Monday, September 21, 2015

அத். 26 முதல் 30. bulk chapters updated on tuesday / saturday

வ சி க ர ப்  பொ ய் க ள்

அத்தியாயம் 26

வங்கியில் வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. நிறைய DD கேட்டு ஆட்கள் வருகிறார்கள். எல்லாரும் கல்லூரி இளைஞர்கள். வேலை செய்தபடியே ராமசாமி ரமேஷைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “என்னடா இன்னிக்கு வேலை கையை ஒடிச்சிரும் போலுக்கே.“
“நீயா எழுதறே? கம்பியூட்டர்ல தட்டறே…“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
மகா அவனைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். “பிறந்த நாள்னு அசத்திட்டியே மகா…“ என்கிறான் ராமசாமி.
“அதான் மகா“ என்கிறான் ரமேஷ்.
“நீங்க உங்க மனைவியோட வந்திருக்கலாம் சார்“ என்கிறாள் மகா ராமசாமியைப் பார்த்து.
“அவளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆச்சி. அவளுக்கும் வரணும்னு இருந்தது“ என்கிறான் ராமசாமி.
“ஃபோன்ல பேசினாங்க“ என்று சிரிக்கிறாள் மகா.
“எவ்வளவு வேலைன்னாலும் மகா அலுத்துக்கறதே இல்லை“ என்று புன்னகை செய்கிறான் ராமசாமி. “மேசை நிறைய வேலை வெச்சிக்கிட்டு நான் பக்கத்தில் பேசினாலே அதோ உட்கார்ந்திருக்கிற கஸ்டமர்ஸ் முறைக்கறாங்க“ என்று சிரிக்கிறான்.
“கல்லூரி அட்மிஷன் ஆரம்பிச்சிட்டது இல்லியா? பணங் கட்ட டிராஃப்ட் எடுக்க வந்து குவியறாங்க…“ என்கிறான் ரமேஷ்.
“கரெக்ட். இன்னும் ஒரு வாரம் பத்து நாள் இப்பிடிதான் கூட்டம் அலை மோதும்னு நினைக்கிறேன்.“
கிருஷ்ணராஜ் அறையில் இருந்தே “ரத்தினம்?“ என்று கூப்பிடுகிறார். “இதோ வரேன் சார்…“ என போகிறான். வழியில் ராமசாமி அவனைப் பார்த்துச் சிரிக்கிறான். “டக்கு டக்குனு டென்ஷன் ஆயிர்றாரு சார். ரீஃபில் எழுதலைன்னா கூட. ரத்தினம்?...னு ஒரு சவுண்டு விட்டுர்றாரு. நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க?“
“நீ எப்பவும் எல்லா கலர்லியும் ருஃபில் பேனா தயாரா கைல வெச்சிக்க“ என்கிறான் ராமசாமி.
“ரத்தினம்?“ என்று மீண்டும் குரல். “வந்திட்டேன் சார்“ என உள்ளே ஓடுகிறான்.
மதியம் ஒரு மணி. ராமசாமியின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி அணைக்கப் படுகிறது. “வழக்கமா பன்னிரெண்டரையோட டிராஃப்ட் கூட்டம் குறைஞ்சிரும். இன்னிக்கு இப்பதான் அடங்குது…“ என எழுந்து கொள்கிறான் ராமசாமி. “ரமேஷ் சாப்பிடப் போகலாம். வரியா?“
“நான் இன்னிக்குக் கொண்டு வரல்ல ராமு.“
“சரி. வா நானும் உன் கூட வெளிய சாப்பிட வரேன்….“
“அப்ப உன் சாப்பாடு?“
“ரத்தினத்து கிட்ட குடுத்திர்றேன்.“
“இதோ ஒரே நிமிஷம்… கிளம்பலாம்“ என்கிறான் ரமேஷ்.
“மகா, ரத்தினம் வந்தால் சொல்லிர்றியா?“ என்கிறான் ராமசாமி. அவளும் வேலையில் மும்முரமாய் இருக்கிறாள். கம்பியூட்டரைப் பார்த்தபடியே இவர்களைப் பார்க்காமல் தலையாட்டுகிறாள்.
வெளியே வருகிறார்கள். ரமேஷ் வண்டி எடுக்கிறான். அவன் வண்டிக்கு அருகே மகாவின் வண்டி. பச்சை நிற ஸ்கூட்டி பெப். அதைப் பார்த்ததும் மெல்ல ஒரு பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. அந்த வண்டி திடீரென்று அப்படியே சப்பளிந்து உருக் குலைந்து கிடக்கிறாப் போகிறாப் போல ஒரு கற்பனை வருகிறது அவனுக்கு.
“பாவம்….“ என அவன் வாய் முணுமுணுக்கிறது.
“என்னடா?“
“ஒண்ணும் இல்ல.“
“வர வர நீ அடிக்கடி இந்த ஒண்ணும் இல்லையைப் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டே. ஏன்?“
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல“ என்கிறான் ராமசாமி.
“இது மாதிரி ஒரு ஜோக் கேள்விப் பட்டிருக்கியா?“ வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
“என்ன?“ என்கிறான் ராமசாமி.
“மனைவி கணவனிடம் குறைப்பட்டாள். நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேசறீங்களே?...ன்னாளாம். அப்டில்லாம் ஒண்ணும் இல்லியே…ன்னானாம் கணவன். பாருங்க. இப்ப கூட மறுத்தே தான் சொல்றீங்க…ன்னாளாம் அவள்.“
ராமசாமி புன்னகை செய்கிறான். “நல்ல ஜோக். சிரிப்பு தான் வரல்ல ரமேஷ்.“
“இன்னொரு ஜோக்…“
“வேணாம்“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு நிறைய டிராஃப்ட் எழுதினேன் இல்லியா?“
“அதுக்கென்ன?“
“சொல்றேன்“ என ஹோட்டலில் இறங்கிக் கொள்கிறான் ராமசாமி. வண்டியை வெளியே நிறுத்தி விட்டு ஏ/சி அறைக்குள் நுழைகிறார்கள்.
“என்னவோ சொல்ல வந்தியேடா?“
“என்ன?“
“அதையே மறந்திட்டியா?“ என கை கழுவுகிறான் ரமேஷ்.
“ம். அதான்… இன்னிக்கு நிறைய DD எழுத வேண்டியிருந்ததா? திரும்பத் திரும்ப ஒரே தேதி… போட வேண்டி யிருந்தது இல்லியா?“
“ஆமாம்“ என்றவன் பயந்து போய் “முன்னால ஒரு தடவை கையால டிராஃப்ட் எழுதும் போது வருஷம் தப்பா போட்டுட்டியே. அதுமாதிரி எதுவும் குழப்பமா இவனே?“
வந்து மேசை பார்த்து அமர்கிறார்கள்.
“இல்ல இல்ல…“
“அப்ப வருஷக் குழப்பம் உனக்குத் தீர்ந்திட்டதா?“
“அப்டின்னும் சொல்ல முடியாது…“
“நீ அநேகமா எங்க ஒவ்வொருத்தரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் போறேன்னு தோணுது… ஏற்கனவே….“
“சொல்லு.“
அதற்குள் சரவர் வந்து நிற்கிறான். “ரெண்டு மீல்ஸ்“ என்றவன் அவனைப் பார்த்து “சொல்லிட்டேன்“ என்று சிரிக்கிறான்.
“சில பேருக்கு இந்த மாதிரி எதிர்காலம் முன்னாலயே நடகக்ப் போறது மாதிரிச் சொல்லியிருக்காங்க.“
“நம்ம மரத்தடி சோசியன் பத்திச் சொல்லிறியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“ஆ அவன் பாவம். அவன் பிழைப்பு அது. வேற வேலை என்ன தெரியும் அவனுக்கு?“
மீல்ஸ் வருகிறது. தட்டு சாதத்தை ஒரு கையால் கொஞ்சம் தள்ளிக் கொண்டு சாம்பார் கிண்ணத்தை அதில் கவிழ்த்திக் கொள்கிறான் ராமசாமி.
“எனக்கே வேலை அதிகம் ஆனதால வெளிய எங்காவது புதுக் காத்தா அனுபவிச்சிட்டு வரலாம்னு ஆயிட்டதுடா.“
“அது சரிதான்“ என்று ஒரு வாயை சாப்பிடுகிறான் ரமேஷ்.
“போதுவா நீ வேலைக்கு அலுத்துக்க மாட்டியே?“
“இல்ல. அந்தத் தேதி… அது என்னை இம்சைப் படுத்துது.“
“இந்தக் குழப்பம் இதுவரை உனக்கு வந்தது இல்லியேடா…“
“அதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு.“
“டெலிபதின்னு ஒரு விஷயம்… நிறையப் பேருக்கு அப்பிடி நடந்திருக்குடா. டெலிபதின்னா… வீட்ல இருப்பான். ஐயோ எங்க அப்பா… அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லைம்பான். அவன் அப்பா உடம்பு பத்தி விசாரிக்க ஃபோன் பக்கம் போனால் அப்ப ஃபோன் அடிக்கும். அம்மா கிட்டேர்ந்து வரும்… அதில் சேதி…“
“அப்பாவுக்கு முடியல. கிளம்பி வா…ன்னு அம்மா சொல்வாங்க…“ என்கிறான் ராமசாமி. “நானும் அது மாதிரி கேள்விப் பட்டிருக்கேன்.“
“எதிர்காலம், அதில் நடக்கப் போற நிகழ்ச்சிகள்… இன்னிக்கு நிங்க அந்த ஃப்ளைட்ல போக வேணாம்னு தடுத்து நிறுத்தி யிருப்பார் ஒருவர். பாத்தால், அந்த ஃபிள்ட் விபத்துக்கு உள்ளாகி யிருக்கும்…“
“ம். ம்.“
“அது மாதிரிதான். உனக்கும் எதிர்காலம் பத்தி எதோ மூளைல தட்டுதோன்னு நினைக்கிறேன் நான்“ என்கிறான் ரமேஷ்.
“அதுபோல நினைக்கறதும் ஒருவகை விளக்கம் தான்…“ என்கிறான் ராமசாமி. “ஆனால் என் நிலைமை வேற… அதாவது, உன் கணக்குப் படி நான் எதிர்காலத்தில் இருந்து இந்த நிகழ்காலத்துக்கு வந்து உன் கூட இப்ப சாப்பிட்டுக் கிட்டிருக்கேன்… ஒண்ணு சொல்லவா?“
“ம்.“
“இப்ப சாப்பிடறோமே இந்த மீல்ஸ், என்ன விலை இப்ப? 80 ரூபாய் இல்லியா?“
“எதுக்குக் கேக்கற?“ என்கிறான் ரமேஷ்.
“என் கணக்குப் படி, ரெண்டுநாள் முந்தி, இங்க சாப்பிட்டேன்…“ சிரிக்கிறான். “பயப்படாதே. ஆனால் உண்மை. உன் கூடத்தான். மீல்ஸ் 110 ரூபாய்.“
“டெலிபதில ஒரு மாதிரி இது. இப்படியெல்லாம் தோணுது. குழப்பம் விளையாத அளவில் கட்டுக்குள்ள வெச்சிக்க ராமு.“
“மனசு தானா சதாரிக்குதுடா. சில தாண்டி வந்த கட்டங்கள்… சட்னு பழைய காலம் நடந்ததை நினைவு படுத்தி விட்டுட்டால் என்ன பண்றது?“
“அது சரிதான்.“
“உதாரணத்துக்கு… மகா. அவளோட முடிவு. அது எனக்குத் துல்லியமாத் தெரியுது…“
“மனுச மனத்துக்கே சில கெட்ட சிந்தனைகள் உள்ளே ஓடிட்டே யிருக்கறது சகஜம்தான். வக்கிரங்கள் வரும். பயத்தினால் ஏற்படற இடைஞ்சல்கள் அவை. உதாரணமாச் சொன்னால்… எத்தனையோ தடவை…  நான் சோபாவில் உட்கார்ந்திருப்பேன். தலை மேல ஃபேன் அப்படியே இறக்கை முறிஞ்சி விழறாப் போலத் தோணியிருக்கு. அது மாதிரி இதைச் சொல்ல முடியாதா?“
“ஹா. வெறும் மகா விஷயம்னு பார்க்கறே நீ இதை. நம்ம மேனேஜர் கிருஷ்ணராஜுக்கு மைசூருக்கு மாற்றல் வரும். போகும்போது அவர் நம்மை எல்லாரையும் கூப்பிட்டு, நான் கண்டிப்பா நடந்துக்கிட்ட மாதிரி உங்களுக்குத் தோணும்…“
“கண்டிப்பாத் தோணும்…“
“ஆனால் இந்த மாதிரி ஒரு co operative வான staff என் சர்விசில் பார்த்ததே இல்லைன்னு சொல்லிட்டுக் கிளம்புவார்.“
“மைசூர்னு சொன்னியே, அதுதான் இதில விஷயம். மத்தது எல்லாம் நாம கற்பனை பண்ணிக்கலாம்…“
“அந்த மகேஷ். ராதிகாவைக் கட்டிக்கப் போறவன்… அவனைப் பார்க்கும் முன்னாலேயே நான் அவனைப் பத்தி, உருவம், எப்பிடி டிரஸ் பண்ணிப்பான்… எல்லாம் சொல்லல்லியா?“
“கல்யாண மண்டபம் கூட சொன்னியே…“
“எனக்கு அதெல்லாம் அப்படியே காட்சியா கண் முன்னால நிக்கறதே. சில சம்பவங்களை, ரெண்டு வருஷத்துக்கு உள்ளாக மறந்துற முடியாது. எப்பிடி முடியும்?“
பில் வருகிறது. “80 நான் தர்றேன். 110 பில் வரும் போது நீ குடு. சரியா?“ என பிடுங்கிக் கொள்கிறான் ரமேஷ். சிரிக்கிறார்கள்.
பணத்தை பில்லோடு அந்த உறையில் வைத்து விட்டு திரும்ப பர்சை பின்பாக்கெட்டில் செருகிக் கொள்கிறான்.
