர்த்து வைக்கணும். சரியா?“
ராமசாமி சிரித்து “எனக்கு இப்பிடி ஒரு சோதனையா? சரி“ என்கிறான். “நான் கிளம்பறேன். இனிமே நீ இப்பிடி வாழ்க்கையை முடிச்சிக்க அவசரப் படக் கூடாது.“
“நீங்க அடிக்கடி வாங்க சார். உங்க பேரைச் சொல்லவே இல்லையே?“
“ராமசாமி.“
“நீங்க எதுக்கு கடற்கரைக்கு வந்தீங்க?“
“என் கவலைக்கு ஆறுதலா யிருக்கும்னு நான் காத்து வாங்க வந்தேன். அங்க அதைவிடப் பெரிய கவலையை நான் பார்த்திட்டேன்.“
“சாரி சார். எனக்கு வேற வழி தெரியல்ல சார்?“
“இப்ப?“
“வழி தெரிஞ்சிட்டது.“
“என்ன வழி?“
“நீங்க இருக்கீங்க. பொறுப்பை உங்ககிட்ட விட்டாச்சி…“ என சிரிக்கிறான் கிருஷ்ணன்.
அப்போது உள்ளே யிருந்து. ஒரு வயதான குரல் கேட்கிறது. “யாரது வாசல்ல?“
“நான்தான்ப்பா.“
“எங்கடா போயிட்டே நீ?“
“தற்கொலை பண்ணிக்கப் போனேம்ப்பா.“
“பண்ணிக்கிட்டியா?“
“இல்லைப்பா.“
“ஒரு காரியம் ஒழுங்கா பண்ணத் துப்பு கிடையாது உனக்கு. சரி உள்ள வா.“
“வரேன் சார்“ என கிருஷ்ணன் உள்ளே போகத் திரும்புகிறான். “திரும்ப எப்ப சார் வரீங்க? நான் உங்ககிட்ட அவளைப் பத்தி நிறையச் சொல்லணும் சார்.“
“வரேன் வரேன்.“
“கிருஷ்ணா?“ என உள்ளே யிருந்து குரல். அவன் தலை மறைவதைப் பார்த்த பின் ராமசாமி திரும்பி நடக்கிறான்.
இரவு. ராமசாமி வீடு. மாதுரி வந்து கதவைத் திறந்து விடுகிறாள். “என்ன அண்ணா இன்னிக்கும் லேட்டா வரே?“
“ஒரு அவசர வேலை வந்திட்டது. காலைல கிளம்பும்போதே இன்றைய நாள் பத்தித் தெரியும் எனக்கு…“ என்றபடியே அருகே நிற்கிற திலகாவைப் பார்க்கிறான்.
அந்தப் பார்வையின் அர்த்தத்தை அவள் உள் வாங்கிக் கொள்கிறாள். “சில நாட்களை டைரி இல்லாமலேயே ஞாபகத்தில் கொண்டு வருவீங்கன்னீங்களே. அப்பிடி ஒரு நாளா இது?“
“புரிஞ்சிக்கிட்டியே“ என புன்னகை செய்கிறான். மாதுரிக்கு அவர்கள் பேசுவது விளங்கவில்லை.
“என்ன அண்ணா?“
“ஒண்ணில்ல“ என்கிறான் ராமசாமி.
“காபி?“ என திலகா ஆள்காட்டி விரலால் வாயைப் பார்த்துக் காட்டிக் கேட்கிறாள். “இல்ல வேணாம். இப்பதான் குடிச்சேன்…“ என்றவன் அவளை அருகே அழைத்து காதில் சொல்கிறான். “ரெண்டு வருஷம் முன்னால்.“
“ஆனால்…“ என்கிறாள் திலகா. சிரிக்கிறார்கள்.
“எனக்குச் சாப்பிட கொஞ்ச நேரம் போகட்டும். நேத்து மாதுவோட குழந்தையைப் பாதி வரைஞ்சி வெச்சிருந்தேன். அதை முடிச்சிர்றேன்“ என்கிறான் ராமசாமி.
“குழந்தை தூங்கறது. தூங்கற குழந்தையை வரையக் கூடாது‘ அண்ணா“ என்கிறாள் மாதுரி.
“நான குட்டியோட ஃபோட்டோவை வெச்சிக்கிட்டு தானே வரையறேன்…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி. “நீ எப்ப ஊருக்குப் போறேடி?“
“நாளைக்குக் காலை பத்து மணி ரயில்.“
“அப்ப இன்னிக்கு வரைஞ்சி குடுத்தா தானே? கால் டாக்சிக்குச் சொல்லியாச்சா திலக்?“
“சொல்லியிருக்கு.“
மேசையில் ஒரு கெட்டி அட்டையில் ராமசாமி பாதி வரைந்து நிறுத்தியிருந்த பெண் குழந்தையின் ஓவியம்.
காலையில் குழந்தையைத் தயார் பண்ணி விறுவிறுவென்று கிளம்புகிறாள் மாதுரி. கைக்குழந்தை. ஒன்பது, பத்து மாதக் குழந்தை. அதற்கு வெந்நீர் போட்டு குளிப்பாட்டி. தூக்கம் விலகாமலேயே கண்ணுக்கு மைதீட்டி அலங்கார அமர்க்களங்கள்.
“வேலைக்குப் போறியோ இல்லியோ. எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேன்ஜ்ல ரினியூ பண்ணனும்னு ஒரு நடை வந்திர்றே. அதும் நல்லதாச்சி. உன்னைப்  பார்க்க முடியுதே“ என்றபடி அலுவலகம் கிளம்பும் உடை மாட்டிக் கொள்கிறான் ராமசாமி. “பிரசாத்தைக் கேட்டதாச் சொல்லு. நம்ம பாங்க்ல அவனுக்கு அக்கவுண்ட் இருக்கு இல்லியா? அதுல சேர்க்க அவனோட PAN நம்பர் வேணும். ஏற்கனவே அவன்கிட்டச் சொல்லியிருக்கேன். ஒரு SMS பண்ணச் சொல்லு. உனக்கு அவன் PAN நம்பர் தெரியுமா?“
“தெரியாது.“
“ஆனால் எப்பிடியும் XEROX தேவைப்படும். வெறுன்ன ஏத்திற முடியாது. சரி. நானே அவன்கிட்ட இன்னொருவாட்டி பேசறேன். குழந்தை ரெடி. நீ ரெடியா?“
“இதோ குளிச்சிட்டு வந்திர்றேன்…“ என குளியல் அறைக்குள் போகிறாள். அதற்குள் சிகாமணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான். “நீ மாதுவை ரயில் ஏத்தி விட்டுர்றியா இவனே?“ என்று ராமசாமி கேட்கிறான்.
“ம். அப்பிடியே நான் மந்தைவெளி வரை போகணும். ஒரு கதை டிஸ்கஷன்.“
“சினிமாக் கம்பெனி தான்… நீயே கவுத்திட்டே.“
“ஐய அங்கல்லாம் நம்மால தாக்குப் பிடிக்க முடியாது அத்தான்.“
“அவங்களும் உன்னைப் பத்தி இதே மாதிரிதான் பேசுவாங்கடா. பரவால்ல. அப்பறமாப் பேசலாம்.“ கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறான். “நேரமாச்சி. இங்கயே மணி ஒன்பதே கால்…‘ நான் கிளம்பறேன். எப்பிடியோ தாமதம் ஆயிருது…“‘ என வெளியே ஓடுகிறான்.
லிஃப்ட் மைனஸ் 1.
அவசர அவசரமாக வெளியேறுகிறான். பஸ்சுக்காகக் காத்திருக்கிறான். கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான். அருகில் இருக்கும் நபர் “இதான் சார் சென்னைல பிரச்னை. லீவுன்னா பஸ் வர்றதே கிடையாது…“ என்கிறார். அவரைக் குழப்பமாய்ப் பார்ககிறான்.
“என்ன லீவு?“ என அவரைக் கேட்குமுன், அவர் பஸ் வருகிறது. கிளம்பிப் போய்விடுகிறார். பத்து நிமிடத்தில் பஸ் வருகிறது. மணி பார்த்துக் கொள்கிறான். நிச்சயம் மேனேஜர் கிட்ட இன்னிக்கும் டோஸ் வாங்கணும், என பதட்டமாய் இருக்கிறது.
பஸ்சில் இருந்து இறங்கி அவசர அவசரமாக பாங்க் வருகிறான். வங்கி ஷட்டர் போட்டு பூட்டியிருக்கிறது. ஏ டி ஏம் அருகே செக்யூரிட்டி. “என்ன சார் ஞாயித்துக் கிழமை ஆபிஸ் வந்திருக்கீங்க?“ என்று கேட்கிறான்.
“இன்னிக்கு வெள்ளிக் கிழமை…“
“என்ன சார் ஆச்சி? இன்னிக்கு ஞாயிறு தான் சார்“ என கையில் இருக்கும் நாளிதழைக் காட்டுகிறான்.
‘என்னவோ மிஸ்டேக்“ என அசடு வழிந்தபடி திரும்பிப் போகிறான் ராமசாமி.
வீடு. கதவைத் திறக்கிறாள் திலகா. “என்னாச்சி அதுக்குள்ள திரும்பி வந்திட்டீங்க?“ என முகத்தில் வியப்பு.
“இன்னிக்கு ஞாயித்துக் கிழமைடி. நான் பாட்டுக்கு லீவு நாளன்னிக்கு வேலைக்குப் போயிருக்கேன்.“
“அப்ப?“
“வீடு. தனிமை. அமைதி. இதை விடலாமா பெண்ணே?“ என்கிறான் தாகமாய்.
“எதிர்பாராத விடுதலை!“
சட்டையைக் கழற்றுகிறான். பட்டன் சட்டென அவிழ மறுக்கிறது. “சே அவசரத்தில் அண்டாவுலயே கை நுழையாது…“ என சிரிக்கிறான்.
“நேத்து வரை உங்க தங்கை மாது தான் ஒசச்தியா இருந்தது…“
“உலகத்தில் கோபப்பட்டால் கூட மனைவிகள் அழகுதாண்டி…“ என்கிறான்.
SONG
நான் பின்னே பின்னே போகிறேன்… என அவன் ஆரம்பிக்க, அவள், நான் பின்னே பின்னே வருகிறேன், என தொடர்வதாக ஒரு பாடல் காட்சி.
இரண்டு இரண்டு வருடங்களாக அவர்கள் பின்னோக்கிப் பயணிக்கிறார்கள்.அந்த அளவுக்கு இளமை முறுக்கமும் வேகமும்… இசையில் துள்ளலும் நெளிவுகளும்… கடைசியில் அவர்களது முதல் இரவு வரை பின்னே செல்கிறது பாடல்.
ஒரு குளியல் அறை SHOWER. தண்ணீர் சட்டேன பூவாய்த் தூறலாய் இறங்குகிறது.
அவன் குப்புறக் கிடக்கிறான். மேலே அவள். அவள்மேலே  சிதறிக் கிடக்கும், பறவையின், வண்ண வண்ணச் சிறகுகள். கனவுகள் மெல்ல அடங்குகிறாப் போல.


அத்தியாய்ம் 14
ராமசாமி வீடு. கடிகாரத்தில் காலை பதினோரு மணி. சிகாமணி நாளிதழைப் புரட்டிக் கெண்டிருக்கிறான்.
மொட்டை மாடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்துக் கொண்டு திலகா வீட்டுக்குள் வருகிறாள். “உன்னைப் பார்க்க குடுகுடுப்பைக்காரன் மாதிரி இருக்கு அக்கா“ என்கிறான் சிகாமணி.
“அக்கா சிரிக்கிறாள். “பொம்பளைகளில் குடுகுடுப்பை பஎத்திருக்கியா சிகாமணி?“
”நீதான் ஃபர்ஸ்ட்டு அக்கா“ என்கிறான். சிரிக்கிறார்கள். அப்படியே ரிமோட்டால் தொலைக்காட்சியை ஆன் செய்கிறாள் திலகா.
துவைத்த துணிகளைத் தரையில் அமர்ந்தபடி திலகா மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள். தொலைக்காட்சிப் பெட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் என்னவோ பேட்டி தந்து கொண்டிருக்கிறார். சிகாமணி கழுத்தைச் சாய்த்து டி.வியைப் பார்த்து விட்டு “மத்திய அரசாங்கத்துக்கு எதிரா ஒரு முதல்வரே தெருவுக்கு வந்து உண்ணாவிரதம் இருக்காரு பாரு அக்கா. இந்த மாதிரிக் கூத்தெல்லாம் நம்ம நாட்ல தான் நடக்கும்“ என்கிறான் சிகாமணி.
“அரசியல்வாதிங்க செய்யற காரியங்களே எது ஸ்டண்ட்டு, எது நிஜக் கவலைன்னே தெரியமாட்டேங்குது…“ என்கிறாள் திலகா.
“அந்தக் காலத் தமிழ்ப் படங்களில் பாத்தியானா அக்கா, வில்லன் மோசமா ஒரு பெண்ணை வம்புக்கு இழுத்து அவகிட்ட ஆபாசமா நடந்துக்குவான். அது தப்புன்னு கதாநாயகன் வந்து அவனை மொத்து மொத்துன்னு மொத்துவான். அப்பறம் என்னாகும்? அவனுக்கும் அவளுக்கும் காதல். அது இதைவிட ஆபாசக் கூத்தா இருக்கும்… எல்லா அரசியல்வாதியும் அப்பிடித்தான் நடந்துக்கறாங்க. யார் வில்லன், யார் கதாநாயகன்னே தெரியறது இல்லை. ரெண்டுமே ஒண்ணா இருக்கு.“
“அட என் அறிவுக் கொழுந்தே… என்னமாப் பேசறே நீ?“ என்கிறாள் திலகா.