“அதை விட்டுறலாம்… பேசப் பேச தெளிவு அல்ல குழப்பம் தான் வருது. இன்னிக்குத் தேதின்னு என்னவோ சொன்னே….“
“ஆமாம். இன்னிக்கு என்ன தேதி?“
“ஜுலை ஒன்பது.“
“ம். 2014. இன்னிக்கு என்னவோ என் வாழ்க்கைல நடந்திருக்கறதா மனசு படபடன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டது.“
“பிரமைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தேன்னா பிறகு அது உன்னையே முழுங்கிரும். பேய் மாதிரி பிரமைகள் ஆளையே காலி பண்ணிரும். இல்லியா?“
“எனக்குத் தெரியும். டிடி வாங்க வந்தானே, அந்தக் கடைசிப் பையன்… நீலச் சட்டை. வித்தியாசமான பேர் அவனுடையது. விஷ்வக்சேனன். அந்த செலானை நான் பார்க்கவில்லை. டிராஃப்ட் எழுதிட்டேன். தலையை நிமிர்த்திப் பார்த்தால்… அந்தப் பையன் நிற்கிறான். நீலச் சட்டை. சட்னு உடனே பொறி தட்டியது. இவன் பேர் வித்தியாசமா இருக்குமே… யோசிச்சி யோசிச்சிப் பார்த்தேன்.  போன வருஷம் கடைசியா அவன்தான் வந்து என் முன்னால நின்னான். அது தெரிஞ்சிட்டது. விஷ்ணு. அது இது… மண்டைய உடைச்சிக்கிட்டேன். கடைசியா செலானைப் பார்த்தேன். விஷ்வக்சேனன்.“
“ஆள் பார்க்க வித்தியாசமா இருந்தால் இப்பிடி யோசனைகள் ஓடறது ஆச்சர்யம் இல்லை ராமு.“
ராமசாமி தலையாட்டுகிறான்.
“சோசியம் மாதரி… சில சமயம் மனசு ஒண்ணை நம்பிட்டால் அதை அனுசரிச்சு சிந்தனைகள் ஓட ஆரம்பிச்சிரும்…“
“நம்ம மேனேஜர் குரல் ரத்தினம்னு கேட்டதுடா உள்ளுக்குள்ள. அப்பறம் நிசமாவே அவர் குரல். ரத்தினம் அதைக் கேட்டு ஓடறான்.“
“உன் பிரச்னை முத்திட்டு வருதா?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“எனக்கு இது கூட பயமாய் இல்லை. இந்த நாள் எனக்கு ஓரளவு உள்ளே ஞாபகம் இருக்கிறதுன்னு தோணுது. அதை நான் தோண்டி எடுப்பேன்…“
“நடந்த பிறகு அதை கம்ப்பேர் பண்ணிக்கலாம். ஏன் மனசை இப்பிடிப் போட்டு அலட்டிகக்றே ராமு?“
வண்டியைக் கிளப்புகிறான்.
வங்கி. உள்ளே நுழைகிறார்கள்.. ரத்தினம் குனிந்து ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறான். “நில்லு ரமேஷ்…“
“என்ன?“
“இப்ப பார். இவன் தண்ணீர் பிடிக்கிறானா? நிமிர்ந்து தம்ளரை எடுத்துக் கொண்டு மூணு தப்படி, தம்ளரைக் கீழே போடுவான்.“
“பார்க்கலாம்.“
ரத்தினம் திரும்புகிறான். ஒண்ணு. ரெண்டு. மூணாவது தப்படியில் தம்ளரை நழுவ விடுகிறான். ப்ளாங் என்று சத்தம்.
“அதாண்டா. இந்த நாள் எனக்கு ஸ்பஷ்டமா தெளிவாயிட்டே வருது….“
“ஓ. பயமா இல்லியா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“பயம் கியம் ஒண்ணுங் கிடையாது. ஒரு மாதிர் நெஞ்சு கனம்மா இருக்கு. படபடப்பா இருக்கு…“
“போய் சீட்டில் உட்காரு. ஃபேனைப் போடறேன்.“
“சரி. நீ என் கூடவே இரு ரமேஷ்.“
“கண்டிப்பா.“
“ஆனால் யார் கிட்டயும் இது பத்தி மூச்சு விடாதே…“
“மூச்சு விடாட்டி நான் செத்திருவேன்.“
“பழைய ஜோக். இப்ப… அடுத்தது. ராதிகா இப்ப உள்ள நுழைவாள். வந்து கர்ச்சிஃப் எடுத்து முகத்தைத் துடைப்பாள். அப்பறமா, எனக்கு எதும் ஃபோன் வந்ததான்னு கேப்பாள்.“
ஒரு நிமிடத்ல் ராதிகா வெளியே எங்கோ போய்விட்டு உள்ளே வருகிறாள். வந்து தன் இருக்கை மேசையில் கைப் பையைப் போடுகிறாள். கர்ச்சிஃபால் முகத்தைத் துடைக்கிறாள். அவன் பக்கம் திரும்புகிறாள். “ராமு சார்?“
“கேக்கலியே?“ என்கிறாப் போல ரமேஷ் சிரிக்கிறான்.
“சொல்லு ராது?“
“எனக்கு ஃபோன் எதுவும் வந்ததா?“
ரமேஷ் ஆச்சர்யப் படுகிறான்.
“பயமா இருக்கா?“ என்று கேட்கிறான் ராமசாமி. “இல்ல“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
அப்போது மேனேஜர் கிருஷ்ணராஜ் வெளியே வருகிறார். “நேரா உன் கிட்ட வந்து எந்த ஹோட்டல்ல சாப்பிட்டேன்னு கேட்கப் போறார்“ என்கிறான் ரமேஷ். ராமசாமி சிரித்தபடி “உன்கிட்டதான் டெல்லிக்கு மெய்ல் அனுப்பிட்டியான்னு கேட்பார்“ என்கிறான்.
மேனேஜர் ராமசாமி அருகே நிற்கிறார். “என்ன ராமு? எங்க வெளியே சாப்பிட்டியா?“ என்கிறார். இருவரும் சிரிக்கிறார்கள்.
“என்ன சிரிப்பு?“
“எங்களுக்குள்ள ஒரு கேம் சார்… நீங்க வெளிய வந்து யார் கூட என்ன கேள்வி கேட்கப் போறிங்கன்னு ஒரு போட்டி“ என்கிறான் ரமேஷ். மேனேஜர் தலையாட்டி விட்டு, “டெல்லி மெயில்… அனுப்பிட்டியாய்யா?“ என்கிறார்.
ரமேஷ் ஆச்சர்யப் படுகிறான். “மாப்ள… எப்பிடிறா?“ என வியப்புடன் கையை விரிக்கிறான் ரமேஷ்.
“அதான் சொன்னேனே… இந்த நாள் சம்பவங்கள் எனக்கு அப்படியே நினைவில் மோதுது. ஒருவித படபடப்பு… சட்டென சுதாரித்து “ஒரு அவசரம் சார். நான் ஒரு நாலு மணிக்கா கிளம்பறேன்“ என்கிறான் மேனேஜரிடம். “என்ன விஷயம்?“ என்று கேட்டவர், “வேணாம். நீ பொய் மன்னன். போயிட்டு வா… நான் கிளம்பறேன் ரமேஷ். ஹெட் ஆபிஸ் போயி ஏ ஜி எம் கூட ஒரு மீட்டிங் இருக்கு…“
“போயிட்டு வாங்க சார்.“
அவர் போனதும், “உன்னை நம்பறதா வேணாமான்னே குழப்பமா இருக்குடா“ என்கிறான்.
“ஹா…“ என மூச்சிழுக்கிறான் ராமசாமி. “எனக்கு இந்த நாள் நினைவு வந்திட்டது முழுசா…“ அப்படியே நாற்காலியில் பின்பக்கமாகச் சாய்கிறான்.
“என்ன?“
“இன்னிக்கு ரமேஷ். நாலரை மணிக்கு… எனக்கு உன் பக்கத்துத் தொலைபேசியில் சேதி வரும்…“
“சேதியா?“
“ஆமாம்.“
“என்ன சேதி?“
“என் அப்பா… பாத் ரூம்ல வபக்கி விழுந்திட்டார்னு என் மனைவி ஃபோன் பண்ணுவா.“
“ஓ“ என்கிறான் ரமேஷ் பதறி. “அப்பறம்?“
“ச்“ என நெற்றியைத் துடைத்துக் கொள்கிறான் ராமசாமி. “நான் ஓடுவேன். போயி அப்பல்லோல அப்பாவைச் சேர்ப்போம். நினைவில்லாமல் கிடப்பார். தலைல அடி. ரெண்டு நாள் கழிச்சி… கண்ணைத் திறந்து என்னை அப்பா பார்க்கிறார். அவரால எதுவும் பேச முடியல்ல. நான் அழறேன். அவர் கை நடுக்கத்தோட என்னைக் கிட்டே அழைக்கிறார். என் கண்ணைத் துடைத்து விடறார்…“
“பெரிசா யோசிக்கறியேடா…“
“ஆமாம். இன்னிக்கு என்ன தேதி? ஜுலை 9 இல்லியா? பதிமூணாம் தேதி….“
அழ ஆரம்பிக்கிறான். “என்னடா என்னடா?“ என அவன் தோளைத் தொடுகிறான் ரமேஷ். “அப்பா இறந்தது பதிமூணாம் தேதிடா. சில விஷயங்களை மறக்கவே முடியாது.“
எங்கோ பேயிருந்த ராதிகா திரும்ப சீட்டுக்கு வருகிறாள். சட்டென தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான் ராமசாமி. பேசாமல் வேலையை ஆரம்பிக்கிறான்.
கடிகாரம் ஓடுகிறது. மணி நாலு. சட்டென எழுந்து கொள்கிறான் ராமசாமி. “நான்… நாலைரை. ஃபோன் வரும் ரமேஷ்… சேதியை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இல்லை. நான் கிளம்பறேன்…“
“எங்க போறே?“
“எங்கியோ… இந்த சேதி கேட்காத இடத்துக்கு…“
“நானும் வரேண்டா…“
“வேணாம் வேணாம். இது என் பிரச்சினை…“
“ராமு… ஒரு நிமிஷம்…“
அவன் காதில் வாங்கிக் கொள்ளாமல் வெளிய போகிறான். மனம் குலுங்குகிறது. தள்ளாடி நடக்கிறான் மணி பார்த்துக் கொள்கிறான். தளர்வுடன் நடக்கிறான். கால்கள் தன்னைப் போல கடற்கரைப் பக்கம் அவனைக் கொண்டு சேர்த்திருக்கிறது.
திரும்ப மணி பார்த்துக் கொள்கிறான். அப்படியே கடற்கரை மணலில் படுத்துக் கொள்கிறான். அந்தப் பக்கம் லேசாய் மங்கலான வெளிச்சம். திடீரென யாரோ ரெண்டு மூணு பேர் அவனை நோக்கி ஓடி வருகிறார்கள்.
அதில் ஒருவன் ராமசாமியை ஒரு கட்டையால் பின் மண்டையில் அடிக்கிறான். ராமசாமி இதை எதிர்பார்க்கவில்லை. அப்படியே தலையைப் பிடித்துக் கொள்கிறான். மல்லாக்க விழுகிறான் அவன். இன்னொருவன் கட்டையை ஓங்கிய நிலையில் ராமசாமியைப் பார்க்கிறான்.  அரை குறை வெளிச்சம். “டேய் இவன் இல்லடா நம்ம ஆள்“ என்று கத்திவிட்டு ஓடுகிறான்.
ராமசாமி அப்படியே மயங்கிக் கிடக்கிறான். மெல்ல இருட்டு கவிகிறது.