“தேங்ஸ் அக்கா. ஒரு காபி கிடைக்குமா?“
“உடனே உண்டியலைக் குலுக்கிருவியே…“
“இன்னிக்குப் பேப்பர் படிச்சியே? சுவாரஸ்யமா என்னடா செய்தி?“
“எனக்கு சுவாரஸ்யமான செய்தி உனக்கு சுவாரஸ்யமா இருக்குமான்னு தெரியாது அக்கா“ என்றவன் சட்டென பிரகாசமாகிறான். ஆ இருக்கு அக்கா…“
“என்ன?“
“ராஜஸ்தானில் ஒரு பொண்ணு. திடீர்னு காலைல எழுந்து…“
“காலைல எழுந்துக்கறது ஒரு சுவாரஸ்யமாடா உனக்கு?“
“மொக்கை போடாதே. திடுதிப்னு சொல்லறா, எனக்குப் பூர்வ ஜென்மம் ஞாபகம் வந்திட்டது. என் கணவர் குஜராத்தில் இருக்கிறார். அவர் பெயர் மகேஷ்.“
“ஐயோ.“
“சின்னப் பொண்ணு அக்கா. அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகல்ல.“
“இது பூர்வ ஜென்மம்ன்றாளே.“
“அவளைக் கூட்டிக்கிட்டு அவ சொல்கிற முகவரியைத் தேடி அப்பா அம்மா குஜராத்துக்குப் போயிருக்காங்க.“
“அங்க அந்த முகவரி இருக்காமா?“
“இருக்கு.“
“அந்த மகேஷ்?“
“அவர் இன்னும் உயிரோட இருக்கார்.“
“அவருக்கு எவ்வளவு வயசு?“
“எழுபத்திரெண்டு.“
“பதினெட்டு வயசுப் பெண்ணுக்கு எழுபத்திரெண்டு வயதுக் கணவனா?“
“அவரோட மனைவி இறந்து போயி இருபது வருஷம் ஆகுது. அவ பேர் சௌதாமினி…ன்றாரு அவர்.“
“பத்து வயசு வரை சௌதாமினி. அறுபது வயசில் சௌதா மாக்ஸின்னு ஆயிருப்பாளே அவ.“ மடித்த துணிகளை ஒரு முறை பார்த்தபடி எழுந்து கொள்கிறாள். “காபிக்குப் பால் இருந்தால் தர்றேன். ஒராளுக்கு மாத்திரம் வெச்சிருந்தா மாதிரி ஞாபகம்…“
“உனக்கு இல்லாட்டி பரவால்ல அக்கா. எனக்கு மாத்திரம் போடு. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…“ என அவன் சிரிக்க அவள் முறைக்கிறாள்.
அவன் பேசியபடியே கூட வருகிறான். “அந்தப் பொண்ணே கிளம்பும்போது சொன்ன விவரங்கள் சரியா பொருந்தி யிருக்கு அக்கா. அந்தப் பெண்ணே சொல்லியிருக்கு பூர்வ ஜென்மத்தில் என் பேர் சௌதாமினி…“
“அந்த கிராமத்துலயே எல்லாருக்கும் ஆச்சர்யம். அந்தப் பெரியவர்தான் அவளைப் பார்த்து, நீ பூர்வ ஜென்மத்தில் என் மனைவியா இருந்ததை நான் நம்பறேம்மா. இந்த ஜென்மத்தில் நீ வாழ வேண்டிய பொண்ணுன்னு சொல்லி திரும்ப அனுப்பியிருக்காரு.“
“அனுப்பிடடாரா? சொத்துல பங்கு கேட்டா என்ன பண்ணியிருப்பார் தெரியல.“
“என் அடுத்த ஜென்மத்துல வாங்கிக்கோ, அப்டின்னுற வேண்டிதான்…“ என சிகாமணி சிரிக்கிறான்.
“நீ சினிமாவா எடுத்தா இதை எப்பிடி எடுப்பே இவனே?“ டிகாஷனை ஊற்றி பாலை அடுப்பில் வைக்கிறாள்.
“நானா? போன ஜென்மத்தில் என்னை என்ன பாடு படுத்தினே. படவா. இன்னும் சாகாமக் கெடக்கியா நீன்னு சொல்லி….“
அவள் சிரிக்கிறாள். “அதே புருஷன் அடுத்த பிறவிலயும்னா ஒரே போர்டா.“‘
“ஆனால் ஏழு ஜென்மத்திலும் இவரே கணவரா வரணும்னு கோவிலில் வேண்டிக்கறீங்க?“
“அப்பிடி வெளியே சொல்லிக்கறது தான்…“ என சிரிக்கிறாள். “ஆம்பளைங்கன்னா இன்னும் மோசம்…“
“என்ன?“
“இந்த ஜென்மத்திலேயே இன்னொரு மனைவி வேணும்னு அவங்க தேடறாங்க…“
“சரி. அதை விடு. நம்ம அத்தான் விஷயம் என்ன? அவருக்கும் இது மாதிரி ஒரு குழப்பம் தான் இருக்குமோ அக்கா?“
“என்ன?“
“அவர் பாட்டுக்கு ரெண்டு வருஷம் முன்னால போறேன்றார். வரேன்றார்…“
“அது…“ எனற்வள் “ஐயோ,“ என பெருஞ் சத்தமாய்த் திரும்பகிறாள். காஸ் அடுப்பில் காபி பொங்கி அத்தனை காபியும் பாத்திரத்துக்கு வெளியே வழிந்து விட்டிருக்கிறது.
“எப்பவுமே அடுப்புல எதையாவது வெச்சிட்டு நீ மறந்திர்றே அக்கா…“ என்கிறான் சிகாமணி.
“எனக்குக் காபி இல்லாமல் பண்ணினே இல்லியா? அதான் கடவுளாப் பாத்து உனக்கு இல்லாமல் பண்ணிட்டார்…“
“சரி. GAS ஸை அணை முதல்ல…“
ஒரு துணியால் அடுப்பைத் துடைக்கிறாள் திலகா. அவன் வெளியே போய்க் காத்திருக்கிறான். தொலைக்காட்சி வெறிதாய் ஓடிக் கொண்டிருக்கிறது. அணைக்கிறான். பின்னால் திலகா வருகிறாள்.
“அவர் சொல்றதை நம்பறதா வேணாமான்னு குழப்பா இருக்கு அக்கா.“
“ஒரு குழப்பமும் இல்லை.“
“நம்ப வேணான்றியா?“
“அதிகம் கவலைப் படாமல், அதை நம்பலாம்னு இருக்கு எனக்கு.“
ஆச்சர்யத்துடன் திரும்புகிறான். “என்னாச்சி அக்கா உனக்கு?“
“அவர்கிட்ட நான் கேட்டேன்டா.“
“என்னன்னு?“
“எப்பிடி நீங்க ரெண்டு வருஷம் முன்னாடி போய்வர முடியுதுன்னு கேட்டேன்…“
“அப்ப அதை நீ நம்ப ஆரம்பிச்சாச்சி…“
“நம்பறா மாதிரி விஷயங்கள் நடக்குதுடா. அதை அப்பறமா சொல்றேன் அந்தக் கதையெல்லாம்.“
“இப்ப சொல்லு. எப்பிடி அவர் பழைய காலத்துக்குள்ள நுழையறார்?“
“சொன்னா ஆச்சர்யப்படுவே….“
“சொல்லாமலே ஆச்சர்யமாத்தான் இருக்கு. சொல்லு.“
“நம்ம லிஃப்ட்….“
“அதுக்கு என்ன?“
“அவருக்கு மாத்திரம் அது மைனஸ் 1 காட்டுதுடா.“
“புரியல அக்கா. மைனஸ் ஒண்ணா?“
“நம்ம லிஃப்ட்ல எத்தனை பொத்தான் இருக்கு? எட்டு மாடிக்கு எட்டு பொத்தான். தரைத்தளம். அதுக்கு ஜீரோ. ஒன்பது பொத்தான். இல்லியா?“
“இல்லியா இல்லை இருக்கு. சொல்லு.“
“அவருக்கு மாத்திரம் மைனஸ் 1 வருது…“
“அதெப்பிடி?“
“வருது. அதாவது அவர் அப்பிடிச் சொல்றார்.“
“வந்தால்?“
“அது அவரை ரெண்டு வருஷம் முன்னாடி அழைச்சிட்டுப் போயிருது…ன்றார் அவர்.“
“ஆகா. நடக்கிற கதையா இது?“
“எதுக்கு நடக்கணும். அதான் லிஃப்ட் இருக்கே.“
“இல்லக்கா.“
“லிஃப்ட் இருக்குடா.“
“அவருக்கு மட்டும் அப்பிடி நடக்குதாமா? லிஃப்ட் எப்பிடி நடக்கும்னு போரடிக்காதே…“
“அப்பிடித்தான் அவர் சொல்றார்.“
“அவருக்கு மட்டும் தான் இது நடக்குதுன்னு எப்பிடி அவர் சொல்றார்?“
“நம்ம யாருக்கும் அப்படி நடக்கல்லியேடா.“
“அது சரி“ என யோசிக்கிறான் சிகாமணி.
“ஒருநாள் பக்கத்து வீட்டு கணபதி இல்லே?“
“இருக்கார்.“
“அவர் கூட இவர் லிஃப்ட்டுக்குள்ள போனபோது அது சமத்தா ஜீரோ வரைதான் காட்டித்தாம். இவர் தனியாப் போனால் மாத்திரம் மைனஸ் 1 காட்டுதுன்றார்.“
“ஸ்வைங்னு ரெண்டு வருஷம், அனுமன் கடலைத் தாண்டினாப் போல லங்கைக்கு, அதாவது கடந்த காலத்துக்குப் போயிட்டாரா…“
“அப்பிடித்தான் அவர் சொல்றார்….“
“இதை நீ எப்பிடி நம்ப ஆரம்பிச்சே…“
“அவரோட கோவிலுக்குப் போனேனா?“
“சாமி மேல சத்தியம் பண்ணினாராக்கும். நீ நம்பிட்டே…“
“சரி விடுறா. நீ கேலி பண்றே…“
“இல்லக்கா சொல்லு.“
“ரெண்டு வருஷத்துக்கு முன்னால எடுத்த பர்ஸ் ஒண்ணு வெச்சிருந்தார்.. அதுல முகவரி இருந்தது….“
“என்ன சொல்ல வரே அக்கா?“
“அந்த வீட்டுக்குப் போனோம் நாங்க. அந்த வீட்டுப் பெரியவர் இதை நான் தொலைச்சி ரெண்டு வருஷம் ஆகுதுன்றார்….“
“புதுசா இருக்கே…“
“இல்ல. பர்ஸ் பழசுதான்.“
“ரெண்டு வருஷப் பழசு. சில்லரை கூட இல்லாத இந்தப் பர்சை அதும் ரெண்டு வருஷம் கழிச்சி கன காரியமா கொண்டு வந்து தந்தீங்களேன்னு கடுப்பா ஆயிட்டாரா?“
“அதான் இல்லை.“
“அதுல சில்லரை கூட இல்லையா?“
“அவருக்கு அந்தப் பர்சைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். அவரோட இறந்து போன மனைவியோட படம் இருந்தது அதில். அதைப் பார்த்ததும் அப்பிடியே ஆனந்தக் கண்ணீர் விட்டாரு“
“ராஜஸ்தான் கதை மாதிரிப் போகுதே இதுவும்…“
“நீ நம்பினா நம்பு. அப்பறம்…. இவரோட தங்கை மாது வந்திருந்தா இல்லடா?“
“இதை நம்பறேன். அவ வந்ததை நானே பார்த்தேனே… அவளுக்கு என்ன பண்ணினார்?“
“குழந்தைக்குப் பால் பவுடர் கிடைக்கவே இல்லை. இவர் திடீர்னு வெளியே போனார்.“
“பழைய காலத்துக்கு….?“
“அப்பிடித்தான் தோணுது.“
“வாங்கிட்டு வந்திட்டாரா?“
“ஆமாம்டா ஆமாம்.“
“இதை நான் நம்ப மாட்டேன்க்கா…. சம்திங் ராங்.“
“சம்திங் ரைட் மாதிரிதான் இருக்குடா. அவர் கழட்டிப் போட்ட அவரோட சட்டையை இன்னிக்குத் தோய்க்கலாம்னு எடுத்தபோது சட்டைப் பாக்கெட்டில் பார்த்தேன்…“
“அதெல்லாம் கரெக்டா எல்லா மனைவியும் பார்த்திருவீங்க.“
“அதுல பில் இருந்தது…“
“பில்லா?“
“பால்ராஜ் ஸ்டோர்ஸ் பில். ஃபேரெக்ஸ் வெஜிடபிள் ரெண்டு டின் வாங்கினது.“
“அதுல தேதி?“
“ரெண்டு வருஷம் முந்தின தேதிதான்டா போட்டிருந்தது.“
“எங்க? அந்த பில்லை வெச்சிருக்கியா அக்கா?“
“இப்பதான் கசக்கிப் போட்டேன்.“
பரபரப்புடன் போய் குப்பைத் தொட்டியை அளைகிறான். ஒரு பில்லை எடுக்கிறான். சத்தமாய் வாசிக்கிறான். “பால்ராஜ் ஸ்டோர்ஸ். அட ஆமாம் அக்கா. ரெண்டு வருஷம் முந்தைய பில். பால் டின் விலை கூட ரொம்பக் குறைவா இருக்கே…“
“என்னால நம்பவே முடியல்லடா.“
“இதுல நம்பாம என்ன இருக்கு? ரெண்டு வருஷம் முன்னாடி விலை வாசி குறைவாத்தான் இருக்கும். அட அக்கா, நீ குழம்பல் திலகம். நல்லாதான் உனக்குத் திலகான்னு பேர் வெச்சிருக்கு…நடந்ததை எல்லாம் இப்பதான் நம்பறேன்னு சொன்னே?“
“நம்பாமலும் முடியல்லடா…“
அவசர அவசரமாக வாசலை நோக்கிப் போகிறான்.
“எங்கடா போறே?“ என்று கூப்பிடுகிறாள் திலகா. கதவைப் படாரென்று சார்த்தி விட்டு வெளியேறுகிறான் சிகாமணி.
லிஃப்ட் கதவு சாத்தியிருக்கிறது. அவன் கால்கள் நடுங்குகின்றன. முகம் வியர்த்து வழிகிறது. லிஃப்ட் வேறு எதோ தளத்தில் இருக்கிறது. அதைத் தன் தளத்துக்கு வர பொத்தானை அழுத்துகிறான். அது மேலே வருகிறது. உள்ளே யிருந்து கணபதி வருகிறார்.
“எங்க கிளம்பியாச்சி சிகாமணி?“ என புன்னகை செய்கிறார்.
“நீங்க உங்க வீட்டுக்குள்ள போங்க… அப்பதான் லிஃப்ட் வேலை செய்யும்“ என்கிறான் சிகாமணி.