இ டை வே ளை

அத்தியாயம் 27

ராமசாமி வீடு. சுவரில் அப்பாவின் படம் மினுக் ஒளியுடன். பக்கத்தில் கடிகாரம் மணி பத்தைக் காட்டுகிறது. சிகாமணி என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான். எதோ தொலைக்காட்சித் தொடர் முடிந்து திலகா தொலைக்காட்சியை அணைக்கிறாள். “மணி பத்தாச்சிடா?“
“அதுக்கென்ன அக்கா?“
“இன்னும் இவரு வீடு திரும்பலையேடா?“
“இதுவரை சீரியல் ஓடிட்டிருந்தது. உனக்கு அத்தான் ஞாபகமே இல்லை. இன் ஃபாக்ட் அவர் வந்தால் இடைஞ்சலா கூட நினைச்சிருப்பே… இப்ப திடீர்னு ‘மணி‘ பத்து சிகா-‘மணி‘ன்றே… சாப்பிட வரியாடான்னே கேட்கல. இப்ப வேறொரு கவலை. எனக்கு எப்ப சாப்பாடு போடுவியோ?“
“கோகுல் அப்பவே தூங்கியாச்சி. அவன் கூடவே சாப்பிட வந்திருக்கலாம் இல்லே நீ?“
“தமிழகத்தையே புரட்டிப் போடறா மாதிரி ஒரு கதை. பாதில எப்பிடி விட்டுட்டு வர்றது… ஒருத்தன் புதுசா ஒரு ஃபிளாட்டுக்குக் குடி வர்றான்… பக்கத்து வீட்டு ஜன்னலில் அழகான முகம். சிரிச்ச முகமா ஒரு பொண்ணு… எப்பிடி ஓபனிங்?“
“ஜன்னல் ஓபனிங். உன்கிட்ட இவர் எதும் சொல்லிட்டுப் போனாரா?“
“இல்ல அக்கா. அவன் மறுநாள் காலைல பக்கத்து ஃபிளாட்டுக்குப் போய்ப் பார்த்தால்… வாசல்ல பூட்டு தொங்குது.“
“அவ எங்கியாவது வெளிய போயிருப்பாள். இது ஒரு கதையாடா?“
“இல்ல அக்கா. அப்பறம் அவன் கேள்விப் படறான்… அந்த வீட்ல யாருமே குடி இருக்கவில்லைன்னு…“
“அப்ப… அவன் பார்த்தது?“
“பேய் அக்கா பேய்…“
“என்னடா என்னையே பேய்ன்றே?“
“அந்த வீட்டுக்கு யாருமே குடி வர்றது இல்லே. ஏன்னால் அந்த வீட்டுலதான் அவள் தற்கொலை செய்துக்கிட்டா…“
“அதைத்தான் சிம்பாலிக்கா சொல்றே… வாசல்ல பூட்டு… தொங்குது. தற்கொலை… எப்பிடி?“
“அக்கா உனக்கு சிம்பாலிக் ஷாட்லாம் தெரியுமா?“
“ராகவா லாரன்சுக்குப் போட்டி தயாராகுது போல. ராத்திரில பேய்க் கதைல்லாம் எதுக்குடா?“
“அடுத்த நாள்… அவன் பக்கத்து வீட்டில் யாரோ ஒரு பொண்ணு அழுகிறாப் போல சத்தம் கேட்குது…“
“நானே இங்க அழுதுருவேன் போல இருக்கு. அவரோட மொபைல்ல ட்ரை பண்ணினேன்டா… தொடர்பு எல்லைக்கு வெளியேன்னு வருது…“
“மனைவியின் தொடர்பு எல்லைக்கு வெளியேன்னால்… சந்நியாசம் வாங்கிட்டாரா?“
“எனக்கு பயமா இருக்கு. நீ சிரிக்கறே?“
“அப்பிடில்லாம் சந்நியாசம் வாங்கிக்க மாட்டார் அக்கா. பயப்படாதே.“ என்று சிரிக்கிறான். “அவர் என்ன குழந்தையா அக்கா? பீச்ல, தியேட்டர்ல, சந்தைல தொலைஞ்சி போகறதுக்கு? வந்திருவார்…“ என்றவன் “அவர் யார்? தொலைஞ்சி போன குழந்தையையே கண்டுபிடிச்சிக் கொடுத்தவர்…“
“யாரோ தொலைச்ச பர்சையும் அவர் தான் கண்டு பிடிச்சாரு…“
“அக்கா, அவர் நிகழ்காலத்தில் இருக்காரோ கடந்த காலத்தில் இருக்காரோ? நான் எதை நம்பி எப்படி அதும் இந்த நேரத்தில் தேடிப் போறது?“
“எனக்கு என்ன தோணுதுன்னால்…“
“பயமா இல்லாதபடி எதாவது சொல்லு…“
“அவர் கடந்த காலத்தில் எங்காவது மாட்டிக் கிட்டிருப்பாரோ?“
“அக்கா. நீயே திரைக்கதை எழுத ஆரம்பிச்சாச்சி. வெரி குட். அதான் சஸ்பென்ஸ். சூப்பர் சிச்சுவேஷன் இது. கதைன்னால இப்பிடி விறுவிறுப்பு ஏத்தணும்...“
“எனக்கு BP ஏறுதுடா.“
“என்ன ஆயிருக்கும் அக்கா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கரண்ட் கட் ஆயிருக்குமா?“
“என்னடா சொல்றே?“
“கரண்ட் கட் ஆனால் லிஃப்ட் எப்பிடி வேலை செய்யும்? அவர் எப்பிடி திரும்ப நிகழ்காலத்துக்கு வர முடியும்?“
“இப்ப என்ன பண்ணுவாரு?“
“அப்படியே மாடி ஏறி, ரெண்டு வருஷத்துக்கு முந்தைய உன்னை சந்திப்பார்…“
“போரடிக்காதே சிகாமணி.“
“அக்கா. அவர் இருக்கிற வரை அவரை சட்டை பண்ண மாட்டே. இல்லைன்னால் கிடந்து உருகறே…“
“அதாண்டா பெண் ஜென்மம்.“
“சென்ட்டிமென்ட் டயலாக். இப்ப… உனக்கு அவர் வரலைன்னு கவலையா இருக்கு…“
“பயமா இருக்குடா.“
“பொதுவா இப்படி பயம் வந்தால் என்ன பண்ணுவே?“
“விளக்கேத்தி சுவாமி கிட்டே வேண்டிக்கறதைத் தவிர எனக்கு என்ன தெரியும்? நீ கிண்டல் பண்ணறே. சாமி கிண்டல் பண்ணாது…“
“அப்ப அதைப் பண்ணு. உனக்கு அதில் நம்பிக்கை இருக்கு இல்லியா?“ என்கிறான் சிகாமணி. “பத்து பத்தேகால் ஆறது. சாமி எப்ப தூங்கப் போகும்னு தெரியல… என் கதையை விட்டுட்டு இந்தக் கதைக்கு என்னை இழுக்கறே நீ.“
ராமசாமி இருட்டில் அடி பட்டுக் கிடக்கிறான்.
 
அவள் நெற்றியில் குங்குமத்தை எடுத்து இட்டுக் கொள்கிறாள். சிகாமணி “கதை வேற genre ல முவ் ஆகுதே.“ கை குவிக்கிறாள். அப்படியே கோளறு திருப் பதிகம் சொல்ல ஆரம்பிக்கிறாள். “நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்?….“
“இதே பாணில கே பி சுந்தராம்பாள் பாடுவாங்க. வெண்ணீறணிந்தது என்ன என்ன என்ன என்ன…“
திலகா ரொம்ப கவலையோடு அப்படியே சாமி படத்தின் முன்னால் அமர்கிறாள். கந்த சஷ்டி கவசம் புத்தகம் எடுத்து வைத்துக் கொள்கிறாள். வாசிக்க ஆரம்பிக்கிறாள்…
ராமசாமி மெல்ல அசைகிறான். அப்படியே தள்ளாட்டமாய் எழுந்து கொள்கிறான். தலை கனக்கிறது. அப்படியே பிடித்துக் கொள்கிறான். சுத்து முத்தும் பார்க்கிறான். மெல்ல நடக்க ஆரம்பிக்கிறான்.
“ஆகா உன் பிரார்த்தனைக்கு பலன் கண்டிப்பா இருக்கும் அக்கா… நம்பிக்கையை விட்றாதே. தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் சொல்லு. சொல்லு. பாதில நிறுத்திட்டால் வீட்டுக்கு வர்ற அத்தான் திரும்பாமல் அப்படியே நின்னுருவார். உன் சக்தியால் அவரை வரவழை இங்.க“
நேரம் மணி பத்தரை. வாசல் கதவு தட்டப் படுகிறது. “இந்நேரம் யாரு? பால்காரன் அதுக்குள்ள வந்திட்டானா?“
”நீ வேற… அது அவர்தாண்டா… எனக்குத் தெரிஞ்சாச்சி…“ அப்படியே கந்த சஷ்டி கவசத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து கொள்கிறாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டபடி வாசலைப் பார்க்கப் போகிறாள். கதவைத் திறக்கிறாள்.
வாசலில் ராமசாமி நிற்கிறான். பின் தலையில் சாயம். அப்படியே தள்ளாடி அவள் மேல் சாய்கிறான்.
“என்னங்க ஆச்சி உங்களுக்கு?“
“வாசல்லியே நிறுத்தி எல்லா கதையும் கேட்கறியே? அறிவு இருக்கா உனக்கு? நான் சொல்லாட்டி உள்ள விட மாட்டியா?“
“தலைல அடி பட்டாலும் அத்தான் குணம் மாறல்ல… அந்த அளவுக்கு மூளை பாதிப்பு இல்லைன்னு தெரியுது அக்கா.“
“வாங்க“ என அவன் கையைப் பிடித்துக் கொள்கிறாள். அப்படியே உள்ளே வந்து நாற்காலி ஒன்றில் உட்கார்கிறான் ராமசாமி. “தலைல வலி விண் விண்-னு தெரிக்குது.“
“இருங்க பார்க்கிறேன்… எதும் கீறல் மாதிரி இருக்கான்னு?“ என்று சிகாமணி வந்து தலை முடியைப் பிரித்துப் பார்க்கிறான்.
“நல்லவேளை. அவன் கம்பை வீசறான்… தற்செயலா பாத்து குனிஞ்சிட்டேன். அப்படியே கம்பு தலையை உரசினாப் போலப் போயிட்டது…“
“கம்பா?“
“உங்களை அடிக்க வர்றா மாதிரி எதிரி யாருங்க உங்களுக்கு?“
“யார் எவர்னு இனி தான் கண்டு பிடிக்கணும்…“ என்றவன் அப்படியே சோபாவில் போய்ப் படுக்கிறான். “எதுவும் சாப்பிடறீங்களா? எப்ப சாப்பிட்டீங்க?“ என்று கேட்கிறாள் திலகா.
“எதாவது… பிசைஞ்சி கொண்டு வா… எனக்குத் தெம்பே இல்லை…“ என்றவன் “மதியம் ரமேஷோட ஹோட்டல்ல சாப்பிட்டேன். ரெண்டு பேருமா வெளியே போய் வந்தோம்…“
“என்ன ஆச்சி அத்தான்? எங்க எப்பிடி இப்பிடி அடி பட்டது? உங்களைப் போயி… யார் அத்தான்?“
“அட நாலைந்து பேர் வந்தாங்க. தப்பா ஆளை அடிச்சிட்டோம்னு சொல்லிட்டே ஒடிட்டாங்க… சரியான ஆளா இருந்தால் அடி நவத்தியிருப்பாங்க போலுக்கு.“
“அடி தடி நடக்கிற இடத்துக்கு நீங்க எப்பிடிப் போனீங்க?“
“அதான் நான் பண்ணின தப்பு. சிகா… என்னாச்சின்னால்…“ என ஆரம்பித்தவன், “பெரிய கதை வேணாம். நான் என்ன பண்ணினேன்… ஏற்கனவே நடந்த கடந்த காலத்தின் ஒரு நிக்ழ்ச்சியின் பாதிப்பில் இருந்து விடுபட நினைச்சேன். அதை மாத்த நினைச்சேன். அதான் எல்லாமே குழம்பிட்டது… எதிர்பாராத வேற நிகழ்ச்சிகள் வந்து சேர்ந்திட்டது…“
திலகா ஒரு தட்டில் பிசைந்து எடுத்து வருகிறாள். சிறு குழந்தை போல அப்படியே வாயில் அவள் ஊட்டி விட வாங்கிக் கொள்கிறான்.
“வலி இப்ப எப்பிடி இருக்கு?“
“நான் பயந்த அளவு மோசமா இல்லை…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி.
“அக்கா உன் பக்தி… சூப்பர். அத்தானை திரும்ப வீட்டுக்கு இழுத்திட்டியே“ என சிரிக்கிறான் சிகாமணி. ‘அப்படியே சமையல் அறைக்குப் போய்த் தட்டில் தனக்கான உணவை எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.
“நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடல்லியா?“ என்று ராமசாமி கேட்கிறான்.
“இருக்கட்டும். எனக்கு நீங்க வந்ததே சாப்பிட்டா மாதிரி இருக்கு“ என்கிறாள் திலகா.
“அக்கா, அப்ப சமையல் அறை லைட்டை அணைச்சிறவா? அப்படியே நீ அத்தான் கூட படுக்கப் போயிருவே இல்லே?“ என்கிறான் சிகாமணி.
ராமசாமி சுவரில் அப்பா படத்தைப் பார்க்கிறான். “இன்னிக்கு ஜுலை ஒன்பதுடி.“
“அதுக்கு என்ன?“
“இன்னிக்கு தான் அப்பா பாத்ரூம்ல விழுந்து அடி பட்டுக் கிட்டார்…“
“ஐயோ அது பயங்கரம்“ என்று கன்னத்தில் கை வைத்துக் கொள்கிறாள் திலகா. “கூட இவனும் பக்கத்தில் இல்லை. பக்கத்து வீட்லயும் யாரும் இல்லை… டு லெட். எப்பிடி இருந்தது தெரியுமா எனக்கு?“
“அது எப்பிடியோ எனக்கு ஞாபகத்தில் வந்திட்டது திலக். அதனால் தான் இத்தனை குழப்பம்…“
“இது வரை நீங்க தெளிவா இருந்தீங்க. நாங்க குழம்பினோம்… இப்ப நீங்களே குழம்பறீங்க…“ என்கிறாள் திலகா.
“தங்கப் பதக்கத்தில் பிரமீளா வசனம் ஞாபகம் வருது எனக்கு“ என ஒரு வாய்ச் சோற்றை வாயில் போட்டபடியே சிகாமணி வெளியே வருகிறான். “வத்திப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே வத்திப் போயிட்டா?“
ராமசாமி பார்க்கிறான். பூஜை அலமாரி திறந்திருக்கிறது. தரையில் குப்பறப் போட்ட மாதிரி கந்த சஷ்டி கவசம். திரும்பி திலகாவைப் பார்த்துச் சிரிக்கிறான். “பயந்திட்டியாடி?“ இல்லை, என தலையாட்ட வந்தவள்… பின் ஆமாம், என்கிறதாய்த் தலையாட்டுகிறாள்.
“ச்சீ அசடு…“ என அவளை கன்னத்தில் வருடிக் கொடுக்கிறான்.
“இனிமே காணாமல் போனால். நீங்க சொல்லிட்டு தான் காணாமல் போகணும்“ என்கிறாள் திலகா.
காலை விடிந்ததும் தானாக விழித்துக் கொள்கிறான் ராமசாமி. போய் முகம் கழுவி பல் தேய்க்கிறான்.
“உடம்பு இப்ப தேவலையா?“
“BACK TO THE PAVILION ன்னு சொல்வாங்க. நான் BACK TO THE ARENA“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி.
“இனிமே நீங்க… என்ன ஆனாலும் சரி. பழைய காலத்துக்குப் போக வேணாம். கேட்டீங்களா?“ என்கிறாள் திலகா.