“ஏன் அப்பிடிச் சொல்றே?“ என அவர் அங்கேயே நிற்கிறார்.
“தயவு செஞ்சி உள்ள போங்க சார்…“
குழப்பமாய் நிற்கும் அவரை அவர் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறான. அவசரத்தில் சாவி போட்டுத் திறக்க அவருக்கு வரவில்லை. கடகடவென்று சாவி வாங்கி அவனே திறந்து அவரை உள்ளே அனுப்புகிறான். “ஆன்ட்டி இல்லியா சார்?“
“அவ வெளியே போயிருக்கா. வர்ற நேரம் தான்…“
“நம்ம நேரத்துக்கு அவள் வரக் கூடாது“ என்கிறான் சிகாமணி.
“என்ன சொல்றே?“
“ஒண்ணில்ல சார். நீங்க உள்ள போங்க. கதவைச் சாத்திக்கங்க. உலகம் கெட்டுக் கெடக்கு?“
“கெட்ட உலகத்துல நீ வெளியே போறியே தம்பி?“ என்கிறார் கணபதி.
“நான் பாத்துக்கறேன் சார்.“
அவசர அவசரமாக லிஃப்ட்டுக்குள் வந்து பொத்தான்களைப் பார்க்கிறான். பூஜ்யம். ஒண்ணு முதல் எட்டு வரை. ஒன்பது பொத்தான்கள் மாத்திரமே இருக்கின்றன. “கடவுளே ஒரு  மைனஸ் 1  போடக் கூடாதா?“ எனக் கத்துகிறான்.
திரும்ப லிஃப்டை விட்டு வெளியே வருகிறான். வராந்தா காலியாய் இருக்கிறது.
உள்ளே யிருந்து கணபதி “யாரது?“ எனக் குரல் கொடுக்கிறார். “யாரும் இல்ல. நீங்க உள்ளேயே இருங்க“ என்கிறான் சிகாமணி. திரும்ப லிஃப்ட்டுக்குள் நுழைகிறான். மைனஸ் 1 இல்லை. முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறான். சரி என்று பூஜ்யத்தை அழுத்துகிறான். லிஃப்ட் தரைத் தளத்தில் இறக்கி விடுகிறது.
வெளியே வருகிறான். இரு எந்த வருஷம் தெரியல்லியே… தெரு காலியாய்க் கிடைக்கிறது. காத்திருக்கிறான். தனக்குள் எதும் மாற்றம் நிகழ்கிறதா பார்க்கிறான். கையால் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான்.
ஒரு சைக்கிள் வருகிறது. பாய்ந்து ஓடி அதை நிறுத்துகிறான். “இது எந்த வருஷம் சார்?“
“வருஷமா?“ என அவர் அவனைக் கேள்வியுடன் பார்க்கிறார்.
“சொல்லுங்க சார். இது எந்த வருஷம்?“
“யோவ்.அவனவன் நேரம் கேட்பான். தேதி கேட்பான். நீ வருஷம் கேக்கறியேய்யா?“
“ப்ளீஸ் சார். சொல்லுங்க. இது எந்த வருஷம்?“
“ஐயோ பைத்தியம் பைத்தியம்…“ என அவர் சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடுகிறார்.
அப்போது இன்னொரு நபர் வருகிறார். அவரே நின்று இவனைப் பார்க்கிறார்.
“இது எந்த வருஷம் தம்பி“ என்று அவரே கேட்கிறார்.
“2016“ என்கிறான் சிகாமணி.
“இல்ல“ என்கிறார் அவர். “இது 2012“ எனகிறார்.
“சார் சரியா சொல்லுங்க. இது எந்த வருஷம்?“
“2012.“
“ரெண்டு வருஷம் தான் சார் முன்னாடி போகும் எங்க லிஃப்ட். உங்க வீட்டு லிஃப்ட் நாலு வருஷம் முன்னாடி போயிட்டதா?“
“இது 2012 தான்.“
அப்போது வேறொரு நபர் வருகிறார். “தம்பி இவர் எதும் கலாட்டா பண்ணினாரா?“
“ஏன்?“
“இவர் ஒரு அம்னீஷியா பேஷன்ட்.“
“அப்டின்னா?“
“இவருக்கு மனசில் பழைய ஞாபகங்கள் தான் இருக்கு. நிகழ்காலமே அவருக்கு நினைவில் தெரியாது…“
“அதுக்குப் பேர் அம்னீஷியாவா? நீங்க சொல்லுங்க. இது எந்த வருஷம்?“
“2016“ என்கிறார் அவர்.
“அப்ப லி1ப்ட்?“ என தனக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறான்.
“என்ன லிஃப்ட்?“ என்கிறார் அவர்.
“ஒண்ணில்ல…“
அப்போது கணபதியின் மனைவி கைநிறைய கனத்துடன் காய்கறி நிரம்பிய பையுடன் வருகிறாள். ‘பையை அவன் வாங்கிக் கொள்கிறான். இருவரும் லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள்.
“இன்னிக்கு நம்ம லிஃப்ட்ல…“
“உங்களுக்குமா?“
“எனனது?“
“மைனஸ் 1 வந்ததா?“
“என்னாச்சி சிகாமணி?“ என்று அவள் கேட்கிறாள்.
“ஒண்ணில்ல. நீங்க என்ன சொல்ல வந்தீங்க அம்மா?“
“காலைல  லிஃப்ட் ரிப்பேரா இருந்தது… இப்ப சரியா ஆயிட்டதுன்னு சொல்ல வந்தேன்.“
லிஃப்ட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.


அத்தியாயம் 15
வாசலில் டாக்டர் சண்முகசுந்தரம் மன நல மருத்துவர் என்று பெயர்ப் பலகை. பார்த்து விட்டு ராமசாமி உள்ளே நுழைகிறான். உள்ளே நிறையப் பேர் அமர்ந்திருக்கிறார்கள். டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை.
“டாக்டர்?“ என்று அங்கிருந்த உதவியாளைக் கேட்கிறான்.
“வர்ற டயம்தான் சார். நீங்க டோக்கன் வாங்கிட்டீங்களா?“
“இல்ல. என வாங்கிக் கொள்கிறான் ராமசாமி.
“டோக்கன் நம்பர் எத்தனை?“
“இருபத்தி ஆறு சார்.“
“யப்பா… நாட்ல இத்தனை பைத்தியங்கள் இருக்கா?“
“இன்னிக்குக் கம்மி தான் சார்.“
“அமாவாசைன்னா அதிகம் வரும் போல.“
பக்கத்தில் ஒரு நபர் அவனையே உற்றுப் பார்க்கிறான். திடுதிப்பென்று தன்னியல்பாய் அவன் கண்களும் இவன் கண்களும் சந்தித்துக் கொள்கிற ஜோரில் ஒரு அதிர்வு வெட்டுகிறது அவனை. பார்வையை சட்டென மீட்டுக்கொண்டு வேறு யோசனை எதுவும் செய்ய முயல்கிறான். என்றாலும் அந்த நபர் தன்னைத் தொடர்ந்து பார்க்கிறதான குறுகுறுப்பு அவனில் இருக்கிறது. திரும்ப அவனைப் பார்க்கிறான் ராமசாமி. அவனோ விடாமல் இவனையே உற்றுப் பார்த்துக் கெண்டிருக்கிறான். திடீரென்று அவன் இவனைப் பார்த்து ஒரு விகாரச் சிரிப்பு சிரிக்கிறான். தூக்கிவாரிப் போடுகிறது. இது என்னடா இம்சை, என ராமசாமி நாற்காலியை விட்டு எழுந்து அவன் பார்வைக்கு மறைவாக தள்ளிப் போய் நின்று கொள்கிறான்.
அங்கே தனியே ஒரு பெண் நின்று பிழியப் பிழிய அழுது கொண்டிருக்கிறாள். அவனைப் பார்த்ததும் உதட்டைப் பிதுக்கி, கையை விரித்து, ச்… என்கிறாள். திரும்ப அழுகிறாள்.
அருகே ரெண்டு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “ஏய் இந்த டார்ச் அடிக்கிறேன். இதுலேர்ந்து வெளிச்சம் மேல வரை போகுதே… அதில் ஏறி நீ மேல போவியா?“
‘ஐயோ நான் மாட்டேன்.“
“ஏன்?“
“நான் மேலே போகிற போது நீ டார்ச்சை அணைச்சிட்டேன்னா நான் பொத்னு விழுந்துருவேன்…“
பயத்துடன் ராமசாமி இன்னும் தள்ளிப்போய் நிற்கிறான். மனசுக்குள் மெல்ல, டாக்டர் சீக்கிரம் வந்துறக் கூடாதா நீங்க?... என முணுமுணுக்கிறான்.
‘அப்போது இன்னொருவன் அவன் அருகே வருகிறான். “சார் உங்ககிட்ட பத்து ரூபாய்க்குச் சில்லரை இருக்குமா?“
“தரேன்“ என்கிறான் ராமசாமி.
“ஆனால் எங்கிட்ட பத்து ரூபா இல்லியே…“ என கையை இப்படி அப்படி, இல்லை, என அசைக்கிறான் அவன்.
“பின்ன எதுக்குய்யா சில்லரை கேட்டே?“
“உங்க கிட்ட இருக்கான்னு தெரிஞ்சிக்கத்தான்.“
“ஜெனரல் நாலெட்ஜ் இம்ப்ரூவ் பண்றாரு இவரு…“
“தேவைன்னா வரேன்“ என அவன் போகிறான்.
“உனக்குச் சில்லரை தேவை இல்லை. முதல்ல பத்து ரூபாயே தேவை.“
அவன் பக்கமாக இன்னொருவன் வருகிறான். “பயப்படாதீங்க. நானும் உங்களை மாதிரிதான் சார்“ என்கிறான் அவன்.
“என்ன, உங்களை மாதிரிதான்? என்னப்பத்தி உனக்கு என்ன தெரியும்?“
“தெரியாது சார்.“
“பின்ன? உன்னை மாதிரின்னா என்ன அர்த்தம்?“
“நானும் பைத்தியம் இல்லைன்னு சொல்ல வரேன் சார்.“
“நான் பைத்தியம்“ என்கிறான் ராமசாமி. அவனை ஒரு மாதிரி பயத்துடன் பார்த்து விட்டுப் போகிறான் அவன்.
டாக்டர் வந்தாகி விட்டது. எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ஒரு பெண் டாக்டருக்கு, அட்டென்ஷன் போட்டு சல்யூட் அடிக்கிறாள். யாரையுமே கவனிக்காமல் கடகடவென்று அவர் உள்ளே போகிறார்.
அவனைப் பார்த்தவுடன் விகாரச் சிரிப்பு சிரித்த அந்த நபர் முதலாவதாக உள்ளே போகிறதைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. “அவனுக்கு முன்னாடியே நான் வந்திட்டேன்“ என ஒருத்தர் போய் முறையிடுகிறார். அவரை ராமசாமி நிறுத்துகிறான். “அந்த ஆள் இங்க இருக்க இருக்க உங்களுக்குத் தான் பிரச்னை. போட்டும்…“ என்கிறான்.
கிளினிக் உதவியாள், “ஆமா சார். போனதடவை அவன் வந்திருந்தப்போ யாரோடவோ சண்டை. பாய்ஞ்சி அவன் மூக்கைக் கடிச்சிட்டான்…“ என்கிறான். ஆட்சேபம் சொன்னவர் தன் இருக்கையில் திரும்ப உட்கார்கிறார்.
உள்ளே போனவன் வெளியே வருகிறான். ஆட்சேபம் சொன்னவர் பக்கத்தில் வருகையில் திடீரென அவன் எதற்கோ நிற்கிறான். பயந்தவராய் அவர் சட்டென தன் மூக்கை மறைத்துக் கொள்கிறார். அவன் கூட அவன் அப்பா வந்திருக்கிறார். அவரைச் சுரண்டி அவன் ஆட்சேபம் சொன்னவரின் சட்டைப் பையில் உள்ள போனாவைக் காட்டுகிறான். “அப்பா எனக்கு இந்தப் பேனா வேணும்…“ என்கிறான்.
“ஷ். அவர் தர மாட்டார்…“
“தருவேன்“ என அவர் அவசரமாய் எடுத்துத் தருகிறார். ”மூக்கைத் தவிர என்ன வேணா கேளு தம்பி“ என்கிறார். “இருக்கறது ஒரே ஒரு மூக்குதான்.“
“சார் கிட்ட ரெண்டு பேனா இருக்கு போல“ என்கிறான் ராமசாமி.
அவர்கள் போகிறார்கள். அடுத்த நபர் உள்ளே போகிறார். உதவியாளிடம் ராமசாமி “ஒரு ஆளுக்கு எத்தனை நேரம் எடுத்துக்கறாரு?“
“கேசைப் பொருத்து சார்“ என்கிறான் அவன். “உங்களுக்கு என்ன சார் பிரச்னை?“ என்று கேட்கிறான். அருகே இருந்த ஆட்சேப ஆசாமி ஆர்வமாய் இவனைப் பார்க்கிறார்.
“அதை உள்ளே போய்ச் சொல்லிக்கறேன்…“ என்கிறான் ராமசாமி. அவர் ஏமாற்றத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறார்.
அப்போது புதிய நோயாளியுடன் ஒருவர் உள்ளே நுழைகிறார். (அவர்களை அவனுக்குத் தெரியாது. என்றாலும் நமக்கு அறிமுகம் உள்ளவர்கள் அவர்கள்.)
அவர்கள் வந்து இவன் அருகே அமர்கிறார்கள். “இவருக்கு என்ன பிரச்னை சார்?“ என வந்தவரிடம் கேட்கிறான் ராமசாமி.
“அம்னீஷியா.“
“அப்படி ஒரு பிரச்னை நாட்ல இருக்கறதையே. நான் மறந்தே போயிட்டேன்…“
“இது எந்த வருஷம்?“ என அந்த நோயாளி கேட்கிறான்.
“2016“ என்கிறான் ராமசாமி.
“இல்லை. 2012“ என்கிறான் அவன்.
“சார் நீங்க என்ன சொன்னீங்க?“
“2016. ஏன்?“
“பழைய ஞாபகம் இருக்கறது அம்னீஷியா. உங்க கேஸ் புதுசா இருக்கே….“
“புரியல சார்“ என்கிறான் ராமசாமி.