“வர வர காபி கொடுக்கறதுக்கே நீ கண்டிஷன் போட ஆரம்பிச்சிட்டே…“ என்றபடி வாங்கிக் கொள்கிறான் ராமசாமி. “எனக்கு அப்படியே அந்தப் பழைய காலத்தில் வளைய வந்து பழகிட்டதுடி. இன்னும் எனக்கு அங்கே வேலை இருக்கற மாதிரி தோணுது…“
“என்ன வேலை?“
அவளைப் பார்த்துச் சிரிக்கிறான். “மகாவோட பிறந்த நாள்… வந்தது. போயிருந்தேன். ரெண்டாவது தடவை.“
“முதல் தடவையே நான் வரல்ல. எனக்கு உடம்பு முடியாமல் ஆயிட்டது“ என்கிறாள் திலகா. “அந்த விளையாட்டெல்லாம் விட்டுட்டு நீங்க பழையபடி சகஜமா வளைய வரக் கூடாதா? நானும் நிம்மதியா இருப்பேன் இல்லியா?“
“நான் பக்கதுத்ல இருந்தால் டி.வி சிரியல் எப்பிடிப் பார்ப்பே?“
“அதையெல்லாம் பாத்து தான் நீங்க வரல்லியோன்னு பயந்துட்டேன்.“
“நான் மைனஸ் 1க்குப் போக வேணாம்னால், நீ சீரியல் பார்க்கறதை விட்டுறணும்… சரியா?“ என அவளைப் பார்க்கிறான்.
“அதுக்கும் இதுக்கும் என்ன?“ என்கிறாள் திலகா.
“அப்பன்னா விட மாட்டேன்னு அர்த்தம்“ என ராமசாமி சிரித்தபடியே அவள் மூக்கைத் திருகுகிறான்.
“அத்தான்…“ என வெளியே இருந்து வருகிறான் சிகாமணி. அவன் கையில் நாளிதழ். அதை மடித்துக் கொள்டே பேசுகிறான். “நேத்து நீங்க சொன்ன விஷயம்லாம் நான் யோசிச்சிப் பார்த்தேன். இப்ப… அந்த நாளில் உங்களுக்கு பழைய ஞாபகம் வந்தது இல்லியா?“
“ஆமாம்.“
“நீங்க சொன்னா மாதிரி, நடக்கப் போற நிகழ்ச்சிகளை யெல்லாம் டக்கு டக்னு ஒரு நிமிஷம் முன்னாடியே சொல்ல முடிஞ்சது இல்லியா?“
“ம்.“
சிகாமணி சிரிக்கிறான். “நீங்க எங்க தப்பு பண்ணினீங்க?“
“நீயே சொல்லு.“
“அந்த ஃபோன் கால்… அதை எடுக்காமல் சம்பவத்தை மாத்தி யமைச்சிட்டீங்க… உங்களை அறியாமல்.“
‘ராமசாமி தலையாட்டுகிறான்.
“அப்பன்னா…“ என சிரிக்கிறான் சிகாமணி.
“இவனுக்கு எல்லாமே சிரிப்பு தான்“ என்கிறாள் திலகா.
“இரு. அவன் என்னவோ கற்பனை பண்ணறான்… அதைச் சொல்லட்டும்.“
“அப்பன்னா… இனி உங்களுக்கே புதிரான சம்பவங்கள்லாம் இனி நடக்கும்..பாத்துக் கிட்டே இருங்க…“
“அப்டீன்றே?“
“ஆமாம். இதுவரை நீங்க அனுபவிக்காத சம்பவங்கள்…“
“ஓகோ.“
“ஏன்னால் அந்த சம்பவத்தின் வரிசையை நீங்களே கலைச்சிட்டீங்களா இல்லியா?“
“GOOD GUESS“ என்கிறான் ராமசாமி. “POSSIBLE TOO“ என்கிறான் யோசனையாய்.


அத்தியாயம் 28
ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். அவன் கூடவே வருகிறாள் திலகா. “இந்த மாதிரி கல்யாணமான புதுசுலதான் கீழே வரை வந்து நீ வழியனுப்பினேடி… மீண்டும் அந்த நாட்கள் ஆரம்பிச்சால் அது நல்ல விஷயம் தான்… வா.“
லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள். அது மைனஸ் 1 காட்டவில்லை. பூஜ்யம் முதல் எட்டு வரை தான் காட்டுகிறது. திலகா அவனைப் பார்க்கிறாள். “கூட நீ இருக்கியே… அதான் நோ மைனஸ் 1“ என்கிறான். “BECAUSE YOU ARE A PLUS IN MY LIFE டி கண்ணம்மா…“ என்று சிரிக்கிறான்.
“அப்ப கோகுல்?“
“பிளஸ் 1.“
“வேடிக்கை யெல்லாம் வேணாம். நீங்க இனிமேல் மைனஸ் 1 போக வேணாம். சரியா?“ என அவன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு கேட்கிறாள் திலகா. லிஃப்ட் இறங்கிக் கொண்டிருக்கிறது. “நானும் நீயும் தனியா… ஹி ஹி…“
“HE யும் இல்லை SHE யும் இல்லை. பேச்சை மாத்தக் கூடாது…“
அதற்குள் தரைத் தளம் வந்து விடுகிறது. வெளியே வருகிறார்கள். “இப்ப… நீ போன பிறகு திரும்ப நான் வந்து முயற்சி பண்ணினால்?“ என்று சிரிக்கிறான். அவள் முகம் மாறுகிறது. “சொன்னால் கேட்க மாட்டீங்களா?“ என்கிறாள். “அந்த ரௌடிப் பசங்க திரும்பவும் வருவாங்க… அப்டின்னு எனக்கு பயம்மா இருக்கு.“
“வேற யாருக்கோ விழ வேண்டிய அடி அது.“
“திரும்ப அதே ‘வேற யரோ‘ன்னு உங்களையே இன்னொரு வாட்டி அவங்க தாக்க வந்தால்?“
“ஆகா இப்பிடி ஒரு ஆசையா உனக்கு? அதுனால என்ன… திரும்ப கந்த சஷ்டி கவசம்…  எட்செட்ரா எட்செட்ரா“ என சிரிக்கிறான்.
“இப்ப என்ன சொல்றீங்க?“
“வெரி சிம்ப்பிள். இன்னும் ஒரு வாரம் பத்து நாளைக்கு நான் இறந்த காலத்துக்குப் போக மாட்டேன்…“
“திருந்திட்டீங்களா? பரவால்லியே…“
“ஏன்னால்…“
“ஏன்?“
“இது ‘எனக்கு‘ இறந்த காலம் அல்ல. என் அப்பாவுக்கு இறந்த காலம்…“ என சிரிக்க நினைக்கிறான். “BAD JOKE. எனக்கே சிரிப்பு வரல்ல.“
இருவருமே கொஞ்ச நேரம் பேசவில்லை.
“வேணாம். அதைத் தவிர்க்கறது நல்ல விஷயம் தான். இப்ப சத்திக்கு உங்களைப் பற்றி எனக்கு பயம் இல்லை.“ அவன் பக்கமாய் உரசினாப் போல வந்து ஒட்டிக் கொள்கிறாள். “அப்பா ஞாபகம் ரொம்ப இடைஞ்சல் பண்ணாமல் பாத்துக்கங்க. நல்ல மனுசன். என்னை அவர் தன் பொண்ணா தான் நடத்தினார்.“
“ஒரு ஜவுளிக்கடை குமாஸ்தா. என்னையும், மாதுவையும் இவ்ள தூரம் தூக்கி விட்டதே ஆச்சர்யம். சரி. அப்பா கதை வேணாம்… ஓ. கே.“ சிரித்தபடி போய் வண்டியைக் கிளப்புகிறான். “திலகா, வந்து ஆபிஸ்ல என்னை விட்டுட்டுப் போறியா? உனக்குதான் வண்டி ஓட்டத் தெரியுமே?“
“வேணாம். உங்களை நம்பறேன். டாட்டா“ என்று காட்டுகிறாள் திலகா.
வண்டி காம்பவுண்டை விட்டு வெளியேறுகிறது.
வங்கி. மதியம் பன்னிரண்டரை. ரமேஷ் வேலையாய் இருக்கிறான். “உன்கிட்ட கொஞ்சம் பேசணுமேடா?“ என்கிறான் ராமசாமி.
“ஒரு மணி வாக்கில் சாப்பாட்டு நேரத்தில் பேசலாமே?“
“ம். எனக்கு தான் வேலையே ஓடல்ல.“
“ஏன்?“
“பழைய காலம்… உள்ளே பார்த்தால் எனக்கு கிருஷ்ணராஜ் உட்கார்ந்திருக்கறா மாதிரியே இருக்கு.“
“ரெண்டு வாட்டி மகாவைப் பார்க்கறது அதிர்ஷ்டம்னால்… ரெண்டாவது வாட்டி கிருஷ்ணராஜை சமாளிக்கறது… பாவம்டா நீ“ என்று ரமேஷ் சிரிக்கிறான். “எனிவே நான் வேலையைப் பார்க்கிறேன்.“
“கொரியர் சார்…“ என்று ஒருவன் வர, அவனிடம் கையெழுத்திட்டு கவர்களை வாங்கியபடியே, அவனது தாளில் அலுவலக சீல் நச்சுகிறான்.
“தம்பி?“ என்று குரல் கேட்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான். நகை அடகு வைத்துப் போன அந்த ஏழைப் பெண்.
“வாம்மா…“ என அவளை அருகே அழைக்கிறான். அவளைப் பார்க்கப் பாவமாய் இருக்கிறது. அவள் கணவனைப் பற்றிக் கேள்வி கேட்க நினைக்கிறான். எப்படிக் கேட்க எனத் தயக்கமாய் இருக்கிறது. அவளையே பார்க்கிறான்.
“நீங்க உபகாரம் பண்ணினீங்க தம்பி. ரொம்பப் பெரிய விஷயம்…“ என்கிறாள்.
“இருக்கட்டும்“ என்கிறான் அடக்கமாக.
“ஆனால்….“
“சொல்லுங்கம்மா.“
“அவர்… இறந்துட்டாரு.“
அவள் அழவில்லை. அழுது தீர்த்திருப்பாள் என்று காட்டுகிற முகம். தவிரவும் பொது இடத்தில் அழுவது பற்றி அவள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டிருக்கலாம். ஓரளவு அவள் அவர் சாவை எதிர்பார்த்தும் இருக்கலாம்.
“ஐயோ“ என்கிறான் மெல்லமாய். இதைச் சொல்லவா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொள்கிறான்.
“ஓரளவு டாக்டர்மாரே ஆபரேஷன் பண்ணிப் பாக்கலாம்னு தான் சொன்னாங்க. அத்தனைக்கு நம்பிக்கையாச் சொல்லல…“
“அப்படியும் நீங்க நல்லபடியா முயற்சி எடுத்து அவருக்கு உங்களால எவ்வளவு முடியுமோ அதைப் பண்ணினீங்க…“ என்கிறான் ராமசாமி.
“ரொம்ப நல்ல மனுசன் அது….“ என்கிறாள் அவள். “அவரு வீட்டுக்கு வரும்போது நான் கட்டாயம் வீட்ல இருக்கணும். இல்லாட்டி தேடிக்கிட்டு பக்கத்து வீடு எதிர் வீடுன்னு வந்து பாக்கும்…“ அதைச் சொல்ல அவள் வெட்கப் படுகிறாள்.
“ம். நல்ல ஒத்துமையா இருந்தீங்க போல…“ என்கிறான் புன்னகையுடன்.
“வேளை வந்திட்டது. அவர் போயிடடாரு. ஆனால்… நான் முன்ன போயிருந்தால்… அது கண்டிப்பா தூக்குல தொங்கிருக்கும். நிச்சயம்“ என்கிறாள். “என் மேல அவருக்கு உசிரு.“
அதற்கு மேல அவனுக்கு என்ன பேச தெரியவில்லை. அவளையே பார்த்தபடி இருக்கிறான்.
“தம்பி. அவரு போயிட்டாரு. போயி நாலு நாளு ஆயிட்டது.“
“சொல்லுங்க“ என்று தலையாட்டியபடி அவளையே கூர்ந்து பார்க்கிறான் கருணையுடன்.
“எனக்கு ஒரு உதவி வேணும் தம்பி.“
“சொல்லுங்க. சொல்லுங்க.“
“எவ்வளவோ செஞ்சிட்டீங்க நீங்க. எப்பிடிக் கேட்கறதுன்னு தான் தெரியல…“
“வந்தாச்சி. கேளுங்க. முடிஞ்சா செய்யறேன்.“ அவனுக்கு அவளுக்கு உதவ வேண்டும் பொல் இருக்கிறது. சற்று இதமான பார்வை பார்க்கிறான்.
“அதான். அவர் போயி… பத்தா நாள்…“
“அதுக்கு…“
“நான் தாலியறுக்கணும்“ என நேரே அவள் அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அதில் துக்கம் இல்லை. எல்லாம் கடந்த நிமிர்வு அது. அவனுக்கே அவள் அப்படி பட்டென்று பேசியது என்னவோ போலிருக்கிறது. வெறுமனே தலை யாட்டுகிறான்.
“தாலி இல்லை.“
அவளையே வெறித்துப் பார்க்கிறான்.
“அது இங்க இருக்கு. அடகுல…“
அப்போது தான் அவனுக்கு அவள் கேட்டதே உறைக்கிறது. அவனுக்கு ரொம்ப வருத்தமாய் இருக்கிறது.
“நகையை மீட்டுதான் வெளிய எடுக்க முடியும்.“
“என்கிட்ட பணம் இல்லியே.“
“அப்பன்னா நாங்க என்ன பண்றது?“ என அவளைப் பார்க்கிறான். அவனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருக்கிறது.
திடீரென்று அவள் அழுவதைப் போல ஆரம்பித்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறாள். “ஏழைங்களுக்கு சடங்ககுகள் கூட  பெரிய இம்சையா இருக்குது தம்பி. இது கௌரவப் பிரச்னை எங்களுக்கு…“
அவன் அவளையே பார்க்கிறான். “சரி தம்பி ஆவறது படி ஆவட்டும்…“ என ஒரு தீர்மானம் போல எழுந்து கொள்கிறாள்.