“அதுக்குதான் டாக்டர் கிட்ட வந்திருக்கீங்க?“ என்கிறார் கூட வந்தவர். “இவனுக்கு ரெண்டு வருஷமா இதே பிரச்னை சார்…“
“என்ன பிரச்னை?“
“அம்னீஷியா.“
“நாலு வருஷமா“ என்கிறான் ராமசாமி.
“இல்ல. ரெண்டு வருஷமா“ என்கிறார் கூட வந்தவர். “டாக்டர் சொல்வார் எல்லாம். நாமளா என்ன முடிவு பண்றது. இல்லிங்களா?“ என்கிறார் சிரித்தபடி.
“வருஷத்தைக் கூட டாக்டர் தான்சொல்லணுமா?“
மணி ஒன்பது. அவன் முறை வருகிறது. கடைசியாக அவர்கள் தான்.
டாக்டர் வெளியே எட்டிப் பார்த்து விட்டு “அவ்ளதானா? ஸ்ரீதர், இனிமேல் யார் வந்தாலும் நாளைக்கு வரச் சொல்லு…“ என்றபடி இருவரையுமே உள்ளே அழைக்கிறார்.
ராமசாமி ஒரு ஸ்டூலிலும், டாக்டர் அருகே மற்றொரு ஸ்டூலில் அம்னீஷியாக்காரனும் அமர்கிறார்கள்.
“டாக்டர்“ என ராமசாமியும், அவனும் ஒரே சமயத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள்.
“யாராவது ஒருத்தர் பேசுங்க.“
“சரி“ என ரெண்டு பேரும் ஒரே சமயத்தில் சொல்கிறார்கள். இவன் அவனைப் பார்த்து, அவன் இவனைப் பார்த்து “நீங்களே பேசுங்க“ என்று ஒரே சமயத்தில் சொல்கிறார்கள். டாக்டர் கையால் அமர்த்தி, ராமசாமியைக் காட்டி “நீங்க முதல்ல பேசுங்க“ என்கிறார்.
“என் பிரச்னை என்னன்னால் எனக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வந்திட்டாப்ல தோணுது டாக்டர்.“
“எனக்கும் அப்பிடிதான்…“ என்கிறான் அடுத்தவன்.
“அப்பிடியா?“ என்கிறார் டாக்டர். “சரி பண்ணிறலாம். சரி பண்ணிறலாம்…“
“தேங்ஸ் டாக்டர்.“
“என்னாச்சி? எப்பிடி இப்பிடி ஆகுது?“
எங்க லிஃப்ட்ல…“
“சரி பண்ணிறலாம். சரி பண்ணிறலாம்.“
“லிஃப்ட்டை சரி பண்ணப் போறீங்களா?“
“இல்லை. உங்களை“ என்கிறார் டாக்டர்.
“எல்லாரும் என்னைப் பைத்தியம்ன்றாங்க டாக்டர்… என்கிறான் அடுத்தவன்.
“யார் அப்பிடிச் சொல்றது? நீங்க ஒண்ணும் பைத்தியம் இல்லை“ என்கிறார் டாக்டர்.
“அப்ப எங்க கிட்ட ஏன் டாக்டர் ஃபீஸ் வாங்கறீங்க?“
“ஹா ஹா“ என டாக்டர் சிரிக்கிறார். “இவ்ள அழகா பேசறீங்க. உங்களைப் போயி யாராவது பைத்தியம்னு சொல்வாங்களா? உங்களுக்கு அபபறம் வரேன். இப்ப இவரை விசாரிக்கலாம்… சொல்லுங்க மிஸ்டர் ராமசாமி.“
“இப்ப எந்த வருஷம்?“
டாக்டர் அவனைப் பார்க்கிறார். “நாஙகதான்  கேள்வி கேட்போம். நீங்க எங்ககிட்ட கேள்வி கேட்கக் கூடாது.“
“2012“ என்கிறான் அடுத்தவன்.
“இப்ப நடக்கறது 2016 தானே டாக்டர். எனக்கு இது 2014 மாதிரி எல்லாமே நடக்குது…“
“2014 மாதிரி நடக்குதா?“
“ஆமாம் டாக்டர்.“
“இது 2014ப் படி நடக்கிறது. அதுல எதும் பிரச்னை இருக்கா?“
“இல்லை டாக்டர்.“
“ஆகா உங்க பிரச்னை தீர்ந்தது…“
“எப்பிடி டாக்டர்?“
“ஏன்னா?- இந்த வருஷம் 2014 தான்.“ என்று டாக்டர் சிரிக்கிறார்.
“2012“ என்கிறான் அடுத்தவன்.
“நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு அடுத்து வர்றேன்…“
“ஆகா“ எனகிறான் ராமசாமி.“நான்தான் சார் பழைய காலத்துலேயே தப்பா டாக்டரைப் பார்க்க வந்திட்டேன் போலருக்கு…“
“தப்பா டாக்டரைப் பார்க்க வந்தீங்க. தப்பான டாக்டர்கிட்ட வரல்ல“ என்கிறார் டாக்டர் சிரித்துக் கொண்டே.
“ஓ. கே. டாக்டர். ஐம் சாரி.… உங்க ஃபீஸ்?“
“உங்களுக்குப் பிரச்னை எதுவும் இல்லை. யுவார் நார்மல்… போயிட்டு வாங்க“ என்கிறார் டாக்டர்.
வெளியே வந்து மணி பார்க்கிறான். பின் விறுவிறுவென்று பஸ் நிறுத்தம் நோக்கி நடக்கிறான்.
பஸ்சுக்குக் காத்திருக்கிற நேரம் “ராமு?“ என்று குரல் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறான். அது ரமேஷின் அப்பா. “ரமேஷ்-அப்பா? எங்க இந்தப் பக்கம்?“
“கடை வரை வந்தேன்ப்பா“ என்கிறார். “நானே உன்னைப் பார்த்து ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்.“ மெலிந்த உடல். ஜிப்பா அணிந்திருக்கிறார். முகத்தில் நாலு நாள் தாடி.
“ரமேஷ் வேலை முடிஞ்சி வந்திட்டானா?“
“வந்திட்டான். அப்பவே வந்திட்டான். என்னாலயும் முன்னைப் போல முடியல. அடிக்கடி உடம்பு படுத்துது. இவனை ஒரு கல்யாணம் பண்ணிக்கடான்னா ஒண்ணு ரெண்டு வருஷம் போகட்டும்ன்றான்…“
“ஐய. கல்யாணம் எவ்வளவு தள்ளிப் போகுதோ, அவ்வளவுக்கு ஆம்பளைங்க அதிர்ஷ்டசாலிகள்“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “கல்யாணம் எவ்ள சீக்கிரம் நடக்குதோ அவ்வளவுக்கு பொம்பளைகள் அதிர்ஷ்டசாலிகள்.“
“நீ உன் இடக்குப் பேச்சை விட மாட்டியே…“ என்கிறார் ரமேஷ்-அப்பா. “என் காலத்துக்குப் பிறகு அண்ணன் இவன் கல்யாணத்தை நல்லபடியா பண்ணி வைப்பானா? இவனைக் கூட வெச்சிப்பானான்னே பயமா இருக்குடா எனக்கு…“ என்கிறார்.
“ஆமாமா. ஆனால் ரமேஷ் நல்ல பையன்.அண்ணாவைப் பத்தி ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டான்.“
“அதான் அண்ணனுக்கு இவன் மேல் அத்தனை அதிகாரம். போதாக்குறைக்கு அவனுக்கு வாய்ச்ச பெண்டாட்டி… அவ இவனுக்கும் மேல சிலிர்த்துக்கிட்டு நிற்கிறா.“
“அப்பிடிப் பார்த்தால் நீங்களே பாத்து ரமேஷுக்கு ஒரு பொண்ணை முடிச்சு போட்டு விட்டால் நல்லது தான். ஆனால் அண்ணன் மனைவியைப் பார்த்து தான் அவன் தன் கல்யாணத்தைப் பத்தி பயப்படறானோ என்னமோ… அதையும் பார்க்கணும்.“
அவர் மௌனமாய் நிற்கிறார் எதோ சொல்ல வருகிறாப் போல.
“காபி சாப்பிடறீங்களா ?‘
“இல்ல வேணாம். ராத்திரி தூக்கம் கெட்டுரும்…“ என்கிறார்.
“உங்களை லீட்ல விட்டுட்டுப் போறேன். இருட்டாயிட்டதே…“
“இல்லை. உனக்கு நேரம் ஆகல்லியா?“
“பரவால்ல….“ என்கிறான் ராமசாமி. “அப்பறம் மாமா… ரமேஷ்….“ என பேசிக்கொண்டே அவருடன் ராமசாமி நடக்கிறான். ஒலிகள் தேய்கின்றன.
தெருவில் அவன் மாத்திரம் நடந்து கொண்டிருக்கிறான். தூரத்தில் அவன் அடுக்ககம் தெரிகிறது. இரவில் அதன் சில வீடுகளில் மாத்திரம் விளக்கு எரிகிறது. லிஃப்ட். மாடியில் ஏழாவது தளத்தில் வெளியே வருகிறான். கணபதி வீடடில் தொலைக்காட்சி சத்தம். பிரதமர் மோடியின் பெருங் குரல். எந்த நாட்டில் இருந்து பேககிறாரோ தெரியவில்லை.
கதவைத் தட்டுகிறான் திலகா வந்து திறக்கிறாள். கூடவே சிகாமணி.
“அத்தான் உங்களுக்கு போன் வந்தது…“
“யார்?“
“ரமேஷ்.“
“ரமேஷா?“ என்று திரும்பிப் பார்ககிறான்.
“இப்பதான் உள்ள வரார். கைகால் கழுவி ஆசுவாசப் பட்ட்டும்“ என்கிறாள் திலகா.
“எதுவும் சொன்னானா?‘ காரணம் இல்லாமல் இந்நேரம் கூப்பிட மாட்டானே?“
“நீங்க சாப்பிட வாங்க…“
“சாப்பிடலாம். சாப்பிடலாம்…“ என்கிறான் ராமசாமி. “என்ன விவரம் சொல்லுங்களேன் சனியங்களா?“ என்று திடீரென்று கத்துகிறான்.
“சே எதுக்கு இத்தனை கோபம் உங்களுக்கு? கோகுல் முழிச்சிக்கப் போறான். இப்பதான் படிச்சிட்டு…“
“உங்கிட்ட திட்டு வாங்கிட்டு தூங்கறானா?“ என்கிறான் ராமசாமி.
“ரமேஷ் எதுக்குடா கூப்பிட்டான். எனக்கு என்னவோ கெட்ட சேதி சொல்லப் போறீங்கன்னு இருக்கு.“
“ஆமாம்.“
“ச். என்னாச்சி?“
“ரமேஷோட அப்பா இறந்திட்டார்.“
“ம்“ என சட்டை பட்டனைக் கழற்றப் போனவன் அப்படியே நிற்கிறான். “உடனே போயி என்ன ஏதுன்னு பார்க்கணும்“ என்கிறான்.
“மணி பத்து. காலைல போயிக்கலாம் அத்தான்.“
“உனக்குத் தெரியாதுடா. என் அப்பா காலமாகும் போது, கூடவே அவன் இருந்தான் பாவம்…“
“அவரே காலைல வந்தால் போதும்னு சொன்னார்“ என்கிறாள் திலகா.
“அப்பிடியா?“ என்று திரும்பி அவளைப் பார்த்தான் ராமசாமி. “பணம் கிணம் எதும் வேணுமான்னு கேட்டியா அவன்கிடட?“
“காலைல நீங்க வந்தால் அப்பறம் உங்க கிட்டியே கேட்டுக்கறாராம். இப்ப முக்குக்கு முக்கு பிள்ளையாருக்கு பதிலா ஏ டி எம் வந்தாச்சி.“
திலகாவைப் பார்க்கிறான். பிறகு சற்று ஆசுவாசமாய்ப் புன்னகை செய்கிறான்.
“ஏடி எம் முக்கும் பிள்ளையார் சன்னிதிக்கும் வித்தியாசம் இருக்குடி.“
“என்ன?“
“பிளளையார் சன்னிதில நாம உண்டியல்ல பணம் போடணும். ஏடி எம் ல எடுக்கணும்.“
“உண்டியல்ல பணம் எடுக்க முடியாது“ என்கிறான் சிகாமணி.
“ஏடி எம்-மைக் கும்பிட முடியாது“ என்கிறான் ராமசாமி.
“சரி. காலைலயே போகலாம்…“ என சட்டை மீதி பட்டன்களைக் கழற்றுகிறான். வேடிக்கை என்னன்னால்…“ என்று சொல்ல வந்தவன் நிறுத்துகிறான். அவன் மனதில், ரமேஷ் அப்பாவுடன் பேசிக் கொண்டே நடந்து போன காட்சிகள் அலையடிக்கின்றன.
“இப்பதான் அவரோட பேசிட்டு வரேன்.“
“யாரோட?“ என்று திரும்பிப் பார்க்கிறாள் திலகா.
“ரமேஷ் அப்பாவோட.“
“எப்போ?“
“ஜஸ்ட் நௌ.“
“அவர் சாயந்தரமே இறந்துட்டார்.“
தலையாட்டுகிறான் ராமசாமி.
“இதுல என்ன வேடிக்கை அத்தான்?...“
“சாரி“ என சொல்ல வந்தவன், பிரசாகமாகி, “சிகாமணி… வேடிக்கை இருக்கு. நாளைக்கு நீயும் என் கூட வா ரமேஷ் வீட்டுக்கு“ என்கிறான்.
“நானும் ஒரு நடை வந்து பார்க்கணும்“ என்கிறாள் திலகா.
“அத்தான் கிட்ட ஒரு வேடிக்கை சொல்லணும்னு இருந்தேன்… ச். இப்ப வேணாம்…“ என்கிறான் சிகாமணி.
“நானுங் கூட சொல்லணும்‘ என்கிறான் ராமசாமி.
“இது நம்பவே முடியாத கதை அத்தான்.“
“இதுவும் தான்…“
“‘அத்தான். இன்னிக்கு நான் ஒரு அம்னீஷியா பேஷன்டடைப் பார்த்தேன்…“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“நீயுமா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.

(bulk chapters updated on Tuesday & Friday)
91 97899 87842


No comments:

Post a Comment