“இருங்க“ என்கிறான் அவன். அவள் கண்கள் விளக்கேற்றிக் கொள்கின்றன.
“எத்தனையோ உதவி செய்திருக்கேன் நான் என் வாழ்க்கையில். இது மாதிரி ஒரு உதவி நான் செய்ததே இல்லை. யாரும் கேட்டதும் இல்லை.“
“அந்தத் திருமாங்கல்யம்… அது மட்டும் போதும் தம்பி…“ என்கிறாள். “உன்னைப் பார்த்துக் கேட்கலாம்னு பட்டுது நீ கேலியடிக்க மாட்டே…ன்னு இருந்தது.“
“சரி. அப்படி உட்காருங்க“ என அவன் உள்ளே போகிறான். “மத்த நகை… எதுவும் வேணாம். திருமாங்கல்யம் மாத்திரம் தந்தா போதும். அதையும் திரும்ப நான் கொண்டாந்து தந்திர்றேன். இப்ப சத்திக்கு…“
சரி சரி, என்று தலையாட்டியபடியே அவன் ஒரு செக் கிழித்து கையெழுத்திட்டு எடுத்துக் கொள்கிறான். உள்ளே போகிறான்.
மதிய உணவு இடைவேளை. “ஏய் மகா பொறந்த நாளை நீ தானேடா சூப்பரா வழி நடத்தினே. உனக்கு ஞாபகம் இருக்கா?“ என்றபடியே டிபன் பாக்ஸைப் பிரிக்கிறான் ராமசாமி.
“தினப்படி இங்க எல்லாரும ஒண்ணா உட்கார்ந்து அரட்டை யடிச்சிக்கிட்டே சாப்பிடுவோமேடா. அது ஒரு காலம். அந்தப் பையன் ஸ்ரீநிவாஸ் அவனும் அருமையான பையன். அட கடைசில அவளுக்கு இப்பிடி ஆனப்ப அவனைத் தான் பார்க்கவே சகிக்கல்ல…“
“துரும்படியில் யானை படுத்திருக்கும்னு சொல்வார்கள். எந்த சின்ன நொடிக்குப் பின்னால எத்தனை பெரிய விபரீதம் இருக்குன்னு நம்ம யாருக்குமே தெரியறது இல்லை.“
“சூப்பர்“ என்றபடியே ரமேஷ் வந்து உட்கார்கிறான். “அண்ணன் பொண்ணு சியாமளா… இந்தப் பரிட்சைல நல்ல மார்க்கு. படிப்புல எப்பவுமே அவளுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு.“
“வெரி குட். வெரி குட். நல்லா படிக்கட்டும். அவளுக்கு நீதான் படிக்கட்டு.“
“நீ எவ்வளவு வேணாப் படி. செலவு கிலவுன்னு கவலை வேணாம். நல்லா படிச்சா வெளி நாட்டுக்கே உன்னை அனுப்புவேன்னு சொல்லியிருக்கேன்…“
“எப்பிடி இருக்கான் உங்க அண்ணா?“
“அவன் கதைய விடு. வீட்டுக்குத் தலைவன் அவன். தறுதலை-வனா இருக்கான். கார் வாங்கினியே எப்பிடி இருக்குன்னு கேட்டானாம். ஹாரனைத் தவிர எல்லாத்திலயும் சத்தம் கேட்குது-ன்னானாம் அடுத்தவன். அந்தக் கதை.“
“வெண்டைக்காய் சாம்பார். கொஞ்சம் ஊத்திக்கறியா?“
“போடு போடு. நீ வெண்டைக்காய்னா உருகிருவியே…“ என்று சிரிக்கிறான் ரமேஷ். “என்னவோ பேசணும்னியே ராமு?“ என எடுத்துக் கொடுக்கிறான்.
“ஆ… ஆமா… இங்க பாத்தியா?“ என்று தலையைக் காட்டுகிறான்.
“என்ன?“
“கிட்ட வந்து பார்…“
வந்து பார்க்கிறான். “ஐயோ ரத்தம் கட்டியிருக்கு. எங்கயாவது இடிச்சிண்டியா?“
“இல்ல. ஒருத்தனை என்னை ஒரு கட்டையால நச்னு…“
“ஐயய்யோ. எப்போ?“
“நேத்தி…“
“நீ நேத்தி வேலைக்கே வரில்லியேடா.“
“நான் வந்திருந்தேன்.“
“எங்கன்னால், இங்கியே இருந்தேன். உன் கூடவே இருந்தேன். அதாவது ரெண்டு வருஷம் முந்தி – அப்டிம்பே.“
“கரெக்ட்.“
“பாங்க்குக்கு உள்ள வந்து உன்னை ஒருத்தன் அடிச்சானா?“
“அது வேற கதை… சொல்றேன்.“
“ஏய் நம்ம பாங்க்ல ஒரு ROBBERY … நடந்ததே. உனக்கு ஞாபகம் இருக்கா?“ என கண் சிரிக்கக் கேட்கிறான் ரமேஷ்.
“அதை அப்பறம் பேசலாம். நான் நேத்தி சாயந்தரம் கடற்கரையில் இருந்தேன்.“
“கடற்கரைக்கு ஏண்டா போனே?“
“நேத்தி என்ன தேதி? ஜுலை 9. ரமேஷ் உனக்கு ஞாபகம் இருக்கா? நம்ம பாங்க்குக்கு சாயந்தரம் நாலரை மணி வாக்கில் ஃபோன் வந்தது…“
“என்னனு?“
“என் அப்பா பாத் ரூம்ல வழுக்கி விபந்துட்டாரு. தலைல அடின்னு…“
“ஆமாம். ஆமாம். ஞாபகம் வருது…“
“ரெண்டாவது தடவை அதே சேதியைக் கேட்கணுமான்னு நான் தவிர்க்கப் பார்த்தேன். ஆபிசை விட்டு வெளியே வந்தேன்.. கடற்கரை பபக்கம் போனேன்…“
“ஓகோ.“
“அப்பதான் அடி வாங்கிக் கிட்டேன். யாரோ ஒருத்தன்னு என்னைத் தப்பா புரிஞ்சிக்கிட்டு…“
“எத்தனை பேர்?“
“மூணு பேர்.“
“ஐயோ.“
“அதில் முதல் அடி போட்டவன் திரும்ப ரெண்டாவது அடிக்கு கம்பை வீசுமுன் நான் அவனைப் பார்த்தேன். அவன் முகம் என்க்கு இப்பவும் ஞாபகம் இருக்கு.“
“பரவாயில்லை. அதை வெச்சி என்ன பண்ணப் போறே?“
“அடுத்தவன் என் பக்கமா வந்தான். அவன்தான் என் முகத்தைக் கிட்டத்தில் பார்த்தது. இது வேற ஆளுடா.. ஆள் மாறிப் போச்சி…ன்னு கத்திக்கிட்டே அவங்க ஓடிட்டாங்க.“
“நல்ல வேளை பின்ன எப்பிடியோ நீ வீடு வந்து சேர்ந்திட்டே. இது மாதிரி விஷயங்கள் ஏன் நடக்குது? அதுதானே உன்னோட கேள்வி?“
“அதுவேதான். நீ இப்படி விஷயம்லாம் எங்க படிச்சிட்டு வரே. அதுவே  எனக்கு ஆச்சர்யம். இன் ஃபாக்ட், நீ என்னை நம்பவே மாட்டியோன்னு என்கு இருந்தது.“
“இப்பவும் நம்பல“ என்று சிரிக்கிறான். “இது உன்னோட இல்யூஷனா இருக்கலாம்‘…“ என்றவன், “உன் கூட நான் இப்ப பேசிட்டிருக்கேனே? இது என்னோட இல்யூஷனாகக் கூட இருக்கலாம்னு படுது எனக்கு.“
“அன்னிக்கு டெலிபதின்னே. இன்னிக்கு இல்யூஷன்றே. இதுக்கு நோ செல்யூஷனா இருக்கு.“
“வாழ்க்கைல நிறையப் புதிர்கள் இருக்கு ராமு. நிறைய விஷயங்கள் அதில் விளக்க முடியாமலேயே நடந்து முடிஞ்சும் ஆயிருது. ஏன்னா மூளை எல்லாத்தையும் தன் அனுபவப் படி அறிவுத் தளத்தின் படி உள் வாங்கிக்குது. அதன் கோணம் மாறும் போது குழப்பம் தான் வருது.“
“மோர் குடிக்கிறயா?“
“வேணாம். ஏற்கனவே தொண்டை கட்டினாப் போல இருக்கு. எல்லாம் அனுபவங்கள்னு போயிட்டே இருக்கறது நல்லது.“
“நீ என்னவோ ALTERNATE REALITY அது இதுன்னு என்னவோ சொன்னியேடா. இப்ப சிகாமணி சொல்றான். நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அனுபவிக்காத சம்பவம் இது. ரௌடிங்க கிட்ட அடி வாங்கியது. இதுனால திரும்ப நான் பழைய காலத்துக்குப் போகும் போது திரும்ப உனக்குத் தெரியாத சம்பவங்கள்லாம், பழைய காலத்தில் நடக்காதது எல்லாம் நடக்கும். அது வேற உலகம். இன்னொரு உலகம்… அப்டின்றான்.“
“சரியாத் தான் படுது. கண்ணா…“ என கை கழுவி விட்டு அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான். “ஒரே விஷயம் ரெண்டாவது தடவை வந்தாலே அது முன் தந்த அதே அனுபவத்தைத் தர்றது இல்லை. ஏன்னா அது உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச அனுபவம்தானே? அதுவே ALTERNATE REALITY தானே?“
“விட்டால் பேயே ALTERNATE REALITYன்னுருவீங்கடா நீங்க“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
உணவு முடிந்து வெளியே வருகிறார்கள். மேனேஜர் ராமகிருஷ்ணன் “என்னன்னவோ பேசறீங்க? எதும் கண்ட கண்ட ஆங்கிலப் புத்தகங்கள் வாசிக்கறீங்களாக்கும்?“ என்று கேட்கிறார்.
சிரித்தபடி அவரைத் தாண்டிப் போகிறார்கள்.
அப்போது அலைபேசி அழைப்பு. எண் பார்க்கிறான்.
“ஹலோ…“
மறுமுனையில் திலகா. “ஹலோ.“
“எடுக்கறானா தொடர்பு எல்லைக்கு வெளியேயான்னு பாக்கறியா திலக்?“
“தொடர்பு எல்லைக்கு உள்ளே… அப்பிடியே இருங்க“ என்று போனை வைக்கிறாள் திலகா.

அத்தியாயம் 29
காலண்டரில் நாள்த் தாள்கள், அகாடின் வாத்தியம் போல, ஆனால் கீழிருந்து மேலாகப் பறக்கின்றன.
வங்கி. வாசலில் வாகனங்கள். அத்தோடு பச்சை வண்ண ஸ்கூட்டி பெப். அதன் முகப்பில் WHY SHOULD BOYS HAVE ALL THE FUN என எழுதி யிருக்கிறது.
வேலை மும்முரத்தில் இருக்கிறது வங்கி. மகா சிரித்தபடி அருகே இருக்கும் ராதிகாவிடம் எதோ சொல்கிறாள். ராதிகா பதிலுக்குப் புன்னகை செய்தபடியே வந்து இருக்கையில் அமர்கிறாள். அவள் கையில் ஒரு பூச்சரம். அதை பாதி நறுக்கி மகாவிடம் நீட்டுகிறாள். மகா சிரித்தபடி அதை வாங்கி, ஏற்கனவே தன் தலையில் இருக்கும் பூக்களோடு சேர்த்து வைத்துக் கொள்கிறாள். தலையில் இருந்த பூ வரிசையோடு ஒரு பிறை வடிவத்தில் இதையும் டிசைனாக இணைத்துக் கொள்கிறாள்.
வழக்கமான டிராஃப்ட் கூட்டம்.. அமர்ந்திருக்கிற அந்த வரிசையைப் பாரக்கிறான் ராமசாமி. கல்லூரி போகிற அமர்க்களத்தில் உடை உடுத்திய ஆண் பெண் வரிசை. அதில் மலிவான சீட்டிப் பாவாடையுடன் தாவணிப் பெண் ஒருத்தி. தலையில் கனகாம்பரம். அந்தப் பொருந்தாக் கணம் ஒருகணம் அவனை யோசிக்க வைக்கிறது. அவன் பார்ப்பதை அவளும் கவனிக்கிறாள். கூந்தலை சற்று முன்னால் விட்டிருக்கிறாள். மெலிந்த சிறு உருவம்.
பொதுவாக எதும் அலுவலகத்தில் இருந்து வங்கி வேலையாய் இப்படி வேலையாட்களை அனுப்பி வைப்பது உண்டு. நல்ல திருத்தமான முகம். மஞ்சள் பூசிய முகத்தில் நெற்றி நடுவில் சாந்துப் பொட்டு வைத்திருக்கிறாள் அந்தப் பெண். அவளை முன்னே பார்த்த நினைவு இல்லை ராமசாமிக்கு.
“சத்யா ஸ்டோர்ஸ்-“ என்று பணம் பெறுதல் கவுன்டரில் இருந்து குரல். சத்யா ஸ்டோர்ஸ்… அவனுக்குக் கேள்விப் பட்ட பெயராய் இருக்கிறது. அவன் முகத்தில் சிந்தனைக் குறிகள். நிமிர்ந்து பார்க்கிறான். அவள் போய் கவுன்டர் அருகே நிற்கிறாள்.
ஏற்கனவே பணக் கட்டுகளைக் கொடுத்துவிட்டு எண்ண அவள் காத்திருந்திருக்க வேண்டும். அவள் முன்னாலேயே கவுன்டர் நபர், நோட்டுகளை எண்ணும் இயந்திரத்தில் சரசரவென்று இயக்கி கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கை நூறு சரி பார்க்கிறான். நூறு ரூபாய் கட்டுகள். ஐந்நூறு. ஆயிரம்… என வகை பிரித்து ஒண்ணு மேல் ஒண்ணாய் அடுக்கியபடி அவள் எழுதிக் கொடுத்த சலான் புத்தகத்தில் டிக் செய்துவிட்டு, அந்த சலானில் வங்கியின் சீல் நச்சுகிறான். அதன் ஒரு தன் பகுதியைக் கிழித்து  எடுத்துக் கொண்டு புத்தகத்தை அவளிடம் தந்து விட்டு “நெக்ஸ்ட்“ என்கிறான்.,
தாண்டிப் போகையிலும் அவள் அவனைப் பார்க்கிறாள். அவன் அவளையே பார்க்கிறான் என்பதைப் பார்க்கிறாள். அவனுக்கு அருகே மகாவிடம் போய் சில செக்குகளை நீட்டுகிறாள். “செக்கை DROP BOX ல போட்டுறலாமே?“ என புன்னகையுடன் அவள் DROP BOX இருக்கும் திசையைக் காட்டுகிறாள். “இல்ல. நாங்க சத்யா ஸ்டோர்ஸ். கரன்ட் அக்கவுண்ட். தினசரி செக் போட வேண்டி யிருக்கும். BULK சலான் புக் இருக்கு. அதுல குடுத்ததுக்குக் கையெழுத்தும் சாப்பாவும் வாங்கிக்குவோம்.“
மொத்தையான சலான் புத்தகத்தை அவள் நீட்டுகிறாள். மகா கை வேலையாக இருக்கிறாள். ராமசாமி அவளை “இங்க வாங்க“ என அழைக்கிறான். நன்றியாக ஒரு பார்வை பார்த்தபடி மகா “வாங்கிக்கறீங்களா?“ என புன்னகை செய்கிறாள். “ஓ எஸ். இங்க கொண்டு வாம்மா…“ என கை நீட்டுகிறான் ராமசாமி. அவள் வந்து சலான் புத்தகத்தைத் தருகிறாள்.
“கையெழுத்து அழகா இருக்கு“ என்கிறான் ராமசாமி.
“உன் கையெழுத்தை விட எல்லாரிதும் நல்லாதான்டா இருக்கும்“ என்கிறான் பக்கத்தில் இருக்கும் ரமேஷ். அந்தப் பெண் புன்னகை செய்கிறாள். அடக்கமான பெண்… என நினைத்துக் கொள்கிறான் ராமசாமி.
“எவ்வளவு கேஷ் கொண்டு வந்து கட்டினே?“
“நாலு லட்சத்தி பதிமூணாயிரம் சார்.“
“கூட துணைக்கு யாரும் வர்லியா?“
“எதுக்கு சார்?“
“பெரிய அமவுண்ட்டா இருக்கே…“
“அதெல்லாம் நான் வருவேன் சார். துணைக்கு பாதுகாப்புக்குன்னு கூட ஆள் எல்லாம் கேட்க மாட்டேன்…“ சிரிக்கிறாள். “அதுக்கு அவரே தனியா வந்திறலாமே?“
“லாஜிக். குருடன் தண்ணிக்குப் போனால் கூட எட்டாள் வேணும்னு பழமொழி. அது ஞாபகம் வருது…“ என்றவன், “உனக்குத் தேவை இல்லை“ என்கிறான்.
சலான் புத்தகத்தில் குண்டூசி குத்தி நாலைந்து செக்குகள் இருக்கின்றன. “கிளியரிங் தனியா, டெபாசிட் தனியா பிரிச்சி எழுதியிருக்கியாம்மா?“ அழகாகத் தலையாட்டுகிறாள்.
“சத்யா ஸ்டோர்ஸா?“
“எஸ் சார்.“
“என்ன பண்றீங்க?“
“ஜவுளி சார்.“
“அடேடே…“ என புன்னகை செய்கிறான் ராமசாமி. “அங்க நீ என்ன வேலை பார்க்கறே?“
“அக்கவுண்ட்ஸ் பார்க்கிறேன் சார்.“
“வெரி குட். என்ன படிச்சிருக்கே‘?“
“பி. காம்.“
“வெரி குட்“ என்கிறான். அப்படியே சலானில் கையெழுத்து பார்க்கிறான். ஃபார் சத்யா ஸ்டோர்ஸ் என்று போட்டு அவள் கையெழுத்து.
நிமிர்ந்து அவளைப் பார்க்கிறான். “உட்காரும்மா“ என்று அவளுக்கு தன் எதிர் இருக்கையைக் காட்டுகிறான். “என்னாச்சி சார்?“ அவள் முகத்தில் கவலை. “எதுவும் தப்பாயிருச்சா?“
“ஆமாம் மற்றும் இல்லை“ என சிரிக்கிறான்.
“அவ கிட்டியே ஆரம்பிச்சிட்டியா ராமு?“ என ரமேஷ் அவனைப் பார்க்கிறான்.
“உன்னை நானே பார்க்கணும்னு இருந்தேன்ம்மா…“
“என்னையா?“ என நெஞ்சைத் தொட்டுக் கேட்கிறாள் அவள். “என்னை உங்களுக்குத் தெரியுமா சார்?“
“ஆமாம் மற்றும் இல்லை அப்டின்றாதே ராமு“ என்கிறான் ரமேஷ்.
“ஆமாம் மற்றும் இல்லை“ என்கிறான் ராமசாமி.
“விளையாடாதீங்க சார். எனக்குப் புரியல“ என்கிறாள் அந்தப் பெண்.
“உன் பேர் கிருஷ்ணவேணி… தானே?“
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்?“ என அவள் வியக்கிறாள்.
“கிருஷ்ணவேணின்னு பேர் வெச்சிக்கிட்டவங்க கூந்தலை இப்படி முன்னால போட்டுக்குவாங்க…“ என சிரிக்கிறான்.
“சார் டிராஃப்ட் ரெடி ஆயிட்டதா?“ என ஒருவன் வந்து நிற்கிறான். “பத்து நிமிஷம் ஆகும் தம்பி. போயி காபி கீபி சாப்பிட்டுட்டு வா“ என அவனை அனுப்புகிறான் ராமசாமி.
ரமேஷ் அந்த விளையாட்டில் இணைந்து கொள்கிறான். “சலான்ல கையெழுத்து போட்டிருக்கியேம்மா…“
“ஓ“ என்கிறாள்.
“நல்லா இருக்கியா கிருஷ்ணவேணி?“ என்கிறான் ராமசாமி. அவளுக்குத் திகைப்பாய் இருக்கிறது. என்றாலும் அவன் கேள்வி அவளுக்குப் பிடித்திருக்கிறது. “இருக்கேன் சார்“ என்று புன்னகை செய்கிறாள்.
“உன் கூட நான் பேசணும் கிருஷ்ணவேணி.“
“என் கூடவா சார்?“
“ஆமாம்.“
“என்ன விஷயம் சார்?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ். ‘அப்பிடித்தானேடா?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி. “BUT ALL FOR THE GOOD“ என்கிறான். “நீ நல்ல பெண்ணும்மா. உன்னைப் பத்தி நான கேள்விப் பட்டிருக்கேன்…“
“எப்பிடி சார்?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ்.
அப்போது கடையில் இருந்து வாடிக்கையாக வரும் டீ வருகிறது. தண்டியான பெரிய பிளாஸ்க்கில் இருந்து காகித டம்ளரில் ஊற்றி ஊற்றி எல்லா அலுவலர் மேசையிலும் வைக்கிறான் டீக்கடை ஆள். “தம்பி இன்னொரு டீ…“ என்று கேட்டு வாங்கி அவள் பக்கம் நகர்த்துகிறான் ராமசாமி. அவள் திகைக்கிறாள். “இல்ல சார் இருக்கட்டும்…“ என்கிறாள் தயக்கமாய்.
“ஏம்மா டீ சாப்பிட மாட்டியா?“
“சாப்பிடுவேன் சார்.“
“பின்ன எடுத்துக்க…“
அவள் மேலும் தயங்குகிறாள். “ஆறிரப் போகுது கிருஷ்ணவேணி…“ என உரிமையாய்ப் பேர் சொல்லி வற்புறுத்துகிறான் புன்னகையுடன். “ரொம்ப தேங்ஸ் சார். இன் ஃபாக்ட்… நான் காபி தான் குடிப்பேன்…“ என்கிறாள்.
“தெரியும்.“
“தெரியுமா?“
“எப்பவாவது டீ சாப்பிடலாம் தப்பு இல்லை…“ என்றவன் சிரித்தபடி, “ஒரு நல்ல காபி வாங்கித் தரேன் அடுத்து…“ என்கிறான்.
“இருக்கட்டும் சார்.“
“உனக்கு ஆட்சேபணை இல்லைன்னால்….“
“காபி கடிக்கறதுல என்ன சார் ஆட்சேபணை இருக்கு? என்ன விஷயம். இப்பிடியே பேசலாம் இல்லியா?“
டிராஃப்ட் வாங்க காத்திருக்கிற ஒருவன் தாமதத்துக்கு எரிச்சல்பட்டு இடத்தில் இருந்து எழுந்து இவர்களைப் பார்க்கிறான்.
“வேணாம். இது ஆபிஸ். இங்க வேணா…“
அவள் குழப்பமாய் அவனைப் பார்க்கிறாள். “பி. காம் படிச்ச பொண்ணு தானே? பயம் கியம் ஒண்ணும் இல்லியே?“
“அட அதெல்லாம் இல்லை சார். உங்க கிட்ட என்ன பயம்?“ என்கிறாள். சற்று இளக்கங் காட்ட ஆரம்பித்திருக்கிறாள் என்று ராமசாமிக்கு நம்பிக்கை வருகிறது.
“நல்ல காபி. கிருஷ்ணா கபே காபி… சரியா?“
“அங்க காபி நல்லா யிருக்கும் சார்.“
“வேலைக்கு நடுவுல அங்க நீ வந்து காபி சாப்பிட்டுட்டுப் போவே இல்லியா?“
“பாத்திருக்கீங்களா சார்?“ என வெட்கப் படுகிறாள்.
“நாளைக்கு சாயந்தரமா ஒரு நாலரை மணி வாக்கில்… கிருஷ்ணா கபே… சரியா?“
“இருக்கட்டும் சார். ஒரு காபிக்காக நீங்க அவ்வளவு தூரம் வரணுமா?“
“வரேன். எனக்கு உன் கூட பேசணும் கிருஷ்ணவேணி.“
“என் கூட என்ன சார்?“
“அப்பா என்ன செய்யறாரு கிருஷ்ணவேணி?“
“பஸ் கண்டக்டர் சார்.“
“எப்பவுமே எல்லாத்துக்கும் ரைட் ரைட் தான். அப்படியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி. அவளைப் பார்த்து “பயப்படாதே. எனக்குக் கல்யாணம் ஆயிட்டது.“
“என் அப்பாவை உங்களுக்குத் தெரியுமா சார்?“
“இனிமே தெரிஞ்சுக்குவேன் கிருஷ்ணவேணி.“
“நீங்க பேசறது புரியல சார்…“
“எங்களுக்கே புரியாது அவன் பேசறது…“ என்கிறான் ரமேஷ்.
“சார் டிராஃப்ட் ரெடியாயிட்டதா?“
“உன்னை காபி சாப்பிட்டுட்டு வரச் சொன்னேனே ஐயா?“
“இப்ப தான் சார் சாப்பிட்டேன்…“ ராமசாமி அவனைப் பார்க்கிறான். “டிபன் சாப்பிடச் சொல்லப் போறீங்களா சார்?“ என்கிறான் அந்தப் பையன்.
“இல்ல. நான் டிபன் சாப்பிட்டுட்டு வரலாம்னு பார்த்தேன்… பரவால்ல. அஞ்சே நிமிஷம். சாரி I DELAYED YOU.“ என்றவன் “சரி கிருஷ்ணவேணி. GOOD DAY. நாளை, சாயந்தரம், நாலரை. கிருஷ்ணா கபே…“
“இருக்கட்டுமே சார். இன்னொரு நாளைக்கு….“ என்று தயங்குகிறாள். “பயமா இருக்கா கிருஷ்ணவேணி?“ என திரும்பக் கேட்கிறான் ராமசாமி. “ஐய உங்க கிட்ட என்ன சார் பயம் எனக்கு?“ என்கிறாள்.
“அப்ப நாளைக்கு…“
“சாயந்தரம் நாலரை. சரி“ என்று புன்னகை செய்கிறாள். “கிருஷ்ணா கபேன்னால் யார் வேணாம்னு சொல்லுவாங்க சார்.“
“பார்க்கலாம்…“ என்று குனிந்து கிடுகிடுவென்று டிராஃப்ட் தயாரிக்க ஆரம்பிக்கிறான்.
“அவளை நீ பார்த்திருக்கியா ராமசாமி?“ என்கிறான் ரமேஷ்.
“இப்பதான் முதல தடவை.“
“ரொம்பத் தெரிஞ்சவ மாதிரி பழகறே பின்னே?“
“தெரிஞ்சவ தான்…“
“எப்பிடி?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ராமசாமி. “வா தம்பி“ என அந்தப் பையனை அழைக்கிறான். “இந்தா. சலான்ல கையெழுத்து போடு.“
“இவனுக்கு டீ வாங்கித்தர மாட்டியே? பொண்ணுங்கன்னா வழியறே?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“காரணம் இருக்கு. ஆனால் அது…“
“வேணாம்“ என ரமேஷ் எழுந்து போகிறான்.
அலுவலகம் விட்டு திரும்பி நடந்து வருகிறான் ராமசாமி. ரமேஷ் எதோ வேலை என முன்பே கிளம்பிப் போயிருக்கிறான். கிளம்ப நேரம் ஆகி விட்டது. மணி ஐந்தரை. வெயில் அடங்கி மெல்ல நிழல்கள் உரு பெருக ஆரம்பித்த வேளை. நடந்து கொண்டே இருந்தவனுக்கு திடீரென்று என்னவோ சரியில்லை போலத் தெரிகிறது. சட்டென நிற்கிறான். சுற்று முற்றும் பார்க்கிறான். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. திரும்ப நடக்க ஆரம்பிக்கிறான். திரும்ப அந்த உறுத்தல். சட்டென நிற்கிறான். சோசியக்காரன் மரத்தடி வரை வந்திருக்கிறான். திரும்ப சுற்று முற்றும் தேடிப் பார்ககிறான். சற்று தள்ளி ஒரு ரௌடி நின்றபடி வம்படியாய் வேறெங்கோ வேடிக்கை பார்த்தாப் போலத் தெரிகிறது. அவனுக்கு சந்தேகம் வருகிறது.
விறுவிறுவென்று நடக்கிறான். ஓரக் கண்ணால் பார்க்கிறான். அவனும் இவன் கூடவே வருகிறான். சட்டென நிற்கிறான் ராமசாமி. அவனும் நிற்கிறான். ராமசாமிக்கு பயமாய் இருக்கிறது.
திலகாவின் குரல். “திரும்ப உங்களை அந்த வேற யாரோன்னு நினைச்சித் துரத்தப் போறாங்கன்னு எனக்கு பயமா இருக்குங்க…“ வாய்விட்டு “எனக்கும் பயமா இருக்குடி“ என்கிறான். சட்டென இடது பக்கச் சந்தில் திரும்பினாப் போல ஒரு மரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறான்.
சந்தேகமே இல்லை. அந்த ரௌடி இவனைத் தான் பின் தொடர்ந்து வருகிறான். அவன் குழப்பமாய் இவனைத் தேடுகிறான். அவன் அறியாதவாறு திரும்ப பழைய சந்துக்கே வருகிறான் ராமசாமி. ஒரு பஸ் வந்து நிறுத்தத்தில் நிற்கிறது. ஓடிப்போய் ஏறுகிறான் ராமசாமி. அவனை அதற்குள் கண்டு பிடித்துவிட்ட அந்த ரௌடி பஸ்சைப் பார்க்க ஓடி வருகிறான். அதற்குள் பஸ் கிளம்பி விடுகிறது-
ராமசாமி பரபரப்பாக தனது தெருவில் நடக்கிறான். நெஞ்சு வலிக்கிறது. பயமாய் இருக்கிறது. அந்தப் பக்கம் கொஞ்சம் இருட்டாய்க் கிடக்கிறது. திரும்பி சுற்று முற்றும் பார்க்கிறான். யாரும் பின் தொடர்கிறார்களா? இல்லை. தெரு வெறித்துக் கிடக்கிறது.
தூரத்தில் அவன் அடுக்ககம் தெரிகிறது. அதை நோக்கி நடக்கிறான். போய் லிஃப்ட்டை அடைகிறான் ராமசாமி.


அத்தியாயம் 30
கிருஷ்ணா கபே. மாலை நாலரை மணி. கைக் கடிகாரத்தில் மணி பார்த்துக் கொள்கிறான் ராமசாமி. கடையில் கூட்டம் பெரிதாக இல்லை. ராமசாமி காத்திருக்கிறான். சர்வர் வருகிறான். “வாங்க ‘SPONSOR’  சார்“ என வணக்கம் சொல்கிறான். “தனியா வந்திருக்கீங்க இன்னிக்கு?“
“யாரு? ஓ அவனா…“ என சிரிக்கிறான். “நான் நல்லா மாட்டிக்கிட்டேம்ப்பா அவன்கிட்ட…“
“சுமமா கள்ளழுகை சார். சில பிள்ளைங்க தூக்கிக்கச் சொல்லி அம்மாகிட்ட அழுது விரைக்கும். அவ பாட்டுக்குப் போயிட்டால், தானே அழுகையை நிறுத்திரும்.“
“அழற பிள்ளையை அடுத்தாள் இடுப்பில் ஏத்தி விட்டுருவாங்க சில பேர்…“ என்கிறான் ராமசாமி. “அதுதான் பண்ண முடியுமான்னு பார்க்கிறேன்.“
“பிள்ளையாரைப் பிடிச்ச சனி ஆலமரத்தையும் பிடிச்சதாம்னு, ஒரு பிரச்னை ரெண்டு பிரச்னையா ஆயிறப் போகுது சார்…“ என சிரிக்கிறான் சர்வர்.
“பார்க்கலாம்.“
“காபி எடுத்திட்டு வரவா சார்?“
“இன்னொருத்தர் வருவாங்க…“
“அவனா?“
ராமசாமி சிரித்து “இன்னும் ரெண்டு பேர் வருவாங்க“ என்கிறான்.
“சரி“ என்றவன், பக்கத்து மேசைக்கு ஆள் வந்திருக்கிறார்கள், என்று கவனித்து “எனன வேணும் சார்“ என்று போகிறான்.
ராமசாமி காத்திருக்கிறான். கிருஷ்ணா கபேக்கு உள்ளே வருகிறாள் கிருஷ்ணவேணி. வெளியே எங்கும் ராமசாமி நிற்கிறானா என்று பார்த்தபடியே, அவனைத் தேடியபடியே வருகிறாள். அவனைப் பார்த்து விட்டாள். புன்னகை செய்கிறாள். தலையாட்டுகிறான் ராமசாமி.
“சொன்னபடி சரியா வந்திட்டியே. வெரி குட்..“
“நான் வாக்கு குடுத்திட்டால் தவற மாட்டேன் சார்.“
மேசைக்கு நாலு பக்கமுமாக நாற்காலிகள். அதிகம் காபி சாப்பிட வருகிறவர்களுக்காக அந்த அமைப்பில் போடப் பட்டிருக்கிறது. கிருஷ்ணவேணி வந்து அவனுக்கு இடப்பக்கம் உள்ள நாற்காலியில் அமர்கிறாள்.
தலையில் கால் முழம் பூ வைத்திருக்கிறாள். எளிய பருத்திப் புடவை. மஞ்சள் பூசிய முகத்தில் சாந்துப் பொட்டு. ஆர்ப்பரிக்காத கடல் போல இருக்கிறாள் இவள், என நினைத்துக் கொள்கிறான். “ரொம்ப நல்ல பொண்ணு“ என்கிறான் ராமசாமி. அவள் சிரித்தபடி தலையசைத்து “தேங்ஸ் சார்“ என்கிறாள். “உங்க அப்பாவுக்கு எத்தனை குழந்தைகள் கிருஷ்ணவேணி?“
“இன்னொரு தம்பி எனக்கு இருக்கான் சார். பத்தாவது படிக்கிறான்.“
“மெட்ரிக்கா C B S E யா?“
“மெட்ரிக் சார். நல்லா படிக்கிறான். அவனை எப்படியாவது இன்ஜினிரிங் படிக்க வைக்கணும்னு…“
“உங்க அப்பா நினைக்கிறாரா?“
“இல்ல. நான் நினைக்கறேன் சார்.“
“ஓ.“
“அப்பா தெளிவா, எனக்குக் கட்டுப்படி ஆகாதுடா. உன் அக்கா வேற கல்யாணத்துக்கு இருக்கா. உங்க அம்மா வேலைக்கு எங்கயும் போகல்ல. SINGLE EARNING. கல்யாணச் செலவை நான் சமாளிக்கணும். எதோ என்னால முடிஞ்ச அளவு படிக்க வைக்கிறேன்கிறார்.“
“சொல்லு.“
“அவன் அழுதுட்டான். என்னால தாங்க முடியல்ல சார்.“ ராமசாமி தலையாட்டுகிறான். “நான் படிக்க வைக்கறேன்டா“ என அவனை ஆறுதல் படுத்தினேன் சார். “பணத்துக்கும் ஆசைக்கும் என்ன சார் இருக்கு?“
“ஒண்ணும் இல்லை.“
“ஏழையா இருந்தால் பெரிய படிப்புக்கு… ஆசை கூடப் படக் கூடாதா சார்?“
“அப்பிடிப் போடு… கனவு காணுங்கள்ன்றாரு அப்துல் கலாம்.“
“பாத்துக்கலாம்டா. நீ நல்ல மார்க் வாங்கினால் என் முதலாளி கிட்ட கேட்டு கடன் வாங்கி நான் உன்னைப் படிக்க வைக்கறேன்டா…ன்னு சொல்லியிருக்கிறேன். கல்விக் கடன்லாம் இருக்குன்றாங்க…“
“இருக்கு இருக்கு. நாங்களே குடுக்கறோம்…“ என்கிறான் ராமசாமி.
“ஆகா. அப்ப எனக்கு… என் தம்பிக்கு உதவி செய்வீங்களா சார்?“
“செய்வேனா, செய்ய மாட்டேனா… நீயே சொல்லு…“
“செய்வீங்க சார்…“ என நெகிழ்கிறாள். நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறாள். உணர்ச்சி மேலிடும் போதெல்லாம் அவள் நெஞ்சில் கை வைத்துக் கொள்கிறாள் என நினைத்துக் கொள்கிறான் ராமசாமி. “சாரைப் பார்த்தது மூலிகை கால்ல தட்டினாப்ல ஆயிட்டது. ரொம்ப சந்தோஷம் சார்…“ அவள் கண்கள் பனிக்கின்றன. “ஈசி ஈசி“ என சிரிக்கிறான் ராமசாமி.
“நான் என் கதையை உங்க கிட்ட சொல்லிட்டிருக்கேன். போரடிக்கிறேனா சார்?“
“நோ. நெவர். நாட் அட் ஆல்…‘ என்கிறான் ராமசாமி. “என்னடா முன்பின் தெரியாதவன் ஓட்டலுக்கு நம்மைக் கூப்பிடறான்னு இருந்ததா?“
“இல்ல. உங்க பிரியம் எனக்குப் புரிஞ்சது சார். உண்மையான அன்புன்னா எனக்கு என்னன்னு தெரியும்.“
“சூப்பர்.“
“எங்க அப்பாவே கூட அதிகமாச் செலவு கிலவு பண்ண மாட்டார் சார். சாப்பாடுன்னா எப்படியும் ராத்திரி வீடு வந்திருவார். நாலு பேருக்கு இந்தச் சம்பளம். நான் ஒராளா அதைச் செலவழிக்க முடியாதும்பாரு…“
“நல்ல குடும்பம்தான்… அதான் நீங்க இப்பிடி அவர் நிழல்ல சந்தோஷமா வளர்றீங்க“ என்று பாராட்டுகிறான்.
“உன்கூட நான் பேசணும்னு சொன்னேன்… அதுக்காகத் தான் வரச் சொன்னேன். இல்லியா?“
“ஆமா சார்“ என்கிறாள். “நீங்க பேசற விஷயத்துக்கு வர்றதுக்கு முன்னால், நான் ஒரு விஷயம் பேசி… எனக்குத் தேவையானதை வாங்கிக் கிட்டேன்…“ சிரிக்கிறாள் கிருஷ்ணவேணி.
“என்ன அது?“
“தம்பி படிப்புக்கு…“
“அட அது சின்ன விஷயம் வேணி. நான் உன்னை வேணின்னு கூப்பிடலாமா?“
“கூப்பிடுங்க சார். அதுக்கென்ன? அது எங்களுக்கு ரொம்பப் பெரிய விஷயம் சார்.“
“இருக்கட்டும்….“ என்கிறான் ராமசாமி.
“சரி. என்ன விஷயம் சொல்லுங்க சார்.“
“உன்னால யூகிக்க முடியுதா? ANY GUESS?“
“தெரியல. வேற நல்ல வேலையா எனக்கு எதுவும் சொல்ல நினைச்சிருக்கலாம். என்ன படிச்சிருக்கேன்னு கேட்டீங்களே?“
“ஓகோ.“
“ஆபிஸ்ல எப்பிடிச் சொல்றதுன்னு யோசிச்சிருக்கலாம்…“
“YOU ARE VERY PRACTICAL“ என்கிறான் ராமசாமி. “AND TO THE POINT“ என சேர்த்துக் கொள்கிறான். “எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு கிருஷ்ணவேணி…“
“தேங்ஸ் சார்“ என்கிறாள். “என்னை விட உன்னை இன்னொருத்தருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…“ என்று புன்னகை செய்கிறான் ராமசாமி. “என்ன சார் புதிர் போடறீங்க?“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
அப்போது கிருஷ்ணன் கடைக்குள் நுழைகிறான். இருப்பதில் நல்ல உடையை அணிந்து வந்திருக்கிறான். தலையில் தொப்பி. முடிந்தவரை அட்டகாசமாக உற்சாகமாக இருப்பதான பாவனையுடன் “ஹாய்“ என கையாட்டியபடியே உள்ளே வருகிறான்.
“இவனா?“ என முகம் மாறி எழுந்து கொள்ளப் போகிறாள் கிருஷ்ணவேணி. “அட உட்காரும்மா“ என அவளை அமர்த்துகிறான் ராமசாமி.
கிருஷ்ணன் வந்து ராமசாமிக்கு இடது பக்க நாற்காலியில் அமர்கிறான்.
சர்வர் வருகிறான். “மூணு காபி…“ என்கிறான் கிருஷ்ணன். “ஒண்ணுல சர்க்கரை ஜாஸ்தி…“ என்கிறான் உற்சாகமாய்.
“என்ன சர்க்கரை ஜாஸ்தி…. யாருக்கு?“ என்கிறான் ராமசாமி.
“எனக்குதான் சார். இன்னிக்கு எனக்கு மகிழ்ச்சியான நாள்“ என சிரிக்கிறான் கிருஷ்ணன்.
“மண்ணாங்கட்டி“ என்கிறாள் கிருஷ்ணவேணி. “என் நாளையே கெடுத்திட்டியே“ என்கிறாள். “சார் இவனை எங்க பிடிச்சீங்க?“
ராமசாமி சிரித்து “நான் எங்கம்மா பிடிச்சேன்? அவன் தான் என்னைப் பிடிச்சிக்கிட்டான்…“
“அழுது இடுப்பில் ஏறிக்கிட்ட குழந்தை…“ என்றபடியே சர்வர் மூணு கப் காபியை வைக்கிறான். “உங்கிட்ட அவர் கேட்டாராய்யா? உன் வேலை என்ன? காபி தருவது. அதைச் செய். அதை ஒழுங்காச் செய். புரிஞ்சதா? இதுல எது சர்க்கரை ஜாஸ்தி?“ என்கிறான் கிருஷ்ணன்.
“இதுதான். கவுத்தின டபரால சர்க்கரை தூவி யிருக்கு பார். ஓசிக் காபிக்கு உதார் எல்லாம் தேவையா?“ என்றபடி சர்வர் போகிறான். கிருஷ்ணவேணி சிரிக்கிறாள் எகத்தாளமாய். “நீ சிரிச்சால் தீபாவளி…“ என்கிறான் கிருஷ்ணன் மயக்கமாய். “நான் சிரிச்சால் மத்தாப்பு. சீறினால் வெடிகுண்டுடா“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“சூப்பர்“ என்கிறான் ராமசாமி. “மு. மேத்தா சொல்வாரு… நான் காத்திருந்தால் காற்று – புறப்பட்டால் புயல். அதுமாதிரியான அதிரடி இது…“
“தேங்ஸ் சார்“ என ராமசாமி பார்க்கத் திரும்புகிறாள் கிருஷ்ணவேணி. “இவனை எங்க பிடிச்சீங்க?“
“நான் எங்க பிடிச்சிக்கிட்டேன்…“ என்கிறான் ராமசாமி திரும்ப.
“காபி ஆறிரப் போகுது. எடுத்துக்கோ கிருஷ்ணவேணி“ என்கிறான் கிருஷ்ணன்.
“என் வயிறு எரியுதேடா… அதுல ஊத்திக்கிட்டா சரியா இருக்கும்…“
“காபி ஆறிரப் போகுது. பாம்பு சீறிரப் போகுது… எப்பிடி ரைமிங்“ என்கிறான் கிருஷ்ணன்.
ராமசாமி சிரித்தபடி காபியை உறிஞ்சுகிறான். “ஏன் சார் இதுக்குதான் என்னை வரச் சொன்னீங்களா?“
“ரொம்ப தேங்ஸ் சார்“ என்கிறான் கிருஷ்ணன்.
“இந்தாளு ஒரு ஃபிராடு சார்… டம்மி பீஸ்.“
“எனக்குத் தெரியாமல் போச்சே. முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“எனக்கு என்ன சார் குறைச்சல்?“ என காலரை நிமிர்த்துகிறான் கிருஷ்ணன். “அழகு இல்லியா?“
“இல்ல“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“அறிவு இல்லியா?“
“இல்லவே இல்ல…“ என்கிறாள் ஆத்திரமாய். “சார் இவன்கிட்டச் சொல்லி வையுங்க. எப்ப பாரு என் பின்னாலயே இளிச்சிக்கிட்டே வரான் சார்…“
“நான் பின்னாலதான் வரேன்…“ என்கிறான் கிருஷ்ணன். “ஹி ஹி இளிப்பு தன்னால வருது.“
“எனக்கு இளிப்பு வரல்ல. ஆத்திரம்தான் வருது.“
“நீதான் எனக்குப் பொருத்தமான ஜோடி கிருஷ்ணவேணி… ஏன் சார் அப்பிடித்தானே?“
“ஒண்ணு ஜாடி. ஒண்ணு மூடி… பொருத்தம் தான்“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி.
“என்ன சார் இப்பிடிச் சொல்றீங்க?“ என்கிறாள் கிருஷ்ணவேணி. காபி டம்ளரைக் கீழே நங்கென்று வைக்கிறாள். “இந்த ஆள் கிட்ட என்ன இருக்குன்னு இவனை நான் காதலிக்கணும்ன்றான்…“
“நல்ல பையன்ம்மா. அப்பாவி. வாயில விரல் விட்டா கடிக்கக் கூடத் தெரியாத குழந்தை மனசு அவனுக்கு.“
“குழந்தைன்னால் லாலி பாப் வாங்கிக் குடுங்க. இவன்… கல்யாணம்ன்றான்.“
“பால்ய விவாகம் தப்புன்னு அரசாங்கத்தில் சட்டமே இருக்கு கிருஷ்ணா“ என்று அவன் பக்கம் திரும்புகிறான் ராமசாமி. “காபி எப்பிடி கிருஷ்ணவேணி?“ என அவள் பக்கம் திரும்புகிறான்.
“ஓ.கே.“
“நீ கிருஷ்ணா கபே காபியின் ரசிகை. அவனும்…“ என திரும்பி கிருஷ்ணனைப் பார்க்கிறான். “ஆகா என்ன பொருத்தம்…“ என்கிறான் கிருஷ்ணன்.
“அதுக்காகத்தான் இவ்ள நேரம் இருந்தேன்னு பார்த்தீங்களா?“ என்று ராமசாமியிடம் திரும்புகிறாள். “இந்தாளுக்கு வெட்கமே கிடையாது சார். உன்னை எனக்குப் பிடிக்கலன்னு முகத்தில் அடிச்சாப்ல சொல்லிட்டேன்… பல தடவை சொல்லிட்டேன். அப்ப கூட என் பின்னாலயே சுத்தறான் சார். இன்னிக்கு உங்க முன்னால இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு தான் சார் நான் பார்க்கிறேன்..“
“அப்டில்லாம் கோபமா பேசக் கூடாது. கிருஷ்ணன் கிட்ட சிகெரெட்னோ மதுன்னோ எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை…“ என்கிறான் ராமசாமி.
“புண்ணியவதி. அப்பிடி எந்தப் பழக்கத்தையும் உண்டாக்கி விட்டுறாதே…“ என்கிறான் கிருஷ்ணன்.
“இதுதான் இவர்கிட்ட. எதுக்கெடுத்தாலும் மிரட்டறது. இப்பிடியே தற்கொலை அது இதுன்னு மிரட்டறார் சார்.“
“நீ மறுத்தால், எனை வெறுத்தால்… எனக்கு அது தான் ஏமாற்றம். அதுக்கு இதுதான் முடிவு. இதில் மாற்றம் இல்லை“ என்கிறான் கிருஷ்ணன்.
“ரைமிங்கா?“
“ஆமாம் சார்“ என சிரிக்கிறான் கிருஷ்ணன். “தற்கொலை. போய்த் தொலை… அது கூட ரைமிங் தான்…‘ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“இதுவரை எத்தனை தரம் இப்பிடி உன்னை மிரட்டினான்?“
“ஒருதடவை என்னை வழி மறிச்சார். ஒரு கையில் தாலிக் கயிறு. அடுத்த கையில் தாம்புக் கயிறு… இதுன்னா உனக்குன்னு தாலிக் கயிறைக் காட்டறார். நீ மறுத்தால்… இது, தாம்புக் கயிறு… இது எனக்கு…ன்னு என்னை மிரட்டறார்.“
ராமசாமி சிரிக்கிறான். “நீ என்ன பண்ணினே?“
“சரி. இது எனக்குன்னு… நான் தாம்புக் கயிறை வாங்கிக் கிட்டேன்…“.
“பேசாமல் இவனைக் கல்யாணம் பண்ணிக்கோ… ரெண்டும் ஒண்ணுதான்.“ ராமசாமி சிரிக்கிறான். “ரெண்டு பேருமே விட்டுக் குடுக்கறாப்ல இல்லை.“
“சார். இவரை நம்பாதீங்க. உங்களுக்கு வேற வேலை இருந்தால் பாருங்க. இந்தாளை நான் சமாளிச்சிப்பேன்…“ எழுந்து கொள்கிறாள். “அட உட்காரும்மா“ என அவளை அமர்த்துகிறான் ராமசாமி. “பேசாமல் அவளை மறந்துரு கிருஷ்ணா. அவள் தான் தெளிவா சொல்லிட்டாளே?“
சட்டென அழுகை பொங்க எழுந்து கொள்கிறான் கிருஷ்ணன். “எனக்கு தற்கொலை தவிர வேற வழி இல்லை.“
“பைல பேரு  PHOTO லாம் எடுத்து வெச்சிருக்கியா கிருஷ்ணா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“என்னது?“
“நாளைக்குப் பேப்பர்ல நியூஸ் போடணுமே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“ஓ அதுவா? இருக்கு சார். எப்பவுமே தயாரா அது இருக்கும் சார்.“
“எப்பவுமே சாகத் தயாரா இருக்கே. வாழத் தயாரா இருக்கக் கூடாதா கிருஷ்ணா?“
“ஒரு தடவை இவர் தற்கொலை பண்ணிக்கறதுக்குள்ள பத்து பேரை சாவடிச்சிருவார்…“ என்கிறாள் கிருஷ்ணவேணி.
“கொஞ்சம் டைம் குடு கிருஷ்ணா… அப்பிடியே விரைப்பா நின்னால் எப்பிடி?“ என்கிறான் ராமசாமி.
“இந்தாளு சாகாது சார். நமக்கு தான் வேலை கெட்டுப் போகும். நான் கிளம்பறேன் சார். உங்களைப் பாத்ததுல சந்தோஷம்“ என்கிறாள்.
“என்னைப் பாத்ததுல?“ என இளிக்கிறான் கிருஷ்ணன். “சீச்சீ“ என தலையை உலுக்கிக் கொண்டு அவள் போகிறாள். “எனக்கு நேரம் ஆயிட்டது சார். முதலாளி திட்டுவார்…“
“சாரி.“
“பரவால்ல“ என்றுவிட்டு அவள் போகிறாள். அவள் தாண்டிச் செல்கையில் கிருஷ்ணன் மெல்ல அவளைப் பார்க்க ஈர்க்கப் பட்டாப் போல சரிகிறான். விலுக்கென்று நொடித்தபடி அவள் போகிறாள். “கழுத்து சுளுக்கிக்கப் போகுதுடி“ என சிரிக்கிறான் கிருஷ்ணன்.
அவள் போய்விட்டாள். அவள் எழுந்து போன நாற்காலியில் ஒரு சிறு மல்லிகைப் பூ. உதிர்ந்து கிடக்கிறது. “ஆகா“ என எழுந்து போய் அதை கிருஷணன் கையில் எடுத்து முகர்கிறான். திரும்பி “கிருஷ்ணவேணி வாசனை“ என்கிறான்.
“ரொம்ப பித்து பிடிச்சி அலையிறே கிருஷ்ணா…“
“ஆமா சார்“ என இளிக்கிறான். “ஆனால்…“ என நிறுத்துகிறான் ராமசாமி. அவன் முகம் மாறுகிறது. “ஏன் சார்?“
“அவ எத்தனை பொறுப்பா இருக்கா. வீடு பத்தி, அப்பா பத்தி அவளுக்கு எத்தனை ஒட்டுதல். தம்பி மேல எத்தனை கரிசனம்…“
கிருஷ்ணன் அவனைப் பார்க்கிறான். “அதுல எதுவுமே உன்கிட்ட இல்லையே? அவளுக்கு உன்னை எப்பிடிப் பிடிக்கும் கிருஷ்ணா?“
“சார். என்ன சார் இப்பிடிச் சொல்றீங்க? நான் உங்களைத் தான் சார் நம்பி யிருக்கேன்…“
“அவள் உன்னை நம்பலியே கிருஷ்ணா?“ அவன் முகம் அழுகிறாப் போல மாறுகிறது. திரும்ப எழுந்து கொள்ளப் போனவனை அமர்த்துகிறான். “இங்க பாரு. அவள் உன்கிட்ட பிரியமா இல்லை… அப்டின்னும் சொல்ல முடியாது.“
“எதை வெச்சிச் சொல்றீங்க?“ என்கிறான் சிரிப்புடன்.
“லேசா அவள் மனசில் ஒரு மாற்றம் வந்திருக்கறா மாதிரித் தெரியுது…“
“அப்படியா சார்?“
“கவனிச்சியா? வந்த வேகத்துல அவன் இவன்னு ஆரம்பிச்சாள் கோபமா. தன்னைப் போல அவர்னு மாத்திக்கிட்டா. கோபமும் மெல்ல அடங்கினா மாதிரித் தெரிஞ்சது…“
“அப்பிடியா சார்? சொல்லுங்க சொல்லுங்க.“
“ஆனால் நீ அவசரப் படக் கூடாது கிருஷ்ணா…“
“இனிமே என்ன சார், எதுக்கு சார் காத்திருக்கணும்? ஒரே வாரம் சார். அதுக்குள்ள அவள் வந்து, அவளே வந்து  I LOVE YOU சொல்லணும் சார்.“
“அது நடக்காது கிருஷ்ணா.“
“நடக்கணும் சார்“ என்கிறான் அழுத்தமாய். “அதுக்கு…“ என அவன் ராமசமியின் கையைப் பிடித்துக் கொள்கிறான். “உங்களைத் தான் நான் நம்பியிருக்கிறேன்…“
“எனக்கு தலை சுத்துது கிருஷ்ணா.“
“ஒரு வாரம் சார்…“ என எழுந்து கொள்கிறான் கிருஷ்ணன்.
“இல்லாட்டி?“
“திரும்ப நீங்க என்னைப் பார்க்க மாட்டீங்க. நானும் வந்து உங்களைப் பார்க்க மாட்டேன்…“
“உட்காரு கிருஷ்ணா…“
“நான் வரேன் சார்“ என எழுந்து போகிறான் கிருஷ்ணன். சர்வர் பில் கொண்டு வருகிறான். “மோசமான குதிரை சார இவன்.“
“அப்பிடின்னா?“
“கொள்ளுன்னா வாயைத் திறக்கும். கடிவாளம்னா கப்புனு மூடிக்கும்…“ என சிரிக்கிறான் சர்வர். “பில் நான் எடுத்திட்டு வர்றதைப் பாத்திட்டு எழுந்து போகிறான் சார்.“
*
SINGLE EPISODES AVAILABLE AT

vasikarapoikal.blogspot.com

No comments:

Post a Comment